Tuesday, April 27, 2010

மனித வாழ்வில் இயற்கையின் இறைமையை நிலைநிறுத்திய நிகழ்வு

நாகரீகம் நோக்கிய தேடலில் மனிதத்தை தொலைத்துக்கொண்டு தினமும் பதற்றத்தோடு பயணித்துக்கொண்டிருக்கும் மனித வாழ்வில் இயற்கையின் இறைமையை நிலைநிறுத்திய நிகழ்வு கடந்த வாரத்தில் உலகில் நிகழ்ந்தேறியிருந்தது

தொழில்நுட்பங்களின் வளர்ச்சியினால் எதைவேண்டுமானாலும் சாதித்துவிடமுடியும் என்ற மேற்கத்தேய சிந்தனையை நிந்தனை செய்யும் வகையில் இயற்கையின் மேலாதிக்கம் உணர்த்தப்பட்டிருந்தது

ஐஸ்லாந்து என்ற பனிபடர்ந்த நாட்டில் உறங்கிக்கிடந்த எரிமலை குமுறிச் சீற்றமெடுத்ததில் வெளியான சாம்பல்புகையால் உலகமே ஒருவாரகாலத்திற்கு ஸ்தம்பித்துப்போயிருந்ததென்றாலும் மிகையல்லவே

ஆதியிலே இயற்கையோடு ஒன்றித்த வாழ்க்கையை வாழ்ந்த மனிதன் கைத்தொழிற்புரட்சிக்குப்பின்னால் யந்திரக்களோடு ஒன்றி;த்த வாழ்க்கைக்கு மாற்றிக்கொண்டானோ அன்று முதலாக இயற்கைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அருகிச்செல்லத்தொடங்கிவிட்டது

இயற்றை அன்னை வழங்கும் சமிஞ்கைகளை புறந்தள்ளி இயற்கையின் சமநிலையை குலைப்பதிலும் செயற்கை வாழ்வில் பெருமை கொள்வதிலும் குறியாய் இருக்கும் பெரும்பாலான மனிதர்களின் வாழ்விற்கு உண்மை உரைத்திடும் பதிவுகளாய் இயற்கை அவ்வப்போது அழுத்தமாக ஆணித்தரமாக உண்மையை பறைசாற்றிடத்தவறுவதில்லை

பணம் வாழ்விற்கு இன்றியமையாதது ஆனால் பணமே வாழ்வென்று  வாழ்ந்திடும் நம்மவர்களுக்கும் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடந்துகொள்ளவேண்டும்

ஐஸ்லாந்து எரிமலை கடந்த வாரத்தில் உலக பொருளாதாரத்திற்கு ஐந்துநாட்களில் ஏற்படுத்திய நஷ்டம் ஒன்றல்ல இரண்டல்ல பதினேழாயிரம்  கோடிகள் ஆனால் அதைவிடவும் எத்தனையெத்தனையோ நிகழ்ச்சி நிரல்களையெல்லாம் அந்த எரிமலை முடக்கிப்போட்டது என்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமன்றி அனைவருக்குமே வெளிச்சம்

மனித வாழ்வு நீர்க்குமிழி போன்று குறுகியது என நான் வாசித்ததுண்டு அந்த மனித வாழ்வை வர்ணமயப்படுத்துவது நமது கைகளிலேயே உள்ளது

உழைப்பது மகிழ்ச்சியான வாழ்விற்கு என்று மகிழ்ச்சியை தாமதப்படுத்திக்கொண்டே சென்றிடாது தினமும் வாழ்வியல் பயணத்தில் இயற்கையோடு ஒத்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் இயற்கையை ரசிப்பதன் மூலம் இயற்கை தொடர்பாக ஆராய்ந்து அறிவதன் மூலம் அதன் பால் வியந்து நிற்பதன் மூலம் நாம் எம் வாழ்வை அர்த்தப்படுத்திக் கொண்டுவிடமுடியும்

எரிமலை என்பது அழிவின் வடிவமாக பெரும் பாலும் நோக்கப்பட்டபோதிலும் அந்த எரிமலைக்குள் புதையுண்டுள்ள அழகினை ரசித்திடும் பக்குவமும் எம்மிடையே இருந்திடவேண்டும்

1 comment: