Thursday, November 23, 2017

பயங்கரவாத தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும் - மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன்




கேள்வி:

சித்திரவதைகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முறைப்பாடுகள் வந்துகொண்டே இருக்கின்றன. நீங்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இணைந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இந்தக்காலப்பகுதியில் சித்திரவதைகளை மேற்கொண்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதா? 
அது தொடர்பான புள்ளிவிபரங்கள் ஏதேனும் உங்களிடம் இருக்கின்றதா? 

பதில்: எமக்கு தரப்பட்ட புள்ளிவிபரங்களின் படி 30 அதிகாரிகள் குற்றாவளிகளாக இனங்கண்டுகொள்ளப்பட்டுள்ளார்கள். 18 அதிகாரிகள் நிரபராதியாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். 59 வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்தும் நடந்துகொண்டிருக்கின்றன.  இதனைத் தவிர சித்திரவதையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட  100 அதிகாரிகளுக்கு எதிராக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துவருவதாக எமக்கு கூறப்பட்டது. இவற்றையே உங்களுடன் பகிர்ந்துகொள்ளமுடியும்.



கேள்வி:

இதிலே சில நாட்களுக்கு முன்பாக அஸோஸியேடற் பிரஸ் செய்திச்சேவையால் சுட்டிக்காட்டப்பட்ட சித்திரவதைகளும் உள்ளடக்குகின்றதா?

நீங்கள் கூறும் அஸோஸியேடற் பிரஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட குற்றச்சாட்டு;க்கள் இதுவரையில் முறைப்பாடுகளாக எமக்கு வரவில்லை. ஆனால் இந்த முறைப்பாடுகள் எமக்கு மேற்கொள்ளப்பட்டால்  அல்லது அந்த அறிக்கையை தயாரித்தவர்கள் எம்முடன் வந்து தகவல் பரிமாறிக்கொண்டால் நிச்சயமாக அதனை விசாரணைசெய்து  தேவையான நடவடிக்கை எடுப்பது எமது கடமையாகும்.

அண்மையிலே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஜுன் லம்பேர்ட் தலைமையிலான ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் ஒரு ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தியிருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பாக தாம் கடந்தாண்டு விஜயம் மேற்கொண்டபோது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதனால் தாம் மிகுந்த கவலைகொண்டிருப்பதாக  குறிப்பிட்டார்கள். இந்த விடயத்திலே மனித உரிமை ஆணைக்குழு என்னசெய்துகொண்டிருக்கின்றது? இதிலே நீங்கள் எடுக்கும் நடவடிக்கை என்ன?
புயங்கரவாத தடுப்புச் சட்டம் கட்டாயமாக நீக்கப்படவேண்டும். ஏனெனில் அந்தச் சட்டம் வந்து மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதற்கு ஏற்றதொரு சூழ்நிலையை ஏற்படுத்துகின்றது. உதாரணமாக அந்தச் சட்டத்தின் கீழ நீதிபதியொருவருக்கு முன்பாக முன்னிலைப்படுத்தப்படாமலே ஒருவர் 18 மாதங்கள் தடுத்துவைக்கப்படலாம். சாதாரண சட்டத்தின் கீழ்; நீதிபதியொருவருக்கு முன்னர் மாத்திரமே ஒருவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெறமுடியும். அது நீதிமன்றத்தாலும் ஏற்கப்படும். ஆனால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை உதவிப் பொலிஸ் பரிசோதகர் அன்றேல் அவருக்கு மேலுள்ள அதிகாரிகள்; பெற்றுக்கொள்ளும் நிலையிலேயே அந்த ஒப்புதல் வாக்குமூலமானது நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். ஆகையால் அந்தமாதிரியான ஒரு சட்டம் இருக்கும் நிலையில் அது சித்திரவதை செய்வதற்கு சாதகமான ஒரு சூழ்நிலையை  ஏற்படுத்துகின்றது.  ஏனெனில் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்வதற்காகவே சித்திரவதை செய்யப்படக்கூடும். ஆகையால் தான்  தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு ஏற்ப அமையவில்லை. ஆகையால் அந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்கு திட்டவட்டமாக உறுதிபடக் கூறியுள்ளது.
இதனை வலியுறுத்தி; நாம் பிரதமமந்திரிக்கு எழுதியிருக்கின்றோம். அத்;தோடு பகிரங்க அறிக்கைகளையும் விடுத்திருக்கின்றோம். எமது இணையத்தளத்தைப் போய் இவற்றை நீங்கள் பார்க்கமுடியும். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்க வேண்டும் என்பதே எமது பரிந்துரை.



