Sunday, February 28, 2021

ஜுனில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டம்?

 


எதிர்வரும் ஜுன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை இன்று செய்திவெளியிட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ எதிர்வரும் புதன்கிழமை முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களை சந்திக்கவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 



நாடு எதிர்நோக்கியுள்ள கொரோனா நிலைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ள அதேவேளை புதிய அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில் மாகாண சபைமுறையை தொடர்பாக என்ன செய்யவேண்டும் என்பது தொடர்பாக தீர்மானிக்கப்படவேண்டியுள்ளதாக அரசாங்கத்திலுள்ள சில தரப்புக்கள் தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியுள்ளன. 

கட்டம்கட்டமாக தவணைக்காலங்கள் 2018ம் ஆண்டில் நிறைவுற்ற நிலையில் நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளும் தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழே செயற்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியமைக்குத் தீர்மானித்த நிலையில் எல்லைநிர்ணய நடவடிக்கை தாமதமானதால் மாகாணசபைத் தேர்தல் தாமதமாகியது. 

புதிய தேர்தல் முறைமையின் கீழோ பழைய தேர்தல் முறைமையின் கீழோ தேர்தலை நடத்த வேண்டுமாயின் தற்போதுள்ள சட்டத்தில் மாற்றம் செய்வதன் மூலமாகவே சாத்தியமாகும் 

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இனி இலங்கை மறக்கவேண்டியது தானா? ஒப்பந்தத்தை சீனாவால் 198 ஆண்டுகளுக்கு நீடிக்க முடியும்!

 




முன்னாள் அரசாங்கம் இழைத்த தவறுகாரணமாக 99 வருடகால குத்தகைக்கு சீனாவிற்கு வழங்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா 198 ஆண்டுகளுக்கு நீடிக்க கூடும் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவை மேற்கோள் காட்டி சீனாவின் South China Morning Post பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.  



துறைமுக ஒப்பந்தத்தை இலங்கை அரசாங்கம் மீள்பார்வைக்குட்படுத்துகின்றது என வெளியான தகவல்களையடுத்தே இலங்கை வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளதாகவும்  அந்தச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம்பெற்ற கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு வழியின்றி முன்னைய மைத்திரி-ரணில் 'நல்லாட்சி' அரசாங்கம்  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு 99வருட குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது. 

2019ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ஸ தாம் ஆட்சிக்கு வந்து சில நாட்களில் தமது மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக 2017ல் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை மீள் பார்வைக்குட்படுத்தப்போவதாக அறிவித்திருந்தபோதும் சீனத் தரப்பினர் வெளிப்படுத்திய எதிர்ப்பை அடுத்து ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தும் திட்டமில்லை என சில நாட்களிலேயே கூறியிருந்தார். 



இருந்தபோதும் பெப்ரவரி 6ம்திகதி சிலோன் டுடே பத்திரிகைக்கு வழங்கியிருந்த நேர்காணலில் ஜனாதிபதி கோட்டாபய ஹம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்தை மீள்பார்வைக்குட்படுத்தவுள்ளதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயா ரத்னாயக்க தெரிவித்திருந்தார். 

இந்தத் துறைமுகத்தில் இருந்து இலங்கை எதனையுமே பெற்றுக்கொள்ளவில்லை என கூறியிருந்த தயா ரத்னாயக்க சீன அதிகாரிகளோடு நடத்திய பல சுற்று கலந்துரையாடல்களை அடுத்து சீனாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பகுதியிலிருந்த கடற்படைத்தளத்தையும் வேறிடத்திற்கு மாற்றிவிட்டதாக சுட்டிக்காட்டியிருந்தார். 



நேற்று பெப்ரவரி 20ம்திகதி சனிக்கிழமை சிலோன் டுடே பத்திரிகைக்கு  கருத்துவெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன "முன்னைய அரசாங்கம்,  2015ம் ஆண்டு பதவிக்கு வந்ததையடுத்து ஹம்பாந்தோட்டை ஒப்பந்தத்தை இரத்துச்செய்தபின் கடனைக் கட்டவழியின்றி மீண்டும் சீனாவுடன் 2017ல் ஒப்பந்தம் செய்துகொண்டபோது   99 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கியது மட்டுமன்றி  அந்த தவணை முடிந்தவுடன் மேலும் 99வருடங்களுக்கு குத்தகைய புதுப்பிக்கக்கூடியவாறான சரத்தையும் ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் ஒப்பந்தத்தில் மாற்றம் செய்ய உத்தேசித்துள்ளமை பற்றி வெளிவிவகார அமைச்சர் எதனையும் குறிப்பிடவில்லை.

