Thursday, November 12, 2015

நீதித்துறை மீது எவ்வித நம்பிக்கையும் கிடையாது - பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா



*மஹிந்தவின் ஆட்களே நீதித்துறையில் அதிகமாக உள்ளனர்.
*இனவழிப்பு செய்வதாக இருந்தால் சரணடைந்த 12000 புலிகளையும் எளிதாக அழித்திருப்போம்
*குற்றவாளிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். 


நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்

நாட்டின் நீதித்துறைமீது எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.  மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டவர்களில் அனேகர் இன்னமும் நீதித்துறையிலுள்ள முக்கிய பொறுப்புக்களில் இருக்கின்ற காரணத்தினாலேயே முக்கிய வழக்குகளில் தாமதங்களும் இழுத்தடிப்புப்களும் காணப்படுகின்றன என  முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார். 


சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை  வெளியிட்டார்.

நாட்டில் ஜனவரி-8 ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்துவதில் நீங்களும் முக்கிய வகிபாகத்தை ஆற்றியிருந்தீர்கள். இந்த நிலையில் தற்போதை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நீங்கள் திருப்திகொண்டிருக்கின்றீர்களா?

இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நாங்கள் நூற்றுக்கு நூறு வீதம் திருப்தி கொள்ள முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் மாற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர். முன்னர் ஆட்சியில் இருந்தவர்களுன் ஒப்பிடும் பொழுது தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் வித்தியாசமானவர்கள். ஆனால் பிரச்சனை எங்கிருக்கின்றதென்றால் அவர்களது கட்சியிலுள்ள ஏனையவர்களுடன் இவர்கள் பணியாற்ற வேண்டியுள்ளது.இந்தக்கட்சிகளிலுள்ள சில அதிகாரமிக்கவர்கள் ஊழல் பேர்வழிகளாக இருக்கின்றனர். அவர்கள் கௌவரத்திற்கு பாத்திரமானவர்களல்லர். அவர்கள் நாட்டிற்காக  சிந்திப்பவர்களல்லர். நாட்டின் அபிவிருத்திக்காகவோ மக்களின் நலன்களுக்காகவோ தம்மை அர்ப்பணிப்பதற்கு அவர்கள் தயாராகவில்லை. நிச்சயமாக சில பின்னடைவுகள் இருக்கின்றன.

நீங்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறி  இரண்டரை ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தீர்கள். ஜனவரிடி-8 ஆட்சிமாற்றத்தின் முக்கிய வாக்குறுதிகளிலொன்றாக தேர்தல் பிரசார சுலோகமாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான நடவடிக்கை கூறப்பட்டிருந்தது. முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையான ஊழல் மோசடிக்குற்றச்சாட்டுக்கள் உள்ளன. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றனவே தவிர காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாதிருப்பது பற்றி? 

ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட சட்டவிரோதமான கங்காரு  நீதிமன்றத்தின் மூலமாக கனிஷ்ட அதிகாரிகள் போலிக் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே என்னைச் சிறையடைத்திருந்தார்கள். கனிஷ்ட அதிகாரிகளை நீதிபதிகளாகக் உள்ளடக்கியதாக இராணுவ நீதிமன்றங்களை அமைக்க முடியாது.கனிஷ்ட அதிகாரிகளை நீதிபதிகளாகக் உள்ளடக்கியதாக இராணுவ நீதிமன்றங்களை அமைக்க முடியாது.சில கனிஷ்ட அதிகாரிகளுக்கு லஞ்சத்தைக் கொடுத்து போலிக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் என்னைக் குற்றவாளியாக அறிவித்தனர். விசாரணைகளின் போது நான் எந்த ஏமாற்று நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதையும் ஊழல் மோசடியில் சம்பந்தப்படவில்லை என்பதையும் அவர்கள் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் என்மீது சுமத்திய குற்றம் என்னவென்றால் என்னுடைய உறவினரொருவர் ஏதோ டென்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும் நான்டென்டர் சபையில் அங்கம் வகித்தேன் என்பதேயாகும்.இது பற்றி எனக்கு எதுவுமே தெரிந்திருக்கவில்லை. அந்த சபையில் அங்கம்வகித்தது குற்றம் என்று அவர்கள் கூறினர். அதற்காகவே நான் சிறையில் தள்ளப்பட்டேன். உங்களுடைய கேள்ளியின் மற்றப்பகுதிக்கு விடையளிப்பதானால் நிச்சயமாக இந்த நபர்கள் சிறைக்கு செல்லவேண்டியவர்களாவர்.உங்களுடைய கேள்ளியின் மற்றப்பகுதிக்கு விடையளிப்பதானால் நிச்சயமாக இந்த நபர்கள் சிறைக்கு செல்லவேண்டியவர்களாவர்.அடிப்படையில் இந்த நாட்டின் நீதித்துறைமீது எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் கிடையாது.நீதிமன்ற நடவடிக்கைகளில் தொடர்புபட்டுள்ளவர்களில் அனேகமானவர்கள் இன்னமும் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்களாகவே உள்ளனர்.அவர்கள் நல்லமனிதர்கள் கிடையாது. அவர்களிடத்தில் உண்மையில்லை. அந்த இடங்களில் அமர்வதற்கு அவர்கள் தகுதியானவர்கள் கிடையாது. இதன்காரணமாகவே மக்கள் எதிர்பார்க்கின்ற விடயங்கள் நடைபெறாதுள்ளது.  தேவையின்றி வழக்குகள் இழுபட்டுச் செல்கின்றன. தாமதிப்புக்கள் இடம்பெறுகின்றன. சிலர் கைதுசெய்யப்படவேண்டியவர்களாக உள்ளபோதும் தேவையற்றவை இடம்பெறுகின்றன.
நீதிமன்ற நடவடிக்கைகள் இந்த நாட்டிலே இன்னமும் முறையாக அமையவில்லை. அது மாற்றமடையவேண்டும்.சட்டமா அதிபர் திணைக்களம்  நீதிமன்றங்களில் நீதிபதிகளாக  நல்ல மனிதர்கள் உரிய பதவிகளுக்கு நியமிக்கப்படவேண்டும்.எவ்வித அரசியல் செல்வாக்கும் இன்றி உரிய முறையில் அவர்கள் அந்த இடங்களுக்கு நியமிக்கப்படவேண்டும். தற்போது மிக அதிகமான அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பிரதம நீதியரசராக மொஹான் பீரிஸை எங்ஙனம் மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும் .இது ஒரு உதாரணம் மட்டுமே. இதேபோன்ற பல விடயங்கள் பல இடங்களிலும் இடம்பெற்றுள்ளன.


யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இராணுவத்தளபதி என்ற வகையில் போர் தொடர்பான உங்கள் நிலைப்பாட்டை சுருக்கமாக குறிப்பிடுங்கள்?  போர் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்ற நிலையில் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்?.  தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்றது ஓர் இனவழிப்பு  நடவடிக்கையே என்ற கருத்துநிலைப்பாடுகளும்  வெளிப்படுத்தப்படுகின்றமை குறித்து எப்படிப்பார்கின்றீர்கள்? 


இனவழிப்பு என்றெல்லாம் கூறுவது பக்கச்சார்பான குற்றச்சாட்டுக்களாகும்.இனவழிப்பு  இடம்பெறவில்லை.நான் பன்னிரெண்டாயிரம் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களைக் கைதுசெய்திருந்தேன்.அவர்கள் இன்றும் கூட உயிருடன் இருக்கின்றனர்.அவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர். இனவழிப்பு என்றால் நாம் அவர்களை கைதுசெய்தவுடன் எளிதாக அழித்தொழித்திருக்கமுடியும்.கைதுசெய்யப்பட்டவர்களை நன்கு பராமரித்து புனர்வாழ்வளித்து நாம் விடுதலைசெய்திருக்கின்றோம். அப்படியிருக்கும் போது தமிழர்களை இனவழிப்புச் செய்தோம் என எப்படியாராலும் கூறமுடியும்.


