Showing posts with label #Fakenews #fact #Srilanka #lka. Show all posts
Showing posts with label #Fakenews #fact #Srilanka #lka. Show all posts

Thursday, January 9, 2020

போலிச் செய்திகளை இனங்காண்பது எப்படி ?



போலிச் செய்திகள் Fake News இன்று தேர்தல் காலத்தில் மட்டுமன்றி மக்களின் அன்றாட வாழ்வியலுடனும் இணைந்து விட்ட நிலையில் போலிச் செய்திகளை இனங்காண்பது எப்படி என்பது இன்று நமக்கு முன்பாக உள்ள சவாலாகும். குறிப்பாக சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவது நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாகவுள்ளது. போலிச் செய்திகள் பரவுவதை நாம் சாதாரணமாகக் கடந்துபோகவும் முடியாத நிலை காணப்படுகின்றது. இன்றுள்ள உயர் தொழில்நுட்பங்கள் மூலமாக புகைப்படங்கள் காணொளிகளை உண்மையேது பொய்யேது என்று தெரியாத அளவிற்கு மிகவும் தத்வரூபமாக வடிவமைக்கக்கூடிய நிலை காணப்படுவதால் போலிச் செய்திகள் தொடர்பாக நாம் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.

போலிச் செய்திகள் பரவுவதை அதனால் நாம் ஏமாற்றத்துக்குள்ளாவதைத் தடுப்பதற்காக சில வழிகாட்டுதல்களை உங்களுக்கு இங்கு தருகின்றேன்.

1. தலைப்புக்களை மாத்திரம் வாசிப்பதோடு நிறுத்தாதீர்

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் வாசகர்கள் நாம் சமூக வலைத்தளத்தில் காணும் ஒரு செய்தி அன்றேல் கட்டுரையின் தலைப்பையோ அன்றேல் அதன் முதலாவது பந்தியையோ மாத்திரம் வாசித்து விட்டு உடனே அதனைப்  Share  பண்ண தீர்மானிப்பது, போலிச் செய்திகள் பரவுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். போலிச் செய்திகளை பரப்புபவர்கள் சில நேரத்தில் ஆரம்பத்தில் சரியாக தொடங்கிவிட்டு தமது செய்தி அன்றேல் கட்டுரையின் இதர பகுதிகளை பொய்யான தகவல்களால் நிரப்பக்கூடும்.

போலியான செய்திக் கோவைகள் தடித்தெழுத்துக்களையும் ஆச்சரியக் குறிகளையும் உள்ளடக்கிய கவர்ச்சிகரமான தலைப்புக்களை கொண்டிருக்கும் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

தலைப்புக்கள் சொல்லும் விடயங்கள் நம்ப முடியாதுள்ளதே என உங்கள் உள்ளுணர்வு கூறுமிடத்து அவை உண்மையில் போலியான செய்திகளாக இருப்பதற்கே இடமுண்டு. சில சந்தர்ப்பங்களில் சமூக வலைத்தளத்தில் வரும் செய்திகள் அன்றேல் கட்டுரைகளை கிளிக் பண்ணும் போது அதில் குறிப்பிடப்பட்ட தலைப்பிற்கும் செய்திக்கும் எவ்விதமான தொடர்புமில்லை அன்றேல் தரவுகளை உறுதிப்படுத்துவதற்கு எவ்விதமான மூல ஆதாரமும் இல்லை என்பது புலனாகும்.

2. செய்தித்தளத்தின் மூலத்தை ஆராய்தல் 

பரிச்சயமில்லாத  இணையத்தளம் அன்றேல் செய்தித்தளம் ஒன்றிலிருந்து  செய்தி வெளிவந்திருந்தால்  அவர்களது பக்கத்திற்கு சென்று ' About' பகுதியில் செய்தித்தளம்/ அமைப்பு தொடர்பான மேலதீக விபரங்களைப் பெறுங்கள். பரிச்சயமில்லாத செய்தித்தளங்கள்  கண்ட இடமெல்லாம் விளம்பரங்களை தாங்கியிருப்பதுடன் பெரும் எழுத்துக்களில் தலைப்புக்களைக் கொண்டிருப்பதுண்டு. இது மக்களின் அவதானத்தை உடனே ஈர்க்கும் நோக்கம் கொண்டதாகும். அந்த இணையத்தளத்தின் பெயரை Google கூகுள் பண்ணிப் பார்ப்பதன் மூலமும் அதில் வெளியான ஏனைய செய்திகள் கட்டுரைகளை ஆராய்வதன் மூலமும் அந்த தளம் நம்பகரமானதா என்பதை உறுதிசெய்ய முடியும்.


