Thursday, September 16, 2010

குறிவகைக்கப்படுகின்ற பொருளாதார அபிவிருத்தியும் இலங்கை எதிர்நோக்கிநிற்கின்ற சவால்களும்

                         ஆக்கம் :அருண் ஆரோக்கியநாதர் 


பொருளாதார அபிவிருத்தியே போருக்குப்பின்னான இலங்கையின் மிகமுக்கியமான எதிர்பார்ப்பாக இருக்கின்றது

தற்போது 42 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அதாவது அண்ணளவாக இலங்கை ரூபாவில் 4 லட்சத்து 20 ஆயிரம் கோடிகளாக காணப்படும் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக அரசாங்கம் கூறிவருகின்றது.

இலங்கையில் இருந்து வறுமையை இல்லாமல் செய்வதே அரசாங்கம் கடைப்பிடிக்கின்ற பொருளாதாரக் கொள்கைகளின் முக்கியமான நோக்கமாக காணப்படுவதாகவும் வறுமை நிலையைக் குறைப்பதனை குறியாகக்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருக்கின்றார்

2007ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 15வீதமாக காணப்பட்ட இலங்கையின் வறுமை வீதமானமான தற்போது வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் தமது அண்மைய மதிப்பீடுகளுக்கு அமைவாக அது 9 முதல் 10வீதத்திற்கிடையே காணப்படவேண்டும் எனவும் அலரி மாளிகையில் கடந்த வாரம் இடம்பெற்ற முன்னணி வர்த்தகப் பிரமுகர்களுடனான சந்திப்பின் போது சுட்டிக்காட்டியிருந்த மத்திய வங்கியின் ஆளுநர் இந்த இலக்கங்கள் தொடர்பாக இன்னமும் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவித்திருந்தார் .

இலங்கையர்களின் ஆண்டுக்கான தலா வருமானத்தை அடுத்துவரும் ஆறு ஆண்டுகாலப்பகுதியில் இரண்டுமடங்காக அதாவது 2016ம் ஆண்டளவில் 4000; அமெரிக்க டொலர்களாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் எதிர்பார்ப்புக்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அஜித் நிவாட் கப்ரால் இதற்கு முதலீடுகள் கணிசமான அளவிற்கு அதிகரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்தமை 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளமையோடு காணப்படுகின்ற முன்னெப்போதுமில்லாத அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியன முதலீட்டாளர்கள் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான நல்லெண்ண  ஊந்துதலை வழங்கும் எனவும அவர் கருத்துவெளியிட்டிருக்கின்றார்.
யுத்தம் நிறைவடைந்து ஒருவருடங்களுக்கும் அதிகமான காலப்பகுதி கடந்துள்ள நிலையிலும் இலங்கை எதிர்பார்த்த அளவிலான பாரிய முதலீடுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதை மத்திய வங்கியின் ஆளுநரின் கருத்துக்கள் கோடிட்டுக்காட்டிநிற்கின்றன

எதுவுமே தானாக அதன்பாட்டிற்கு இடம்பெறமாட்டாது இலங்கையில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் மாறவேண்டும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது ஆனால் மெதுவாகவும் உறுதியாகவும் அந்த இலக்கை அடைவோம் மாற்றங்கள் விரைவில் உணரப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார் . இது யதார்த்த நிலையைப்பிரதிபலிக்கின்ற கூற்றாகவும் அமைந்துநிற்கின்றது

யுத்தத்தின் பின்னர் இலங்கை எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கவில்லை என்பதை கடந்தவாரத்தில் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்த நாட்டின் முன்னணி வர்த்தகர்கள் சிலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்

'யுத்தம் நிறைவுபெற்று 15மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இலங்கையில் கணிசமான அளவிற்கு குறிப்பிட்டுக்கூறும் வகையிலான தனியார் துறை முதலீடுகள் இடம்பெறாமையானது அதிர்ச்சியைத்தருவதாகவும் குழப்பமானதாகவும் தோன்றுகின்றது ' என இலங்கையின் முதற்தர வர்த்தகக்குழுமமாக கணிக்கப்படுகின்ற ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் தலைவர் சுசந்த ரத்னாயக்க குறிப்பிட்டிருந்தார் .

 நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வம்கொள்ளும் வகையில் அரச மற்றும் தனியார் துறைகள் கூட்டிணைந்த நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும் முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள புலம்பெயர்ந்த மக்களுக்காக அரசாங்கம் முதலீட்டுத்திட்டமொன்றையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்திருந்தார்

'கடந்த வருடத்தில் முன்னெப்போதுமில்லாதவகையில் இலங்கையை முதலீட்டாளர்களுக்கு நெருக்கமான நாடாக இலங்கை வர்த்தக சம்மேளனமானது ஊக்குவிப்பு பிரசார நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது ஆனபோதிலும் முதலீட்டாளர்களைக் கவர்வதற்கு அதுமாத்திரமே போதுமானதாக அமையமாட்டாது முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாக்கப்படவேண்டும்' என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அருண ஏக்கநாயக்க சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கை எதிர்பார்த்த அளவிலான தனியார் துறை முதலீடுகள் கிடைக்கவில்லை என்பதை சர்வதேச நாணய நிதியமும் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது

கடந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் 250மில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட வெளிநாட்டு நேரடி முதலீடுகள் இவ்வாண்டின் முதல் ஆறுமாதகாலப்பகுதியில் 208மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சிகண்டிருக்கின்றன.