கேள்வி:

கடந்த இரண்டுவருடகால உங்கள் அனுபவத்தின் படி மனித உரிமையைப் பேணுகின்றவிடயத்தில் இந்த அரசாங்கம் உண்மையான உறுதிப்பாட்டைக் கொண்டிருப்பதாகக் காண்கின்றீர்களா? அன்றேல் கண்துடைப்பிற்காக நிறுவனங்களை அமைத்து வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு இருந்துவிடுகின்றதென எண்ணுகின்றீர்களா?

பதில்:

மனித உரிமைகள் ஆணைக்குழுவைப் பொறுத்தவரை நாம் ஒரு சுயாதீனமான ஆணைக்குழு. ஆகையால் நாம் சுயாதீனமாகவே செயற்படவேண்டும். சுயாதீனமாகவே செயற்படுகின்றோம். இப்போதுள்ள மாற்றமாக நாம் கண்டதென்னவெனில் தற்போது பேச்சுச்சுதந்திரம் உள்ளது. அரசாங்கத்திலுள்ள குறைநிறைகளை பிழைகளைச் சுட்டிக்காட்டுவதற்கான  சுதந்திரம் உள்ளது.  அதனைத்தவிர அரசாங்கத்தை அல்லது அரசியல்யாப்பை அல்லது மனித உரிமை ஆணைக்குழு போன்ற நிறுவனங்களைக் கூட சீர்திருத்தி அமைப்பது என்பது  சுலபமான காரியமல்ல. ஏனெனில் பத்துவருடகாலம் சர்வாதிகார  அரசாங்கம் இருந்த பின்னணியிலே  ஒரு கலாசாரம் உருவாகும். அதாவது சட்டத்தை மதிக்கத் தேவையில்லை. மனித உரிமைமீறல்களை நாம் இழைக்கலாம் . இழைத்தாலும் சட்டத்திலிருந்து நாம் தப்பிக்கொள்ளலாம்.  ஆகையால் அந்தமாதிரியான கலாசாரத்தை மாற்றுவதென்பது  இலகுவானதல்ல. மனித உரிமை ஆணைக்குழுவைக் கூட  சில பேர் சில அரசநிறுவனங்கள் கூட எதிரியாகவே எம்மைப் பார்க்கின்றனர்.  பார்;க்கூடும். ஏனெனில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணித்து  அவை செய்யும் பிழைகளைச் சுட்டிக்காட்டி சரியான வழியில் போறதற்கு  பரிந்துரைகள் வழங்குவதுதான் எமது கடமை.  ஆகையால் நாம் எம்மை எதிரியாகப் பார்க்கவேண்டாம் என்றே நாம் அரச நிறுவனங்களுக்கு கூறுகின்றோம். இலங்கையிலுள்ள அனைவரது மனித உரிமைகளையும் பேணுவதை உறுதிப்படுத்துவதே எமது கடமை. எங்களைப் பொறுத்தவரை எந்த அரசாங்கமும் எப்போதும் எல்லாநேரத்திலும் மனித உரிமைகளை மதிப்பதில்லை. அவர்கள் மதிக்காமல் சட்டத்திற்கு மாறாக செயற்படும் போது கட்டாயமாக நாங்கள் குரல் எழுப்ப வேண்டும். சுட்டிக்காட்டவேண்டும். பரிந்துரைகளை வழங்கவேண்டும்.

'உங்களை எதிரியாகப் பார்க்கவேண்டாம'; என்று கடந்த கேள்விக்கான பதிலில் கூறினீர்கள்.  கடந்த அரசாங்கக்காலத்தில் மனித உரிமைக்காக குரல் எழுப்பியவர்களைத் துரோகியாக  அடையாளம் காட்டிய காலப்பகுதி இருந்தது. தொலைக்காட்சிகளில் முகங்களைக் காண்பித்து இவர்கள் துரோகிகள் எனக்கூறினர். இந்தப் போக்கை எப்படி மாற்றியமைக்கமுடியும்?


இது கடினமான கேள்வி. அரச உத்தியோகத்தர்கள் பொலிஸார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் மனித உரிமைகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மனித உரிமை ஆணைக்குழுவின் கடமைகளிலொன்றாகும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்கின்றோம். ஆனாலும் அந்த நடவடிக்கைகள் போதாது. ஏனெனில் பத்துவருட காலமாக( மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் ) மனித உரிமைகளைப் பற்றிக் கதைத்தால் எமது தேசியப் பாதுகாப்பிற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகக் கருதப்படலாம். அல்லது குழப்பங்களை ஏற்படுத்துகின்ற ஒரு நடவடிக்கையாக கருதப்படலாம். அரசாங்கத்தை அசௌகரியப்படுத்துவதற்கான நடவடிக்கையாகக் கண்டுகொள்ளப்படலாம். ஆகையால் அந்த மாதிரியான கலாசாரத்தை மனநிலையை மாற்றுவதென்பது  இலகுவல்ல. நாம் வந்து இரண்டு வருடத்தில் எத்தனையோ நடவடிக்கைகளை எடுத்திருக்கின்றோம்.  ஆனாலும் அது இலகுவான விடயமல்ல.