3. யார் எழுதியவர் என்ற ஆதாரங்களை சரிபாருங்கள்

செய்தியைத் தொகுத்து எழுதியவர் தந்துள்ள செய்தி மூலங்களை சரிபார்த்து அவை உண்மையானவை என்பதை  உறுதி செய்யுங்கள். செய்தியை எழுதியவருடைய பெயர் பல உண்மைகளை வெளிக்கொண்டுவர உதவும். எழுதியவரின் பழைய ஆக்கங்களை பார்ப்பதனுடாக அவர் நம்பத்தகுந்தவரா அன்றேல் போலிகளின் புகலிடமா என்பது துலங்கும். குறித்த செய்தி நம்பத்தகுந்த துல்லியமான தகவல்களை வழங்குவதில் நன்மதிப்பைப் பெற்ற மூலம் ஒன்றினால் எழுதப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்.  ஆதாரங்கள் போதாமை அல்லது பெயர் குறிப்பிடப்படாத வல்லுனர்களை சார்ந்திருக்கின்றமை என்பன குறித்த செய்தி பொய்யானது என்பதை வெளிப்படுத்தும்.

4. தரப்பட்டுள்ள Link லிங்கை கவனமாக அவதானியுங்கள் 

ஒரு செய்தி அன்றேல் கட்டுரையில் குறைவாக Links லிங் காணப்பட்டால் அது அந்தச் செய்தி போலியாக இருக்கக்கூடும் என்பதற்கான அபாயச் சமிக்ஞையாகும். சில போலித்தளக்களும் links லிங்களை அதிகமாக தரக்கூடும். ஆனால் அவற்றை ஆராய்ந்தால் உண்மை வெளிப்படும்.

போலியான அல்லது ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும் ஒரு link லிங் தவறான செய்தி ஒன்றின் எச்சரிக்கை அடையாளமாகும். அநேகமான போலியான செய்தித் தளங்கள் நேர்மையான செய்தி ஊடகங்களின் செய்திகளைப் பிரதிசெய்து அவற்றில் சிறுசிறு மாற்றங்களை ஏற்படுத்தி மீளவும் வழங்குகின்றன. நீங்கள் தளத்திற்கு சென்று குறித்த Linkகை உறுதி செய்யப்பட்டுள்ள மூலங்களின் செய்திகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். நீங்கள் சந்தேகிக்கும்  ஒரு செய்தித்தளத்தின் URL பெயர்களை ஆராய்ந்துபார்க்கவேண்டும்.



5. போட்டோக்களை மேற்கோள் வசனங்களை ஆராயுங்கள்

போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் போலியான மேற்கோள் வசனங்களை உருவாக்குவதில் வல்லவர்கள். தாம் தயாரித்த போலி வசனத்தை பிரபலமான ஒருவர் சொன்னதைப் போன்று திணித்துவிடுவார்கள். 

போலியான செய்திக் கோவைகள் அநேகமாக தந்திரமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள படங்கள் அல்லது வீடியோக்களை உள்ளக்கியதாக இருக்கும். சில நேரங்களில் போட்டோ உண்மையானதான இருப்பினும் அது சார்ந்த விடயங்களில் இருந்து நீக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம். போட்டோ அல்லது படம் தொடர்பாக சேர்ச் செய்வதன் மூலம் அதன் மூலத்தை உறுதிப்படுத்த முடியும். கூகுளில் Reverse Image செய்வதன் மூலம் அன்றேல் Tineye மூலம் இதனை உறுதி செய்யலாம்
 
6. திகதி ,நேரம் மற்றும் எழுத்துப் பிழை வடிவங்களை சரிபாருங்கள்

தவறான செய்திகள் சற்றும் தொடர்பற்ற திகதிகளைக் கொண்டமைந்திருக்கும் அல்லது மாற்றம் செய்யப்பட்ட நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும். போலிச் செய்திகளைப் பரப்புவோர் செய்யும் இன்னுமொரு பொதுவான விடயம் பழைய கட்டுரைகள் அன்றேல் நிகழ்ச்சிகளை மக்களை நம்பச் செய்யும் வகையில் சமீபத்தில் நடந்ததைப் போன்ற தோற்றப்பாட்டை கொடுப்பதாகும். அந்தவகையில் செய்தி பிரசுரிக்கப்பட்ட நேரம் மற்றும் திகதியை சரிபார்ப்பது போலிச் செய்திகளால் ஏமாற்றப்படாமல் தடுக்க உதவும். சில நேரங்களில் எப்போது குறிப்பிட்ட நிகழ்ச்சி நடந்தது என்பதை அறிவது நேரமெடுக்கும் விடயமாக இருக்கும் ஆனால் கட்டுரையின் பிரசுர காலம் தற்போது நடந்தது போன்று இருக்கும். அப்போது அதில் தரப்பட்டுள்ள லிங்களை கிளிக் பண்ணி வாசித்து இது உண்மையில் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

அத்தோடு அநேகமான போலிச் செய்தித் தளங்கள் எழுத்துப் பிழைகள் அல்லது சீரற்ற வடிவங்களைக் கொண்டிருக்கும். இவ்வாறான விடயங்களைக் கண்டால் அவதானமாக இருங்கள்.