இதனிடையே ஹம்பாந்தோட்டை ஒப்பந்தம் மீள்பார்வைக்குட்படுத்தப்பட்டுள்ளதான செய்திகளை சீனா மறுத்துள்ளது. புதன்கிழமை பேசிய சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் துறைமுக நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

இருநாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற சமநிலையான தன்னார்வ பேச்சுக்களின் விளைவாகவே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக கூறியுள்ள சீன வெளிவிவகார பேச்சாளர் இந்துசமுத்திரத்தின் போக்குவரத்து கைத்தொழில் மற்றும் இடவசதியேற்படுத்தல் கேந்திர ஸ்தானமாக துறைமுகத்தை மாற்றுவதே நோக்கம் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். 



சீனாவின் சர்ச்சைக்குரிய ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை அன்றேல் பட்டுப்பாதை திட்டத்தில் ஹம்பாந்தோட்டை முக்கியஸ்தானத்தைப் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் தென் முனையில் அமைந்துள்ள ஹம்பாந்தோட்டை துறைமுகம் தெற்காசியாவின் முக்கியமான கடற்பாதைகளுக்கு அருகே அமைந்துள்ளமையால் எதிர்காலத்தில் முக்கியமான கடற்போக்குவரத்து கேந்திரமுனையமாக அமைவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது. 

புவிசார் அரசியலில் செல்வாக்குச்செலுத்துவதற்காக சீனா கடன்பொறி இராஜதந்திரத்தின் கீழ் இந்துசமுத்திரத்தில் கேந்திர முக்கியத்துவமுள்ள இலங்கையிலுள்ள இடங்களை கையகப்படுத்துவதான சர்வதேச அவதானத்திற்கும்  குற்றச்சாட்டுகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மூலம்: South China Morning Post

https://www.scmp.com/news/china/diplomacy/article/3122975/mistake-china-can-extend-hambantota-port-lease-198-years-sri

தமிழாக்கம்: அருண் ஆரோக்கியநாதர்


Saturday, February 27, 2021

இலங்கை – பாகிஸ்தான் நட்புறவு: இந்தியாவிற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் ?

 




பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பிப்ரவரி 23, 24 திகதிகளில் இலங்கைக்கு விஜயம் செய்த நேரத்தில் அவரின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான அழைப்பை ரத்து செய்ததால் சர்ச்சைகள் கிளம்பியது. ஆனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு முன்பை காட்டிலும் அதிக வலுவுடையதாகவே இருக்கிறது. எனவே இந்த ரத்து அவர்களின் நீண்ட, நிலையான உறவில் எந்த பாதிப்பினையும் ஏற்படுத்தவில்லை.

தெற்காசியாவில் பாகிஸ்தான் இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளி நாடாகும். பிப்ரவரி 18ஆம் திகதி அன்று இம்ரான்கான் வருகைக்கு முன்பு வர்த்தகச் செயலாளர்கள் மட்ட பேச்சுவார்த்தைகளின் போது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகத்தில் உள்ள தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க ஒரு கூட்டு செயற்குழுவை மீண்டும் செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக டான் (Dawn) பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருந்தது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் 2005ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் உள்ளது. இலங்கைக்கு பாகிஸ்தான் ஜவுளி மற்றும் சிமெண்ட் பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. அதேபோன்று இலங்கை பாகிஸ்தானுக்கு தேயிலை, இரப்பர் மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி செய்கிறது. கடந்த காலங்களில் பாகிஸ்தான் அதனுடைய பண்டைய புத்த தொடர்புகளையும் தளங்களையும் முன்னிலைப்படுத்தி இலங்கையுடன் ஒரு கலாச்சார இணைப்பில் பணியாற்ற முயன்றது.