காணாமல்போனோருக்கான அலுவலகத்தை அமைப்பது தொடர்பான சட்டம் கடந்தாண்டு ஓகஸ்ற் மாதத்தில் நிறைவேற்றப்பட்டு நீண்ட நாள் இழுபறிக்குப் பின்னர் ஜனாதிபதி அந்த சட்டத்தில் கையொப்பமிட்டிருந்தபோது அந்த அலுவலகம் இன்னமும் இயங்குவதைக் காணமுடியவில்லை. இந்த விடயத்திலே உங்களுடைய பார்வை எப்படி இருக்கின்றது?

அந்த அலுவலகத்திற்கு அங்கத்தவர்களை தெரிவுசெய்து நியமிப்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்னர் விளம்பரம் செய்யப்பட்டது. சிவில் நிறுவனங்கள் ஆட்களை பிரேரிக்க முடியும். அல்லது அதில் அங்கத்தவர்களாக விரும்புவோர் விண்ணப்பங்களை சமர்பிக்க முடியும்.  அதற்கு பிறகு அரசியல்யாப்பு பேரவை பரிந்துரைகள் வழங்க  அவர்கள் நியமிக்கப்படுவார்கள். அதற்கு நியமிக்கப்படும் அங்கத்தவர்கள்  மனித உரிமை விடயங்களில் தேர்ச்சியுள்ளவர்களாகவும் சுயாதீனமானவர்களாகவும்  காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் இணைந்து பணியாற்றியவர்களாகவும் இருப்பது மிகமுக்கியமாகும். ஏனெனில் இது ஒரு புது அமைப்பு  இதன் செயற்பாடுகள் சீராக நடைபெறுவதற்கு  அந்த அங்கத்தவர்களின் பங்களிப்பு மிக முக்கிமாகும்.  புpழையான அங்கத்தவர்களை நியமித்தால் அந்த நிறுவனம் இயங்கப்போவதில்லை.  இந்தமாதிரியான நிறுவனங்கள் இயங்குவதற்கு சிலமாதங்கள் சில வேளை ஒருவருடமாவது எடுக்கும். ஏனெனில் பிராந்தியங்களில் அலுவலகங்களைத் திறக்க வேண்டியுள்ளது. தேர்ச்சியான நிபுணர்களைக் கொண்டுவரவேண்டியிருக்கும். சுரியான அங்கத்தவர்களை நியமிப்பதே மிகமுக்கியமானவிடயமாகும்.  அது சரியாக சீராக செயற்படுகின்றதா என்பதை அதற்குப் பின்னர் தான் நாங்கள் எடுக்க முடியும்.





மனித உரிமை ஆர்வலர்கள-; காவலர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக ஐநாவில் கூட முறையிடப்பட்டிருந்தது. அவர்களுடைய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கு  அவர்கள் தொடர்ந்தும் பணியை துணிகரமாக முன்னெடுப்பதை உறுதிப்படுத்துவதற்கு  மனித உரிமைகள் ஆணைக்குழு என்றவகையில் நீங்கள் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பத்து பிராந்தியக் காரியாலங்கள் உள்ளன. கடந்த இரண்டு வருடங்களில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் எம்மிடம் வந்து முறைப்பாடு செய்துள்ளனர்.  சுpல வேளைகளில் பாதுகாப்புச் சேவையில் இருப்பவர்கள் எமது அலுவலகங்களுக்கு வந்து தகவல்கள் கேட்கின்றனர் என்று முறைப்பாடுகள் மேற்கொண்டிருக்கின்றனர். அப்படி மேற்கொள்ளும்போது நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கின்றோம். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பானதொரு சூழலை ஏற்படுத்துவதற்காக எம்மால் இயலுமான  அளவு முயற்சிகளை மனித உரிமை ஆணைக்குழு எடுத்திருக்கின்றது. எந்தப்பிரச்சனை இருந்தாலும் தயதுசெய்து மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு  முறைப்பாடு செய்யுங்கள் என நாம் சிவில் சமூகத்தினர் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களுக்கு கூறுகின்றோம்.  பிராந்தியங்களில் என்ன நடக்கின்றது என்று தெரிந்தால் மட்டுமே  நாம் தேவையான நடவடிக்கை எடுக்க முடியும். எங்களுடைய செயற்பாடு சரியாக இல்லாவிடின் அவர்கள் எம்மிடம் கேள்வி கேட்கலாம். கேள்விகேட்க வேண்டும். ஏனெனில் அது அவர்களின் உரிமையாகும். அப்போதுதான் மனித உரிமை ஆணைக்குழுவும் சரியாக செயற்படமுடியும்.

No comments:

Post a Comment