Friday, March 9, 2012

ராகுல் திராவிட் :திரும்பிப்பார்க்கின்றேன்

ஊடகவியலாளராக இருந்து தற்போதைய பணியில் இணைந்துகொண்ட பின்னர் நீண்டநாட்களாக எனது தளத்தில் ஆக்கங்களை பதிவுசெய்யமுடியவில்லையே என்ற எண்ணம் நீண்டநாள்களாக இருந்துகொண்டிருந்தது. ஏனைய பலரைப்போன்றே இவ்வருடம் முதல் மீண்டும் எழுதவேண்டும் என திடசங்கற்பம் பூண்டு ஜனவரி முதலாம் திகதியன்று அடையாளமாக ஒருவரியைப் பதிவுசெய்தேன். ஆனால் காலம் ஓடுகிற ஓட்டத்தில் மூன்றுமாதங்களின் பின்னரே முழுமையாக பதிவொன்றை எழுதமுடிந்துள்ளது.

பதிவை எழுதுவதற்கு ஊந்துசக்தி அன்றேல் உற்சாகம் அவசியம் அந்த ஊந்துசக்தியாக அமைந்தது இன்றையதினத்தில் அதிகமாக பேசப்பட்ட ஒரு செய்தி. ஆம் இந்திய அணியின் நட்சத்திரத்துடுப்பாட்டவீரர்களில் ஒருவரான ராகுல் திராவிட்டின் பிரியாவிடை அறிவிப்புச் செய்தியே அதுவாகும்.

எப்பேர்ப்பட்ட ஒருவீரர்: மகத்தான வீரர் என்ற மகுடத்திற்கு சொந்தம் கொண்டாடக்கூடிய ஒருசிலரில் டிராவிட்டும் ஒருவர். 1996ம் ஆண்டுகளில் நான் காபொத உயர்தரப்பரீட்சைக்கான வகுப்பில் படித்துக்கொண்டிருந்த நேரத்தில் ஸ்போட்ஸ் ஸ்ரார் சஞ்சீகை வாசிக்கும் பழக்கம் அபரீதமாக இருந்தது. அந்தாண்டில் வெளியான ஒரு சஞ்சீகையில் நான்கு இந்திய வீரர்களின் படங்களைப் போட்டு இருந்தார்கள். அதில் மீசை (தாடியும் இருந்தததா?)யுடன் ஒரு வீரர் ராகுல் திராவிட் என்ற பெயரில் பார்த்த ஞாபகம் இன்றும் நினைவில் உள்ளது. இங்கிலாந்து சுற்றுலாவிற்காக தெரிவுசெய்யப்பட்ட நான்கு புதுமுகவீரர்களில் திராவிட் மட்டுமே இத்தனை தூரம் பயணித்து மகத்தான சாதனை படைத்திருக்கின்றார் என நினைக்கையிலே உள்ளம் மகிழ்கின்றது. ஏனைய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை மும்பை அணிக்காக விளையாடிய சுழற்பந்துவீச்சாளர் சய்ராஜ் பகத்துலே மற்றும் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆரம்பத்துடுப்பாட்ட வீரர் விக்ரம் ரதோர் ஆகியோரின் பெயர்கள் நினைவில் வருகின்றபோதும் மற்றவரின் பெயரை நினைவில் கொள்ள முடியவில்லை.

ராகுல் திராவிட் பற்றி எழுதுவதென்றால் புத்தகம் புத்தகமாக எழுதமுடியும். அவரது சாதனைகளைப்பற்றிப் பேசவென்றும் அவரது அர்ப்பணிப்பு தியாகம் ஒழுக்கம் பற்றிப்பேசவென்றும் பல புத்தகங்களை எழுதிவிடமுடியும்.

இதனைப் பலரும் தற்போது பட்டியலிட்டு எழுதிக்கொண்டிருப்பார்கள். ராகுல் திராவிட்டிடம் இருந்து எனக்குப்பிடித்தவிடயம் யாதென்றால் சாதனைகளுக்காகவும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் விளையாடிய வீரர்கள் மத்தியில் கிரிக்கட்மீதான விருப்பிற்காக விளையாட்டிற்குரிய உன்னத நாமத்திற்காக விளையாடிய ஆர்ப்பாட்டமில்லாத வீரர் என்று ராகுல் திராவிட்டைக் கூறிவிடலாம்