இலங்கை மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான இருதரப்பு உறவுக்கு மிகவும் வலுவான தூணாக அமைந்தது பாதுகாப்பு. ஐ.பி.கே.ஃஎப் பணியில் இருந்து இந்தியா 1990ல் வெளியேறிய பிறகு இலங்கை ராணுவத்திற்கு எந்த விதமான பாதுகாப்பு ஆதரவினையும் வழங்க வில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் உளவுத்துறை உதவிகளை வழங்கியது. இறுதிகட்ட போரின்போது தேவைப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் போன்றவற்றிற்காக இலங்கை பாகிஸ்தானை நாடியது. போர் விமான விமானிகளுக்கு பயிற்சி அளிக்கவும் பாகிஸ்தானின் ஆதரவை நாடியது. அப்போது இலங்கையின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த அன்றைய அதிபர் கோத்தபாய ராஜபக்‌ஷே 2008ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு வருகை புரிந்து போருக்கான ராணுவ பொருட்கள் வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

உதகை வெலிங்டனில் உள்ள தேசிய பாதுகாப்பு  மற்றும் பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் பயிற்சிக்காக இலங்கை ராணுவ அதிகாரிகள் இந்தியாவுக்கு வருவது போல (ஜனாதிபதி ராஜபக்‌ஷே ஒரு பழைய மாணவர்)இ அவர்கள் பாகிஸ்தான் ராணுவ கல்விக்கூடங்களுக்கு செல்கிறார்கள். இந்த மாத தொடக்கத்தில்இ பாகிஸ்தானின் பல நாடுகளின் கடற்படைப் பயிற்சியான அமன் -21 இல் இலங்கை பங்கேற்றது.

1971ம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் போர் விமானங்கள் எரிபொருளை இலங்கையில் நிரப்பின. இலங்கைக்கான பாகிஸ்தானின் தூதர்கள் பெரும்பாலும் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் தான். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஆணையர்களும் ராணுவ வீரர்களாகவே இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டு கொழும்புவில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் முகமது வாலி அலுவலகம் விடுதலைப்புலிகளால் தாக்கப்பட்டது. அவர் முன்னாள் உளவுத் துறை தலைவரும் கூட. அவர் அந்த தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார் இருப்பினும் அந்த தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.  இம்ரான் கானின் வருகை பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வழி வகுத்தது. பாதுகாப்பு துறையில் 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் உதவி என்பது தலைப்பு செய்திகளாக இருந்தன.



கண்டியின் பேராதெனியபல்கலைக்கழகத்தில் ஆசிய கலாச்சாரம் மற்றும் நாகரீகம் தொடர்பாக பாகிஸ்தான் ஒரு மையத்தை உருவாக்க உள்ளது. நாடாளுமன்ற உரை ரத்து செய்யப்பட்ட பின்பும் கூட, அங்கிருக்கும் ஒரு விளையாட்டு அரங்கிற்கு இம்ரான் கானின் பெயர் சூட்டப்பட்டு இரு நாடுகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர்பை வெளிப்படுத்தினர்.

உறுதியான விளைவுகளை தவிர பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இந்த வருகை மிகவும் முக்கியமானது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்ற பிறகு இது இரண்டாவது சுற்றுப்பயணம் ஆகும்.  கடந்த நவம்பர் மாதத்தில் அவர் ஆப்கானிஸ்தானுக்கு சென்றார். இறுதியாக இலங்கைக்கு வந்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப். பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியாவின் பங்கு சிறப்பாக இருந்தபோதிலும் இஸ்லாமாபாத்திற்கு அண்டை நாடுகளின் நட்புறவு இருக்கிறது என்பதை உறுதி செய்தது அந்த வருகை. தொற்று நோய் பரவலுக்கு பிறகு இலங்கைக்கு விஜயம் செய்த முதல் அரசாங்க தலைவர் இம்ரான்கான். அவர் கொழும்பு பொறுத்தவரையில் இந்த வருகை சர்வதேச அரங்கில் முக்கியமான நிகழ்வாக கருதப்படுகிறது.