இலங்கைக்கு போதுமான முதலீகள் கிடைக்கப்பெறாவிடின் தற்போதுள்ள பொருளாதார வளர்ச்சி வேகத்தை 7வீதத்திற்கு மேலாக அதிகரிப்பது தலா வருமானத்தை இரட்டிப்பாக்குவது போன்ற அரசாங்கத்தின் இலக்குகள் எதுவுமே சாத்தியமற்றது என்பதையும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது

எதிர்பார்த்த முதலீடுகள் கிடைக்கப்பெறாமை தொடர்பாக இவ்வாறாக அரசாங்கம் உட்பட பல்வேறு தரப்புக்களும் கரிசனைகளை வெளிப்படுத்திவருகின்ற நிலையில் இலங்கையின் அடுத்த வரவுசெலவுத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மக்களும் ஊடகங்களும் அரசியல் யாப்பின் 18வது திருத்தம் குறித்த பேச்சுக்களை படிப்படியாக மறந்து இன்னமும் சிலவாரங்களில் நவம்பர் மாதத்தில் சமர்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்ற 2011ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் குறித்து இனிவரும் நாட்களில் தம் பார்வையை அதிகமாக செலுத்தப்போவதை எதிர்பார்க்க முடியும் .

2011ம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக தமது திட்டங்களையும் யோசனைகளையும் இம்மாதம் 30மதிகதி முன்வைக்குமாறு தொழில்சார் நிபுணர்கள் கல்விமான்கள் கலைஞர்கள் ஊடகத்துறையினர் மற்றும் பொதுமக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது .
இது தொடர்பாக அழைப்புவிடுகின்ற விளம்பரமொன்றும் சில தினங்களுக்கு முன்பாக பத்திரிகையொன்றில் வெளியாகியிருந்தது

இலங்கையின் அடுத்த வரவுசெலவுத்திட்டத்திற்கான யோசனைகளை அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் இலங்கையிலுள்ள முன்னணி பொருளாதார அறிஞர்களில் ஒருவராகவும்; அமெரிக்க ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தின் வருகைதரு விரிவுரையாளராவும் பருத்தித்துறை ஆய்வகத்தின் பிரதான ஆய்வாளராகவும் திகழ்கின்ற கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தனிடம் இலங்கையின் பொருளாதாரம் தொடர்பாக விளங்கக்களைக் கோரியிருந்தேன்.

கேள்வி :இலங்கைக்கும் கிடைக்கும் வெளிநாட்டு முதலீடுகள் குறைவடைந்திருக்கின்றன இதற்கும் இலங்கை அரசாங்கத்தின் தற்போதை பொருளாதாரக் கொள்கைகள் தொடர்புகள் உள்ளனவா ?

பதில் இந்த அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் 2006ம் ஆண்டிலிருந்து கூடியளவில் தேசியவாதத்தைக் கொண்டதாக இருக்கின்றது இராணுவநடவடிக்கைகளை தேசியவாத ரீதியில் மேற்கொண்டதுபோல் பொருளாதார அணுகுமுறைகளில் கூட ஒரு பழமைவாத தேசியவாத கொள்கைகளைத்தான் முன்னுரிமைப்படுத்திக்கொண்டுவந்தனர்

.தற்போது சற்றுத்தளர்த்தப்பட்டிருந்தாலும் கூட ஒட்டுமொத்த அளவில் கொள்கைகள் தனியார் துறைக்கு வாய்ப்பானதாகவோ அன்றேல் தனியார் துறைமுதலீடுகளை அதிகரிக்ககூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்தவில்லை ஆகவே அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்தோ உள்ளுர் தனியார் துறையினரிடம் இருந்தோ முதலீடுகளைப் பெறவேண்டுமாயின் கொள்கைரீதியாக பல மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும்



































'ஒருபுறத்தில் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்தும் முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது ஆனால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனப்பார்க்கின்றபோது உண்மையில் இல்லை என்றே கூறவேண்டும்' -கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்





கேள்வி:இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புதவற்கு புலம்பெயர்ந்த மக்களின் பங்களிப்புக்கள் அவசியம் என்பது தற்போது வெளியாகிவரும் கருத்துக்களில் இருந்து வலுவாக உணரப்படுகின்றது புலம்பெயர் மக்களிடம் இருந்து முதலீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் அதேபோன்று அரசாஙகத்தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருக்கின்றன இருந்தும் பெறுபேறுகள் எதிர்மறையாக காணப்படுகின்றதே ?