போரிரை நடத்தியதற்கான அனைத்துப்பொறுப்புக்களையும் நான் ஏற்கின்றேன்.நான் யுத்தத்தை நெறிப்படுத்தியிருந்தேன்.திட்டமிட்டிருந்தேன். உத்திகளை வகுத்திருந்தேன்.உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தேன். உத்திகளைமாற்றியமைத்திருந்தேன். இதற்கான கௌரவத்தை வேறெவரும் உரிமை கோரமுடியாது. என்னுடையதே  திட்டங்கள், என்னுடையதே புதிய உத்திகள், நானே தளபதிகளைத் தெரிவுசெய்திருந்தேன்.இதனாலேயே நாம் போரில் வெற்றிபெற்றோம். இந்த யுத்தத்தில் தனிப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றிருக்குமேயானால், 200,000 இராணுவத்தில் எழேட்டுப்பேர் ஏதேனும் குற்றங்களை இழைத்திருப்பார்களேயானால் அதற்கான பொறுப்பை இராணுவம் ஏற்கமாட்டாது.அதற்கான பொறுப்பை அவர்களே ஏற்கவேண்டும். அவர்களை எவராலும் தண்டிக்கமுடியும்.
அது இராணுவத்தின் பிரச்சனையல்ல. அவர்களைப்பற்றி நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. என்னுடைய உத்தரவை மீறி யாரேனும் மனித உரிமைகளை மீறிச்செயற்பட்டிருந்தால் குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும்.அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டியவர்கள்.



  நீங்கள் யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இலங்கையில் இருக்கவில்லை. யுத்தம் தொடர்பாக தெரிவிக்கப்படும் குற்றசசாட்டுக்களில் கணிசமானவை இறுதிநாட்களிலேயே இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.அப்படியானால் ஒட்டுமொத்த யுத்தத்திற்கான பொறுப்பை நீங்கள் எப்படி எடுக்கமுடியும்? 

நான் யுத்தின் இறுதிப்பகுதியில் ஆறுநாட்கள் நாட்டிற்கு வெளியே இருந்தேன். வெள்ளைக்குடி குற்றச்சாட்டு உட்பட சில குற்றச்சாட்டுக்கள் அந்த ஆறுநாட்களுக்குள்ளாகவே சுமத்தப்பட்டுள்ளன. இதற்கு நான் பொறுப்பேற்கமாட்டேன். ஆனால் அந்த ஆறுநாட்களும் நானே யுத்தத்தை நடத்தியிருந்தேன். நான் நாட்டிற்கு வெளியே சென்றிருந்தபோது என்னுடைய செயற்பாட்டு அதிகாரிகளையும் தொடர்பு சாதனங்களையும் வரைபடங்களையும் தேவையான அனைத்தையும் நான் கொண்டுசென்றிருந்தேன்.இதன் மூலமாக சீனாவில் இருந்துகொண்டே யுத்த நடவடிக்கைக்கு நான் தலைமைதாங்கியிருந்தேன்.எப்படி கொழும்பிலிருந்து செயற்பட்டேனோ அப்படியே சீனாவிலிருந்தும் செயற்பட்டிருந்தேன்.
என்னுடைய களமுனைத்தளபதிகளுடன் நாளொன்றுக்கு மூன்று தடவை தொலைபேசியூடாக கதைத்திருந்தேன் அவர்களுடன் உரையாடி அவர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்தேன். தேவையான அனைத்து அறிவுறுத்தல்களையும் வழங்கினேன். நாட்டில் இருக்கவில்லை என்பதனால் எவ்வித பிரச்சனைகளும் இருக்கவில்லை. இராணுவத்தளபதியென்ற வகையில் நான் யுத்தத்திற்கு தலைமைதாங்கியிருந்தேன்.


அப்படியானால் சரணடைந்த விடயம் தொடர்பாக உங்களுக்கு களமுனையில் இருந்தவர்கள் அறிவித்திருந்தார்களா? 