கொரோனா வைரஸால் உயிரிழந்த இஸ்லாமியர்களின் உடல்களை இலங்கை அரசு அப்புறப்படுத்திய விதம் இஸ்லாமிய நாடுகளை திகைப்பிற்கு ஆளாக்கியது. அடக்கம் நடைபெறவில்லை. ஆனால் அனைத்து உடல்களும் தகனம் செய்யப்பட்டன. இந்த விதி இலங்கையில் பெரும் புயலை உருவாக்கியது. இஸ்லாமியர்களை துன்புறுத்த அரசு இந்த முறையை பயன்படுத்துகிறது என்று தலைவர்கள் நம்பினார்கள்.



இலங்கையின் மக்கள்தொகையில் சுமார் 11 சதவீதத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், கடந்த பத்தாண்டுகளில் சிங்கள புத்த பெரும்பான்மையினருடன் பதட்டமான உறவைக் கொண்டிருந்தனர். கலவரங்கள் சில வருடங்களுக்கு ஒருமுறை அமைதியைக் குலைக்கும். ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்களாக இருப்பதாகக் கூறும் ஆண்கள் மற்றும் பெண்கள் குழுவினரால் நடத்தப்பட்ட ஈஸ்டர் 2019 குண்டுவெடிப்பின் பின்னர் பதட்டங்கள் அதிகரித்தன. ஒரு இஸ்லாமிய நாட்டின் தலைவர் இலங்கைக்கு வருவது நல்ல விதமாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் தீர்ப்பாயம் அமைக்கும் முத்தரப்பு ஒப்பந்தத்தில் இருந்து திடீரென இலங்கை, இந்தியா மற்றும் ஜப்பானை வெளியேற்றியது. மேலும் சீன நிறுவனம் ஒன்றுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஒப்பந்தம் ஒன்றை இலங்கை வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியில் இருக்கும் இந்தியாவை மேலும் எதிர்க்க இலங்கை விரும்பவில்லை என்பதால் இலங்கை நாடாளுமன்றத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து இம்ரான் கான் பேசலாம் என்ற யூகமே அவரின் உரையை ரத்து செய்ய காரணமாக இருந்தது என்று ஒரு தரப்பு தெரிவிக்கின்றது.



இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நல்ல உறவை சமநிலையில் வைத்துக் கொள்ள இலங்கை கற்றிருக்கிறது. வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்காக சீனா பாகிஸ்தான் பொருளாதார அமைப்பை பயன்படுத்திக் கொள்ள கான் தனது வட்டாரத்திற்கு அழைப்பு விடுத்தது எந்தவொரு எதிர்வினையையும் வெளிப்படுத்தவில்லை, குறைந்தபட்சம் பொதுவில் இல்லை எந்தவிதமான எதிர்ப்பும் வெளியாகவில்லை.

இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் நிலையிலும், கொழும்புவில் பாகிஸ்தானை எதிரியாக இந்தியா கருதவில்லை. கானின் விமானம் இந்திய பரப்பில் பறக்க டெல்லி அனுமதி வழங்கியது. சமீபத்தில் எல்.ஓ.சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தினால் கூட இந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம். அல்லது போர்நிறுத்தம் தொடர்பான உடனடி இந்தியா-பாகிஸ்தான் ஒப்பந்தம் இல்லாமல் கூட அனுமதி வழங்கப்பட்டிருக்கலாம்.

அவ்வப்போது, இந்திய பாதுகாப்பு அமைப்பு முஸ்லிம்களை தீவிரமயமாக்குவதில் பாகிஸ்தானின் பங்கு குறித்து கவலை தெரிவித்துள்ளது – குறிப்பாக கிழக்கு இலங்கையில். அங்கு சில புதிய மசூதிகளை எழுப்ப்ப மேற்கு ஆசிய நாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.


நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ் 

இந்தக் கட்டுரை முதலில் இந்தியன் எக்ஸ்பிரஸில் பிரசுரமானது. மக்களுக்கு  அறிவூட்டும் நன்நோக்குடன் குளோப்தமிழில் மீள்பிரசுரிக்கப்படுகின்றது. 

ஊடகத்துறையில் மறக்கமுடியாத அனுபவம்


ஈஸ்டர் தாக்குதலில் கடும் பாதிப்பிற்குள்ளான கட்டுவாபிடிய புனித செபஸ்தியார் தேவாலயத்தில்...