பதில் ஒருபுறத்தில் புலம் பெயர் தமிழர்களிடமிருந்தும் புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்தும் முதலீடுகளை அரசாங்கம் எதிர்பார்க்கின்றது ஆனால் அதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதா எனப்பார்க்கின்றபோது உண்மையில் இல்லை என்றே கூறவேண்டும் உதாரணத்திற்கு இன்றும் வவுனியாவிற்கு மேலே வடக்கு நோக்கி செல்வதாயின் எந்தவொரு வெளிநாட்டவராக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிதேவை புலம்பெயர்ந்த தமிழராக இருக்கலாம் வெளிநாட்டில் பிறந்தவராக இருக்கலாம் வெளிநாட்டு கடவுச்சீட்டைக்கொண்டவர்களுக்கு இது அவசியமாகவுள்ளது

 இதுவொரு முக்கிய விடயமாக இருக்கின்றது போர்நிறுத்த காலப்பகுதியில் இந்த விதிமுறை இருக்கவில்லை ஆகவே அதிகமான மக்கள் வந்துபோகக்கூடியதாக இருந்தது இப்போதும் வந்துபோகின்றனர் என்பதை மறுப்பதற்கில்லை ஆனால் கட்டுப்பாடு இருக்கின்றது சிலருக்கு அனுமதி கொடுத்தாலும் ஆகாய வழியாகத்தான் போகவேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றாhர்கள் இலங்கை விமானப்படையின் சிறிய ரக விமானங்களில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்றுவருவதற்கு கிட்டத்தட்ட 19000ருபா செலவாகின்றது ஒருவருக்கு இவ்வளவுதொகையெனும் போது ஒரு குடும்பமாக பார்க்கையில் அதுவொரு பெரிய தொகையாக இருக்கின்றது இவ்வாறான பாதுகாப்புக்கெடுபிடிகள் இன்னமும் இருக்கின்றது .
வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் உயர்பாதுகாப்பு வலயங்கள் இருக்கின்றபோதும் வடக்கே குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இராணுவ சோதனைச் சாவடிகள் பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கின்றன அத்தோடு போக்குவரத்து தொடர்பாகவன்றி வாகனங்களையோ நபர்களையோ வழிமறிப்பதும் பெருமளவில் குறைந்துள்ளது இவைகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் வேறு சில விடயங்களைக் குறிப்பிடவேண்டும் போர்நிறுத்தக்காலப்பகுதியில் மக்களிடமிருந்தோ ஏ 9 பாதையூடாகச்சென்ற வர்த்தகர்களிடமிருந்தோ அறவிட்டார்களோ அதே அளவிற்கு இல்;லாவிடினும் தற்போது யாழ்ப்பாணத்தை தளமாகக்கொண்ட அமைப்பொன்று மக்களிடமிருந்து வரிகளை அறவிட்டு வருகின்றது  போர்நிறுத்தகாலத்தில் வரிகளைவிதித்தவர்கள் வரிமூலமாக ஈட்டியதில் 10வீதமானதையே தற்போது வரிகளை அறவிடுகின்ற அமைப்பு பெறக்கூடும் .அது குறைவாகக் காணப்பட்டபோதிலும் அவ்வாறான வரிவிதிப்புக்கள் மக்களுக்கு சில கெடுபிடிகளை ஏற்படுத்தியுள்ளது வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இதை அரசாங்கம் தெரிந்தோ தெரியாமலோ விட்டுக்கொடுத்துவருகின்றது ஆனால் மக்களுக்கு தெரிகின்ற இவ்வாறான செய்திகள் வெளிநாடுகளுக்கு போகும் ஆகவே இ;வ்வாறான ஒரு சூழ்நிலையில் தற்போதெல்லாம் சுமூகமான நிலை இருக்கின்றது சுதந்திரமாக வர்த்தகர்களோ வியாபாரிகளோ செயற்படலாம் என்பதை மக்கள் பூரணமாக நம்புவதற்கு தயாரில்லை நடைமுறையில் கெடுபிடிகள் இருக்கின்றன தற்போதில்லாத போதும் வருடத்தின் ஆரம்பப்பகுதியில் சிறுவர்கள் சிலர் பணம் பெறுவதற்காக கடத்தப்பட்டனர் இதற்கெல்லாம் அரசியல் தொடர்புகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. ;

அமைப்புக்களின் தொல்லைகள் வன்னியில் இல்லாவிடினும் இராணுவம் நிலைகொண்டிருக்கின்றது கூடுதலான கட்டுப்பாடான பிரதேசமாக இருக்கின்றது உட்கட்டமைப்பு வசதிகள் இன்னமும் பூரணமாக மேற்கொள்ளப்படவில்லை சில பாதுகாப்பு கெடுபிடிகள் தொடர்ந்துகொண்டுதான் வருகின்றது வன்னியில் ஏ9வீதியின் இருமருங்கிலும் இரர்ணுவத்தினரால் நடத்தப்படும் தேநீர் கடைகளுக்கோ சிகை அலங்காரநிலையங்களோ குறைந்தபாடிவில்லை ஆனாலும் ஓரளவிற்கு திரும்பப்போனவர்கள் அதாவது  தற்போது மீளக்குடியேறிய மக்கள் சில தேநீர்கடைகளை வைத்துவருகின்றனர் இராணுவத்தினரினால் நடத்தப்படும் நிலையங்கள் ஆரம்பத்தில் அவர்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்ற தற்காலிக செயற்பாடாகவே தோன்றியது ஆனால் யுத்தம் நிறைவடைந்து இவ்வளவு காலம் கடந்துவிட்டநிலையிலும் இதுதொடர்பில் நடவடிக்கைகளை எடுப்பதாக தெரியவில்லை இவற்றை கொள்கைவகுப்போர் கணக்கெடுப்பதாகவும் தெரியவில்லை இது எங்கேசென்று முடியுமோ தெரியவி;ல்லை இவையெல்லாம் சின்ன விடயங்கள் இரவோடிரவாகவே மாற்றியமைக்ககூடிய விடயங்கள் இவற்றைத்தான் சுசந்த ரட்ணாயக்க போன்றவர்கள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டவேண்டும்