7. ஏனைய செய்திதளங்களின் அறிக்கைகளுடன் ஒப்பிடுங்கள்

ஒரு செய்தி சந்தேகத்திற்கிடமாக இருந்தால் அன்றேல் முக்கியமான பெரும் செய்தியாக இருந்தால் அந்தச் செய்தியை ஏனைய செய்தித்தளங்கள் பிரசுரித்திருக்கின்றனவா என ஆராயுங்கள். வேறெந்த செய்தித்தளமும் குறித்த செய்தியை பிரசுரித்திருக்காவிடின் அநேகமாக அந்தச் செய்தி போலியானதாக இருக்க வாய்ப்புண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட செய்தித்தளங்கள் குறித்த ஒரு செய்தியை வழங்கும் போது அச்செய்தி உண்மையானதாக இருப்பதற்கான சாத்தியம் அதிகமாகும்.

8. செய்தி நகைச்சுவையானதா? கிண்டலா?

சில நேரங்களில் போலியான செய்திக் கோவைகளை நகைச்சுவை, கிண்டல்  அல்லது கேலி என்பவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கும் குறித்த தளமானது வேடிக்கை விடயங்களைப் பகிர்தல் தொடர்பாக அறியப்பட்ட ஒன்றாக என்பதை குறித்த செய்திக் கோவையின் விபரங்கள் மற்றும் தொனி என்பன வேடிக்கையாக அமைந்துள்ளனவா என்பதையும் சரி பாருங்கள். Newscurry நியுஸ் கரி என்ற ஆங்கில இணையத்தளம் இவ்வாறான நகைச்சுவை கிண்டல் தளமாக காணப்படுகின்றது.
 
9. சுய விருப்பை தாண்டி செய்தியைப் பாருங்கள்

தேர்தல் நாம் விரும்பும் வேட்பாளர் வெற்றி பெறவேண்டும் விரும்பும் கட்சி வெற்றிபெறவேண்டும் என நினைப்பவர்கள் அதனை சார்ந்த செய்திகள் வரும்போது தரவுகளை ஆராயாது போலிச் செய்திகளையும் உண்மையென எண்ணும் போக்கு காணப்படுகின்றது. போலிச் செய்திகள் மக்களின் உணர்வுகளோடு ஒன்றியதாக அன்றேல் உணர்வுகளை மேலிடச் செய்வதாக வடிவமைக்கப்படுகின்றன.  ஒரு தரப்பின் வாதத்தை முன்னிறுத்துவதாக அன்றேல் முன்கூட்டிக் காணப்பட்ட அரசியல், இன, மத நம்பிக்கைகளை   மீண்டுமாக நிலைநாட்டும் வண்ணம் தந்திரமாக போலிச் செய்திகளை தயாரிப்பவர்கள் அவற்றை வடிவமைப்பதுண்டு. எனவே எமக்குள்ள தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களைத் தாண்டி செய்திகளை உறுதிப்படுத்தும் போது உண்மைத் தரவுகளையும் அர்த்தப்படுத்தல்களையும் அடிப்படையாகக் கொண்டு அவற்றை அணுகவேண்டும்.



10. Share செய்யுமுன்  சிந்தியுங்கள்

போலிச் செய்தித்தளங்கள் அதனை வாசிப்பவர்கள் தமது போலிகளை மற்றவர்களுடன் Share செய்வதில் தங்கியுள்ளன. எனவே நீங்கள் வாசிக்கும் செய்திக் கோவைகள் தொடர்பாக மிகுந்த அவதானத்தோடு இருங்கள் நம்பத்தகுந்தது என நீங்கள் நிச்சயமாக நினைக்கும் செய்திகளை மாத்திரம் Share செய்யுங்கள்.

அருண் ஆரோக்கியநாதன்

Thursday, December 19, 2019

தேர்தல் காலகட்டத்தை தாண்டி அன்றாட வாழ்வியலில் மக்களைப் குழப்பும் போலிச் செய்திகள்


2020ம்ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் ஏப்ரல் இறுதி வாரத்திலேயோ அன்றேல் மே மாத ஆரம்பத்திலேயோ நடைபெறும் வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த ஜனாதிபதித தேர்தலையொட்டிய பிரசாரங்களை அலசி ஆராய்கின்றபோது பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பிலேயே கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்தன.

2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஓர் பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார்.

 உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அப்போது அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.



கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். புpரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது என்ற கருத்தை அண்மையில் பிரபல ஊடகவியலாளர் அமந்த பெரேரா தனது கட்டுரையொன்றில் பதிவுசெய்திருந்தார்.


சமூக ஊடகங்களின் வரவு அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர்.

திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ அன்றேல் இவ்விரண்டுமோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள்.
அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன.
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 7மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னெடுத்திருந்தார்.இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. அப்படியான ஆதரவுப்பதிவுகள் சமூக வலைத்தளங்களில் இனிவரும் காலத்திலும் அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன.

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது.

அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படுத்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும்.

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் உறுதியளித்தபோதும் அவர்களால் எதனையும் பெரிதாகச் செய்யமுடியவில்லை. போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியபோதும் ஜனாதிபதித் தேர்தலில் பேஸ்புக் மூலமான போலிச் செய்திகளையோ வெறுப்புப் பதிவுகளையோ நீக்க முடியவில்லை. நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை.

கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும்.




அருண் ஆரோக்கியநாதன்