வெள்ளைக் கொடி விடயம் பற்றி எனக்கு ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் சரணடைவது பற்றி நான் எனது உத்தரவுகளை பிறப்பித்திருந்தேன்.இதன்காரணமாகத்தான் 12000 விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் சரணடைந்தபோது அவர்கள் அனைவரும் பொறுப்பேற்கப்பட்டு பராமரிக்கப்பட்டனர்.சரணடைகின்றவர்களை ஏற்றுக்கொண்டு பாதுகாப்பு வழங்கி மனிதர்களாக நடத்துமாறு நான் உத்தரவுகளை வழங்கியிருந்தேன்.இதனால் தான் ஏப்ரல் 19மதிகதி 6000 விடுதலைப்புலிகள் இயக்க 'பயங்கரவாதிகளும் இன்னுமொரு 6000பேர் மே மாதம் 14ம்திகதியும்  என மொத்தமாக சரணைந்த 12000 பேரும் பராமரிக்கப்பட்டனர். வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பாக பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. ஐசிஆர்சி (செஞ்சிலுவைச் சங்கம்)வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் என கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. இந்த விடயத்தை கையாண்டவர்கள் அதற்காக பொறுப்பை ஏற்கவேண்டும்.அவற்றிற்கான பொறுப்பை என்னால் எடுக்கமுடியாது.

உங்களுடைய உத்தரவுகளை மீறி வேறுதரப்பினர் யுத்தம் தொடர்பில் தலையிட்டிருந்தனரா?
யுத்தத்தை நடத்திய விடயத்தில் யாரும் தலையிட்டிருக்கவில்லை.ஆனால் எனக்கு தெரியப்படுத்தாது யாரேனும் வித்தியாசமான அறிவுறுத்தல்களை தனிப்பட்டவர்கள் எவருக்கேனும் அவ்வப்போது வழங்கியிருக்குமிடத்திலும் அந்த தவறான அறிவுறுத்தல்களின் படி அவர்கள் செயற்பட்டிருக்குமிடத்திலும் அவர்களே அந்தப்பொறுப்பை ஏற்றாகவேண்டும்.

2009ம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாக இருந்தநிலையில் யுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டுவருமாறு பணிக்கப்பட்டிருந்ததாக அண்மையில் சில தகவல்கள் வெளியாகியிருந்தன. நீங்களும் அந்தக்கலந்துரையாடல்களில் பங்கெடுத்திருந்தீர்களா? 

அப்படியொன்றும் இடம்பெறவில்லை.வழமையான எப்படி நான் யுத்தத்தை முன்னெடுத்தேனோ அதன் படியே நான் செயற்பட்டிருந்தேன்.

அப்படியானால் நீங்கள் யுத்ததை விரைவாக முடிக்கவேண்டும் என்று எந்தவொரு சமயத்திலும் செயற்படவல்லையா? 

இந்தியத் தேர்தலின் பொருட்டன்றி 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் முதற்கொண்டே மஹிந்த ராஜபக்ஸ யுத்தத்தை விரைவாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என்பதில் பெரும் அவசரம் காண்பித்திருந்தார். அவர் பெரிதும் பொறுமையிழந்தவராக காணப்பபட்டார். நீண்டகால யுத்தத்திற்கு அவர் தயாராக இருக்கவில்லை.அது அவருக்கு பெரும் அழுத்தமாக பாரமாக அமைந்திருந்தது. இதனை விரைவாக முடிக்க வேண்டும் . இப்படியே போய்க்கொண்டு இருக்க முடியாது என எந்த நேரத்திலும் என்மீது பெரும் அழுத்தங்களைப் பிரயோகித்தார். அவர் நிச்சயமற்ற நிலையில் நிழலாடிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்களிற்கு நான் செவிமடுக்கவில்லை. இராணுவரீதியாக எப்படி யுத்தத்தை நடத்தவேண்டுமோ அப்படியே நான் யுத்தத்தை நடத்தியிருந்தேன்.


ஜனாதிபதி மாளிகையில ஒரு பகுங்குகுழி இருக்கின்ற விடயம் தொடர்பில் நீங்கள் அறிந்திருக்கவில்லை என்று  அண்மையில் நீங்கள் கூறியிருந்தீர்கள்.யுத்தகாலத்தில்
 இந்தப்பதுக்குழி பாதுகாப்புக்காரணத்திற்காக  நிர்மாணிக்கப்பட்டதாக கூறப்படுகின்றதே?