இவையெல்லாம் சின்ன விடயங்கள் இரவோடிரவாகவே மாற்றியமைக்ககூடிய விடயங்கள்

வெளிநாட்டு வர்த்தககர்களை ஒருபுறம் வைத்துவிட்டு உள்நாட்டு நிலைமையைப்பாருங்கள் அரசாங்கம் எவ்வளவு கேட்டுக்கொண்டபோதிலும உள்நாட்டில் உள்ள வர்த்தகர்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டபோதும் குறிப்பிடும் படியாக முதலீடுகளை மேற்கொள்வதைக் காணமுடியாதுள்ளது இதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக நடக்கும் என்று கூறிக்கொண்டுபோகின்றோம் ஆனால் யுத்தம் நிறைவடைந்து ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளாகின்றது
ஏ 9வீதி இவ்வருடத்தில் 24மணிநேரமும் திறக்கப்பட்டத்தைத்தவிர  குறிப்பிடும்படியாக பெருமளவுவிடயங்கள் நடக்கவில்லை என்று தான் கூறவேண்டும் மக்கள் எந்தநேரமும் போய்வரக்கூடியதாக இருப்பது பெரிய காரியம் ஆனால் அதைவிட மற்ற புறநிலைச் சூழ்நிலைகளை சாதகமாக மேற்கொள்ளவேண்டும் அரசாங்கப்படைகளைத் தவிர ஏனைய ஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தாதவரையிலும் வடக்கிற்கு மக்கள் சுதந்திரமாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி சாதாரண நடைமுறைகளின் கீழ் சாதாரண மக்களோ வர்த்தகர்களோ செல்ல இடமளிக்கப்படும் வரையிலும் நிலைமை சுமூகமாக வருவதற்குரிய சாத்தியக்கூறுகள் தென்படவில்லை

கேள்வி: அப்படியானால் புலம்பெயர்ந்தவர்கள் நோக்கி தொடர்ச்சியாக அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றதே இதுபற்றி எப்படிப்பார்க்கின்றீர்கள் ?

பதில்:
அழைப்பு யாரும் விடுக்கலாம் ஆனால் அதற்கு சட்டரீதியானதொரு உத்தரவாதமில்லை வருகின்றவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்கின்ற சூழ்நிலைகள் காணப்படவில்லை உதாரணமாக கூறுவதென்றால் இரண்டுகிழமைக்கு முன்னர் மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர் ஒருவர் காணமல் போயிருந்தார்
அதைக்கண்டுபிடிக்கமுடியாதவர்கள் எப்படி என்னைப்போன்ற உங்களைப்போன்ற சாதாரண குடிமக்களுக்கு பாதுகாப்பு தரமுடியும் முதலீட்டாளர்கள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க முடியும் என்பதை எப்படி நம்பமுடியும் இவ்வாறான நம்பிக்கையூட்டும் விடயங்களில் அரசாங்கம் கவனத்தை செலுத்தவேண்டும்
கேள்வி: வடக்கு கிழக்கு பிரச்சனை விடயத்தில் ஒரு அரசியல்தீர்வு முன்வைக்கப்படாதவிடத்து புலம்பெயர்ந்த மக்கள் இங்கு முதலீடுகளை மேற்கொள்ள முன்வரப்போவதில்லை என புலம்பெயர்ந்த மக்களுடனான சந்திப்பின்போது உணர்ந்துகொண்டதாக ஐக்கியதேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டி எம் சுவாமிநாதன் அண்மையில் குறிப்பிட்டிருந்தார் இதில் எந்தளவிற்கு உண்மையுள்ளதாக நீங்கள் காண்கின்றீர்கள் ?

பதில்
இதுவும் ஒரு காரணம் அதாவது எந்தவொரு முதலீட்டாளரும் தூரநோக்கில் தான் பார்ப்பார்கள் குறுகிய லாபத்திற்காக நாட்டில் முதலீடுசெய்பவர்கள் கூடுதலாக பங்குச்சந்தையில் தான் முதலீடுசெய்வார்கள் ஆனால் வெளிநாட்டு நேரடி முதலீடு என்ற வகையில் நிரந்தரமாக ஒரு தொழிற்சாலையை ஆரம்பிப்பதோ பெரிய ஹோட்டலை ஆரம்பிப்பதோ நீண்டகால முதலீடு நீண்டகால முதலீடுகளைக் கவர்வதாயின் அவர் கூறிய கருத்து முற்றிலும் சரியானது அப்படியானவர்கள் ஒரு நீண்ட நிலையான சமாதானம் இருக்ககூடிய ஒரு சூழ்நிலையைத்தான் எதிர்பார்ப்பார்கள் அதற்குரிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றதா என்று தான் பார்ப்பார்கள் .பாராளுமன்றத்தில் தங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றது என்று அரசாங்கம் கூறலாம்; .அரசியல் ஸ்திரத்தன்மை இருப்பதாக கூறலாம் ஆனால் சிறுபான்மை இனம் அப்படி நினைக்கவில்லை நம்முடைய அரசியல் ஸ்திரத்தன்மை என்பது வேறானதாகவுள்ளது.