 ஊடகத்துறை வாழ்வில் ஒவ்வொருவருக்கும் மறக்கமுடியாத அனுபவங்கள் பல இருக்கக்கூடும்.  இறுதிப்போர்க் காலத்தில் 2009ம் ஆண்டில்,  தீபம் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது  புதுமாத்தளன் , புதுக்குடியிருப்பு,  கிளிநொச்சி மற்றும் வவுனியாவின் மெனிக்பாம் சென்று தகவல்திரட்டி அறிக்கையிட்டமை மறக்கமுடியாதது.



 அதற்கு பின்னர் 2019ம் ஆண்டு ஈஸ்டர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்து  ஆதவன் தொலைக்காட்சிக்காக தகவல்திரட்டி அறிக்கையிட்டமையும்  சர்வதேச ஊடகங்களுடன் இணைந்து பணியாற்றியமையும் மறக்கமுடியாதது.
  

       கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில்...

உலகின் முன்னணி ஊடகங்கள் வரிசையில் இடம்பெறும் அல்ஜஸீரா அமெரிக்காவின் National Public Broadcast (NPR) என். பி. ஆர். அவுஸ்திரேலியாவின் ABC- ஏ.பி.சி. மற்றும் S.B.S-எஸ்.பி. எஸ் ஆகியவற்றிற்காக பணியாற்றியமை மறக்கமுடியாதது. ஊடகத்துறையிலுள்ளவர்கள் தொடர்ச்சியாக தம்மை மேம்படுத்தி அறிவை வளர்த்துக்கொள்ளும் போதே தம்மை நம்பி தகவல்களுக்காக காத்திருக்கும் பாமரர் உட்பட பலதரப்பட்ட மக்களுக்கும் புரியும் படியாத செய்திகளை தெளிவாகக் கொண்டுசேர்க்கமுடியும். அந்த வகையில் இந்த நிறுவனங்களுடன் இணைந்துபணியாற்றிதன் மூலம் பல புதிய விடயங்களையும் தெரிந்தவிடயங்களை ஆழமாகவும் அறிந்துகொள்ளக்கிடைத்தது.


             அல் ஜஸீரா செய்தியாளர் டேவிட் பேர்னாட்டுடன் கடும்போக்காளர்கள் நிறைந்த சிங்களக் கிராமமொன்றில் ...


 ஊடகத்துறையில் ஒரு விடயம் தொடர்பாக தமக்கென தனியான கருத்துக்களை விருப்புக்களைக் கொண்டிருந்தாலும் செய்தி என்று வரும் போது எமக்கு தனிப்பட்ட ரீதியில் விருப்பமில்லாதவர்களை அன்றேல் உடன்பாடில்லாதவர்களை மாற்றுக்கருத்துக்களைக் கொண்டவர்களது கருத்துக்களையும் நாம் உள்வாங்குவது அவசியம் என ஏற்கனவே அறிந்திருந்த கருத்தை மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளமுடிந்தது. என்றென்றும் மறக்கமுடியாத அனுபவமாக இது அமைந்தது.


                   காத்தான்குடி மெத்தைப் பள்ளிவாசலில் சிறுவர்களுடன்...

தனது அன்புக்குரிய தங்கையை இழந்தவருத்தத்தில் கொச்சிக்கடையில் புவனேஷ்வரி அக்காவை   ABC நேர்காணல் செய்ய பங்களித்தபோது...



----------------xxxxx--------------------------------------------xxxxx-----------------------------------------

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய முன்றலில்


..........................xxxxx...................................................xxxxx......................................................


கட்டுவாபிடிய செபஸ்தியார் ஆலய சந்தியில் 




------------xxxxx----------------------------xxxxx----------------------------------------------------------






-------------------xxx...........................xxxxxx.........................xxxxx


                                  கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில்





----------------xxxxx-------------------------------xxxxx------------------------------------------------
                   கட்டுவாபிடிய செபஸ்தியார் ஆலயத்தில்...
 







----------------------xxxxx.........................................xxxxx.................................................

காத்தான் குடிக்கு அல்ஜஸீரா செய்தியாளர்களுடன் சென்றபோது...





---------------xxxxx----------------------xxxxx------------------------------------xxxxx-------------













----------------------------------------------xxxxx-------------------------------------------------------