அது ஒரு பதுங்கு குழியல்ல மாறாக நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஒரு மாளிகையாகும். கடாபி சதாம் ஹுசைன் போன்றவர்கள் செய்ததையே அவர் பின்பற்றினார். விடுதலைப்புலிகளின் விமானத்தாக்குதல்களுக்கு  அதுபோன்று நிலத்தின்க கீழ் நான்கு அடுக்கு மாடிகள் அவசியமல்ல. நான் இராணுவத்தலைமையகத்திலேயே இருந்தேன். அது ஜனாதிபதி மாளிகையில் இருந்த 200மீற்றர் தூரத்திலேயே இருந்தது.அது அறுபது ஆண்டுகள் பழமையான வீடாகும்.
நான் மூன்று அறைகளைக்கொண்ட ஒரு கட்டிடத்திலேயே இருந்தேன். நான் என்னுடைய படுக்கை அறைக்கு மேலாக ஒரு கொங்கீரிட் தட்டைமாத்திரமே அமைத்துக்கொண்டேன். இதற்கு இராணுவத்தினருக்கு ஐம்பதாயிரம் ரூபாய்கள் மாத்திரமே செலவானது.அந்த விடுதலைப்புலிகளது விமானம் தொடர்பாக அவ்வளவு பயம் உங்களுக்கு இருந்திருக்குமானால் அதற்காக 33 மில்லியன் அமெரிக்க டொலர்களை (அண்ணளவாக 470 கோடி ரூபா)செலவிடுவதாக இருந்தால் நாட்டின் தலைவராக இருப்பதற்கு நீங்கள் அருகதையற்றவர்.கிளிநொச்சியில் இருந்த வரும் அந்த விளையாட்டுப்பொருள் போன்ற விமானத்தினைக் கண்டு அவ்வளவு பயந்திருந்தால்  அதற்காக நான்கு மாடிக்கட்டிடத்தை நிலத்தின் கீழ் நிர்மாணித்ததாக கூறுவார்களேயானால் அவர்களை நல்ல தலைவர்களாக கருதமுடியாது.  அவர்களை முதற்தரக் கோழைகளாகவே நோக்கவேண்டும். 

ஜெனிவா தீர்மானத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகின்றீர்கள்? அரசாங்கம் உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவுள்ளதாக கூறுவது தொடர்பில் உங்கள் கருத்து என்ன? 

அரசாங்கம் ஓர் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கியிருக்கின்றது.அரசாங்கம் ஓர் உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கியிருக்கின்றது அது சரியானது. ஏனென்றால் குற்றச்சாட்டுக்கள் உள்ளன.பலர் முறைப்பாடுகளைத் தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களிடத்தில் நியாயமாக நடந்துகொள்வதாக இருந்தால் நாம் நம்பகரமான விசாரணையை நடத்தியாகவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு எந்த விதமான சந்தேகங்களும் இல்லாமல் போகும். அவர்களுக்கு  செவிசாய்த்தால் அனைவரும் மகிழ்ச்சிகொள்ளமுடியும்.வலுவான குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அதுபற்றி விசாரணை நடத்தவேண்டும். ஆனால் அப்பாவிகளை ஒன்றும் செய்யாதவர்களை தண்டிக்கமுடியாது. குற்றவாளிகள் இருப்பார்களேயானால் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்படவேண்டும். ஆனால் நியாயமான ஒருவர் தண்டிக்கப்படக்கூடாது. உள்ளகப் பொறிமுறை நல்லது.ஆனால் சர்வதேச சமூகத்தினரும் ஏனைய தரப்பினரும்  நடைபெறும் விடயங்கள் தொடர்பில் அறிந்திருப்பதற்காகவும் நம்பிக்கை வைப்பதற்காகவும்  சர்வதேச கண்காணிப்பாளர்களையும் ஆலோசகர்களையும் நியமிப்பதில் தப்பில்லை.