மனக்கசப்புக்களை அகற்றக்கூடிய விதமாக அரசாங்கம் திட்டங்களை வைத்திருக்கின்றதா 30வருடங்களாக தமிழ் மக்கள் அனுபவித்த துயரங்கள் அதற்கு முன்பாக சுதந்திரம் பெற்றதில் இருந்து புறக்கணிக்கப்பட்டு வந்ததை நிவர்த்திசெய்யக்கூடிய ஏதாவது திட்டங்களை அரசாங்கம் முன்மொழிகின்றதா என்பதைப்பார்த்துத்தான் அவர்கள் செயற்படுவார்கள் இந்த விடயத்தில் அவர் கூறியது முற்றிலும் உண்மையானது புலம்பெயர்ந்த வெளிநாட்டவர்களின் முதலீடுகளை எதிர்பார்ப்பதாயின் அரசாங்கம் வேறொன்றையும் செய்யவேண்டியதில்லை 13வது திருத்தச்சட்டத்தையே முற்றுமுழுதாக நேர்மையாக நடைமுறைப்படுத்தினாலே போதும் ஏற்கனவே அது சட்டத்தில் இருக்கின்றது மனதார உள்ளார விரும்பினால் ஜனாதிபதியோ அரசாங்கமோ இதை இரவோடிரவாக நடைமுறைப்படுத்தலாம் அதேயொரு பெரும் நம்பிக்கையூட்டும் விடயமாக இருக்கும் ஆனால் நடப்பது அதற்கு புறம்பானதாகத்தான் இருக்கின்றது

கேள்வி: மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் வகையில் தான் தென் ஆபிரிக்காவில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவைப் பின்பற்றி இலங்கையிலும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது இது வெற்றியளிக்கும் என்பது தொடர்பில் உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?

பதில்
இல்லை முற்றிலும் இல்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து மற்றும் மக்களின் கருத்துக்கூட எனக்குத்தெரிந்தவரையில் அப்படியான ஒரு எதிர்பார்ப்பும் இல்லை என்பதாகவே உள்ளது இதனை சுயாதீனமான குழுவாக மக்கள் கருதவில்லை இந்தக்குழு ஸ்தாபிக்கப்பட்டதன் சூழ்நிலையை நீங்கள் அறிய வேண்டும்; ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தமக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக குழுவொன்றை நியமனம் செய்ய முற்பட்ட வேளையில் அவசர அவசரமாக நியமித்தது இப்படியான ஒரு குழு உண்மையில் தேவைப்படின் அரசாங்கம் கடந்தவருடமே அதனை நியமித்திருக்கலாம்  அடுத்தாக அந்தக்குழுவில் அங்கம் வகிப்பவர்களின் நம்பகத்தன்மை முற்றிலும் அற்ற ஒரு சூழ்நிலையே இருக்கின்றது எந்தவொரு சாதாரண குடிமகனுக்கும் அந்தக்குழு மீது நம்பிக்கை கிடையாது அந்தக்குழுவில் அங்கம் வகிக்கும் ஒரு தனிநபர் கூட நேர்மையான சுதந்திரமான நியாயமுள்ள கொள்கையுடைய உறுப்பினராக எனக்கு தெரியவில்லை இந்தவொரு சூழ்நிலையில் தென் ஆபிரிக்காவில் சேர் டெஸ்மண்ட் டுட்டு அவர்களின் தலைமையில் நடந்த ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் ஆணைக்குழுவிற்கும் மலைக்கும் மடுவிற்கும் போன்ற பாரிய வேற்றுமையுள்ளது இதன் மூலம் பெரிதாக எதுவும் நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை இதெல்லாம் அரசாங்கத்தின் கண்துடைப்பு வேலை வெளிநாட்டு சக்திகள் வெளிநாடுகளை சற்று ஆறுதல் படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட சில நடவடிக்கைகளில் ஒன்றாகவே நான் கருதுகின்றேன்



கேள்வி: வடக்கை நோக்கி படையெடுக்கின்ற வங்கிகளும் நிதிநிறுவனங்களும் மக்கள் வைப்பிடுகின்ற பணத்தை துடைத்துக்கொண்டு தென்பகுதிக்கு கொண்டுவந்துவிடுவதாகவும் இந்த செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் குறித்த பிரதேசத்திலேயே கணிசமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் விதிமுறைகளை வகுக்கவேண்டும் என பிரபல தனியார் வங்கியொன்றின் தலைவரொருவர் சுட்டிக்காட்டியிருப்பது பற்றிய உங்கள் அபிப்பிராயம் என்ன?


பதில்:
சேமிப்பு கணக்கில் வைப்பில் இடுபவர்களுக்கு எந்தவங்கியாக இருந்தாலும் அவர்களுக்குரிய வட்டிகிடைத்தால் பிரச்சனையில்லை அந்தப்பணத்தை அவர்கள் அந்தந்த பிரதேசங்களில் முதலீடு செய்கிறார்களோ அல்லது பிறமாவட்டங்களுக்கு எடுத்துச்சென்று முதலீடு செய்கின்றார்களோ என்பது பணம் வைப்புச்செய்கின்றவர்களின் சேமிப்பவர்களின் கரிசனையாக இருக்காது இருந்தாலும் இதற்குகூட அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்கலாம்
ஆனாலும் இது முழுமையாக அரசாங்கத்தின் தவறல்ல பொதுவாக வடபகுதிமக்கள் குறிப்பாக யாழ்பிரதேச மக்கள் அதிக சேமிப்பு பழக்கம் உடையவர்கள் இலட்சக்கணக்கானவர்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குள் வந்தபோதுகூட அவர்கள் கணிசமான சேமிப்புக்களை தம்முடன் கொண்டுவந்திருந்தனர் . இலங்கைவங்கி மக்கள் வங்கிபோன்றன முகாம்களுக்குள் சென்று அவர்களது வைப்புக்களை பெற்றுக்கொண்டன என்ற தகவல்களையும் நாம் அறிந்துள்ளோம். சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஏனைய சமூகத்தவருடன் ஒப்பிடும் போது முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டும் சமூகத்தினர் அவர்களுக்கு வங்கியில் சேமிப்புக்கணக்கில் அன்றேல் நிலையான வைப்புக்கணக்கில் வைப்பது பாதுகாப்பு அதிகம் என எண்ணுகின்றனர்

ஒருவியாபாரத்தில் அன்றேல் உற்பத்தித்துறையில் முதலீடு செய்து தற்செயலாக லாபம் வராவிட்டால் அந்தப்பணத்தை இழக்க கூடும் என்ற பீதி அல்லது பயம் இருக்கின்றது இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம் வங்கிகளைக்கட்டாயப்படுத்தலாம் சட்டதிட்டங்கள் இருக்கின்றது குறிப்பாக மொத்த சேமிப்பு பணத்தில் ஆகக்குறைந்தது 25வீதத்தையாவது உள்ளுரிலே முதலீட்டாளர்களுக்கோ வர்த்தவர்களுக்கோ கடனாகக் கொடுக்கவேண்டும் என்ற சில நிபந்தனைகளை விதிக்கலாம் காலகாலமாக மத்தியவங்கி அப்படியான சில நிபந்தனைகளை சில கட்டுப்பாடுகளை விதித்துவந்துள்ளது இவ்வாறான நிபந்தனைகளை விதித்தாலும் கூட கடனாகப்பெற்று முதலீடு செய்வதற்குரிய வர்த்தகசமூகமொன்று இருக்கின்றதா என்பது கேள்விக்குரியதாக இருக்கின்றது

 வங்கிகள் தமது லாபத்தையும் கருத்திற்கொள்ளவேண்டும் அரசாங்கம் 25சதவீத சேமிப்பு பணத்தை அந்தப்பிரதேசத்திலேயே முதலீடு செய்யவேண்டும் என்ற நிபந்தனை விதித்தால் அந்த 25சதவீதத்தை கடனாகக் பெறக்கூடிய ஒருசமூகம் இருக்கின்றதா என்பதைப்பார்க்கவேண்டு;ம் அல்லது அந்தவங்கிக்கு அது நட்டமாக போய்விடும் ஆகவே இதை ஒரு சட்டரீதியாகவோ கொள்கைரீதியாகவோ வலியுறுத்தி நடைமுறைக்கிடமுடியாத சற்றே கடினமான விடயமாகவுள்ளது
.
ஆனால் சிலவிடயங்களை சுட்டிக்காட்டவிரும்புகின்றேன் யாழ்ப்பாணத்திற்கான தனியார் விமானசேவையை தற்போது விமானப்படை மாத்திரமே மேற்கொள்கின்றது ஏ9 வீதியாக செல்லும் போது தேநீர்கடைகளையோ சிற்றுண்டிச் சாலைகளையோ சிகையலங்கார நிலையங்களையோ பாதுகாப்பு படையினர் தான் நடத்திவருகின்றனர் இவற்றிலிருந்து பாதுகாப்பு படையினர் சற்றே படிப்படியாக விலகிக்கொண்டுவந்தார்கள் என்றால் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்பதுடன் தனிநபர்கள் அன்றேல் தனியார் நிறுவனங்களை நடத்தக்கூடிய நிலைமையை ஏற்படுத்தலாம்.

இவ்வளவு பாரிய இழப்பை கண்டதொரு பிரதேசத்திற்கு இவை போதுமானதாக இல்லை என்பதே உண்மையானது



கேள்வி : யுத்தத்தின் நிறைவிற்கு பின்னரான வடக்கின் பொருளாதாரத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள் ?அங்கு மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்திகள் தொடர்பாக உங்கள் கருத்து என்ன ?

பதில்:
ஓரளவிற்கு படிப்படியான முன்னேற்றம் நடந்துவருகின்றது மீன்பிடியை எடுத்துக்கொண்டால் பாதுகாப்புக்கெடுபிடிகள் எல்லாம் பெரும்பாலும் அகற்றப்பட்டுள்ளது மயிலிட்டி போன்ற உயர்பாதுகாப்பு வலயப்பிரதேசங்களில் தற்போதும் மீன்பிடிக்க செல்லமுடியாத கடற்பிரதேமாகவுள்ளது ஆனாலும் அதிகமான பிரதேசங்களில் மீனவர்கள் தமது தொழிலை செய்யக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன அவ்வாறே விவசாயிகளுக்கு கொழும்பு விலையிலேயே கிருமிநாசினிகள்  உற்பத்திப்பொருட்களைப் பெற்றுக்கொள்ளமுடிகின்றது ஆகவே அதை வைத்துக்கொண்டு பெருமளவில் விவசாயம் செய்கின்றனர் இதெல்லாம் பாரம்பரியமான தொழில்கள் காலாகாலமாக மக்கள் செய்துவரும் தொழில்கள்

அரசாங்கத்தின் முதலீடுகளை எடுத்துக்கொண்டால் நான் அடிக்கடி அந்தப்பிரதேசங்களுக்கு சென்றுவருகின்ற ஒருவன் என்ற முறையில் வீதி அபிவிருத்தியைத்தவிர வேறொன்றும் பெரிதாக செய்வதாக தெரியவில்லை வீதி அபிவிருத்தி பாரியளவில் நடைபெறுகின்றது யாழ் -பலாலி யாழ் -பருத்தித்துறை யாழ் -காங்கேசன் துறை யாழ் -மானிப்பாய் என குடாநாட்டிலுள்ள் நான்கு பெருந்தெருக்கள் அகலமாக்கப்பட்டு நவீனமயப்படுத்தப்படுகின்றது இது ஆசிய அபிவிருத்தியின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றது வீதி அபிவிருத்திகள் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது முழுமையாக வடக்கில் தான் நடைபெறுகின்றதென கூறுவதற்கில்லை கிழக்குமாகாணம் மீட்கப்பட்டபின்னர் கூட அங்கு பல வீதிகள் பாலங்கள் அமைக்கப்பட்டன வேறும் சில உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்துப்பட்டுவருகின்றது தொலைதொடர்பு விஸ்தரிக்க்பபடுகின்றது ஸ்ரீலங்கா டெலிகொம் கைத்தொலைபேசி சேவைவழங்குநர்கள் தமது சேவைகளை விஸ்தரித்துவருகின்றனர் ஆனால் இவ்வளவு பாரிய இழப்பை கண்டதொரு பிரதேசத்திற்கு இவை போதுமானதாக இல்லை என்பதே உண்மையானது
ஒவ்வொரு சின்ன விடயமும் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடியது முதலீட்டாளர்களை பின்வாங்கச்செய்யக்கூடியதாகும்

கேள்வி: நீங்கள் இவ்வளவு கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டீர்கள் மீண்டுமாக கேட்கின்றேன் தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ள வேண்டிய யதார்த்த பூர்வமான நடவடிக்கைகளைகள் எப்படி அமைய வேண்டும் எனக்கூறுகின்றீர்கள் ?

பதில் : முதலில் ஆட்சி நிர்வாக முறையில் சீர்திருத்தம் வேண்டு;ம் அரசாங்கம் எவ்வளவு பலமாக இருந்தாலும் பயபீதியுள்ள அரசாங்கமாகத்தான் அது செயற்படுகின்றது எதிர்க்கட்சியுடனோ மக்களுடனனோ பாதுகாப்பு சம்பந்தமான விடயங்களிலோ பயபீதியுள்ள அரசாங்கமாகத்தான் செயற்படுகின்றது இது எந்தவொருமுதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டுவதாக இருக்காது பொருளாதாரக் கொள்கைகளை நினைத்த நினைத்தபடி மாற்றிவருகின்றனர் நிலையான உறுதியான கொள்கையொன்று கிடையாது; திடீரென உருளைக்கிழங்கிற்கு முப்பது ரூபா வரி அறவிடுவதாக அறிவிப்பு வந்ததை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.இப்படியான தற்காலிக கொள்கை ரீதியில் தான் இவர்கள் இயங்கிவருகின்றனர் .தூர நோக்கில் அன்றேல் நடுத்தர நோக்கில் பார்க்கும் போது இதுபொருளாதாரத்திற்கு அவ்வளவு சாதகமானதாக இல்லை உருளைக்கிழக்கென்பது ஒருசின்ன விடயம் ஆனால் பெரிய விடயங்களில் கூட எந்தவொரு முதலீட்டாளருக்கும் அரசாங்கத்தின் கொள்கை தொடர்பில் நம்பிக்கை ஏற்படவேண்டும் .பெரும்பாலான வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் இலங்கை விமானநிலையத்தில்  வந்தவுடன் விஸா பெறுகின்ற நடைமுறை இருந்துவருகின்றது இதனை அகற்றப்போவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன .இவ்வாறான ஒரு செய்திவந்தால் கூட உல்லாசப்பயணிகளை இலக்காகக் கொண்ட ஹோட்டல் துறையில் முதலீடுசெய்பவர்கள் பலவிதமாக சிந்திப்பார்கள் தமது முதலீடுகள் பிரயோசனப்படுமா என்று சிந்திப்பார்கள் இவ்வாறான பல உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம்  அரசாங்கம் இப்படியான விடயங்களில் தீர்க்கமாக சிந்தித்து முடிவெடுக்க வேண்டும் முடிவெடுக்கும் முன்பாகவே இப்படியானதொரு செய்தியை பரப்பிவிட்டால் அது முதலீட்டாளர்களை பின்வாங்கச் செய்கின்ற ஒருகாரியமாக அமைந்துவிடும் அரசாங்கம் மேற்கொள்ளுகின்ற ஒவ்வொரு நடவடிக்கையையும் ஊடகங்களுக்கும் மக்களுக்கும் வெளிப்படுத்தும் முன்பாக தீர்க்கரமான வகையில் முடிவுகளை; எடுத்திருக்கவேண்டும் சிந்தனையில்லாமல் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் பல்வேறு பொருளாதார தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது இவ்வாறாக பல உதாரணங்களை எடுத்துக்கொள்ளலாம் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இன்னமும் தனியார் துறையினருக்கோ வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கோ பூரணமாக நம்பகத்தன்மையை ஏற்படுத்தக்கூடியதாக இல்லை அரச தரப்பில் ஒருசாரர் தேசியப்பாதுகாப்பிற்கே முன்னுரிமை என கருத்துக்களை வெளியிடும் போது இன்னொருதரப்பினரோ யுத்தத்தை வென்றாகிவிட்டது இனிமேல் பொருளாதார அபிவிருத்தியே முக்கியம் என கருத்துக்களை வெளியிடுகின்றனர் இவ்வாறான முரண்பட்ட கருத்துக்களை அரசாங்கத்திலுள்ள வௌ;வேறு தரப்பினர் கூறுவதால் பாரிய வகையில் முதலீட்டாளர்களின் நம்பகத்தன்மையை இழக்கின்றனர் இவை மிகவும் உணர்வுபூரணமான விடயங்கள் இவற்றை பற்றி பொதுமக்கள் முன்பாக பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் பொதுவாக பார்க்கையில் மனித உரிமைகள் நிலைமை எவ்வளவோ வெகுவாக முன்னேறியிருக்கின்றது ஆனாலும் இன்னமும் முன்னேற்றம் அவசியமாகவுள்ளது ஏற்கனவே குறிப்பிட்டது போன்று மாநகரசபை உறுப்பினரொருவர் காணமல் போயிருக்கின்றார் இரண்டு வாரங்கள் ஆகியும் அவரைக்கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றது அப்படியான சூழ்நிலையில் நாம் எப்படி மனிதப்பாதுகாப்பைக்குறித்து நம்பிக்கை கொள்ளமுடியும் ஒவ்வொரு சின்ன விடயமும் நாட்டிற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தக்கூடியது முதலீட்டாளர்களை பின்வாங்கச்செய்யக்கூடியதாகும் அடுத்ததாக  வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் வேறு பாரிய தீர்வுத்திட்டத்தை முன்வைக்காவிடினும் 13வது திருத்தத்தை முழுமையாக நேர்மையாக நடைமுறைப்படுத்தி மாகாண முதலமைச்சரும் அவரது சபையும் மத்திய அரசாங்கத்தின் தலையீடின்றி செய்யக்கூடிய வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கமுடியும் மத்திய அரசாங்கம் நேரடியாக வேண்டுகோள் விடுப்பதை விடவும் வடக்கு அன்றேல் கிழக்கு முதலமைச்சர்கள் நேரடியாக புலம்பெயர்ந்தவர்களிடம் வேண்டுகோள் விடுத்தால் அதன் பிரதிகூலங்கள் அதிகமானதாக இருக்கும் ஆனால் அப்படி முதலீட்டாளர்களை வரவழைத்தால் அதற்குரிய சட்டப்பாதுகாப்பை மத்திய அரசாங்கம் தான் வழங்கவேண்டும் இதற்கான சூழ்நிலைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் தனியார்துறைக்கு முன்னுரிமை கொடுப்பதாக வாயால் சொல்வதை விடவும் நடைமுறையில் செய்துகாட்டவேண்டும் ஆட்சிமுறையில் முன்னேற்றம் காணப்படவேண்டும் ஏற்கனவே சட்டத்திலுள்ளதை அமுல்படுத்தி பிராந்தியங்களை சுயாதீனமாக இயங்க விடவேண்டும் அதைவிடுத்து அரசியல் லாபங்களைக் கருதி அவரைக்கொண்டு இவரைக்கொண்டுவந்து அது செய்யப்போகின்றோம் இதுசெய்யப்போகின்றோம் என்று பூச்சாண்டி காட்டுவது மக்களுக்கு நம்பிக்கையைத்தருவதாக இல்லை'.

இலங்கை எதிர்பார்த்துநிற்கின்ற பொருளாதார அபிவிருத்தி என்பது வெறுமனே பொருளாதாரம் சார்ந்த விடயங்களில் மாத்திரம் தங்கிநிற்கவில்லை என்பதையே கலாநிதி முத்துக்கிருஷ்ண சர்வானந்தன் தெரிவித்த கருத்துக்களில் இருந்து உணர்ந்துகொள்ள முடிகின்றது
 டெய்லி நியூஸ் பத்திரிகை கடந்த 8ம்திகதி அதன் ஆசிரியர் தலையங்கத்தில் புலம்பெயர்ந்த மக்களை கவர்ந்திழுக்கின்றவகையில் இலங்கையின் புறச்சூழ்நிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருந்தது

தற்போதுள்ள பாதுகாப்பு நடைமுறைகளில் படிப்படியாக குறைப்புக்களை மேற்கொண்டால் புலம்பெயர்ந்த மக்கள் இந்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள ஊக்குவிக்கமுடியும் எனவும் காலவோட்டத்தில் எஞ்சியிருக்கின்ற அவசரகாலச்சட்ட விதிகளையும் நீக்கிவிடுவதன் மூலமாக பாரியளவில் புலம்பெயர்ந்த முதலீட்டாளர்களை இலங்கையை நோக்கி கவர்ந்திழுப்பதற்கான பின்னணியை ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தது

இந்த வகையில் நம்பிக்கையை கட்டியெழுப்புகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாக இலங்கையை நிலையான பொருளாதார அபிவிருத்தி நோக்கி வழிநடத்தவேண்டும் என்பதே மக்களின் எதிர்பாகாவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை
                                                                         Published on Virakesari Daily 16/09/2010

No comments:

Post a Comment