Friday, December 5, 2014

ஊழலில் உழலும் தேசம்

இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலம் என்று வரும்போது மக்களின் உணர்வுகளைத் தூண்டி வாக்குகளாக மாற்றுவதற்கு பல்வேறு துரும்புச்சீட்டுகளை கடந்த காலங்களில் பயன்படுத்திவந்துள்ளனர்.

இதில் தமிழர்களுக்கு எதிரான இனவாத கோ­ங்கள் நீண்ட காலமாக முதன்மை பெற்றன. கடந்த சில தசாப்தங்களாக அவை விடுதலைப்புலிகளுக்கு எதிரான பயங்கரவாதக் கோ­ங்களாகப் பரிணாமம் கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆயுதமோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களானபோதிலும் மக்கள் மத்தியில் வாக்குப்பிச்சை கேட்பதற்காக இன்னமும் அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கின்ற கட்சிகளையும் நம் கண்முன்னே காணமுடிகின்றது.

அரசியல்வாதிகள் என்ன நினைத்தாலும் சாதாரண மக்களின் மத்தியில் இந்த நாட்டுக்குத் தற்போது தேவையானது என்ன என்பது தொடர்பான தெளிவு ஏற்பட்டுவருவதை சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடனான அன்றாடக் கலந்துரையாடல்களிலிருந்தே புரிந்துகொள்ள முடிகின்றது. அதிலே குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் நாளாந்த வாழ்க்கையை நகர்த்த தள்ளாடும் மக்கள் இந்த நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கருத்துகளைப் பரவலாக முன்வைக்கத்தொடங்கியுள்ளதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகளவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலைவகிக்கின்ற ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்ந­னல் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கைக்குக் கிடைத்துள்ள இடமும் அதுதொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளும் அமைந்துள் ளன. 2014ஆம் ஆண்டுக்கான உலக ஊழல் கருதுநிலைச் சுட்டியில் உள்வாங்கப்பட்ட 175 நாடுகளில் இலங்கை 85ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கை கடந்தாண்டைவிடவும் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்று 38 புள்ளிகளை மொத்தமாக ஈட்டியமையை ஒருவிதமான முன்னேற்றமாக புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் நோக்கமுடியும். ஊழலால் இந்நாடு அடைந்துள்ள பாதிப்பிலிருந்து விடுபடுதற்கு இது போதுமானதாகக் காணப்படவில்லை என்பதை புள்ளிவிவர வியாக்கியானங்கள் துலாம்பரமாக்குகின்றன. கடந்தாண்டில் 177 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை 37 புள்ளிகளுடன் 91ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கை 2014இல் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்றிருந்தாலும் 2012ஆம் ஆண்டில் அடைந்த 40 புள்ளிகள் இலக்கை எய்துவதற்குத் தவறிவிட்டது.
\
பர்கினா பாஸோ, இந்தியா, ஜமேய்க்கா, பெரு, பிலிப் பைன்ஸ், தாய்லாந்து, ரினிடாட் அன்ட் டுபாக்கோ மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகளைப் போன்றே இலங்கையும் 2014இல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த நாடுகள் அவற்றின் அரச துறைகளில் பாரதூரமான ஊழல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்பதையே இந்த எண்ணிக்கையானது எடுத்துக்காட்டுகின்றது.

2014ஆம் ஆண்டு ஊழல் கருதுநிலைச் சுட்டி புள்ளிகளைப் பொறுத்தவரையில் 175 நாடுகளில் மூன்றில் இரண்டுக்கு அதிகமானவை 50இற்கு குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. புள்ளிகளைப் பொறுத்தவரையில் 0 என்பது மிகவும் ஊழல் மிக்க நாடெனவும் 100 என்பது மிகவும் தூய்மையான நாடெனவும் அளவீட்டு ரீதியில் கருத்திற்கொள்ளப்படும். 2014ஆம் ஆண்டில் டென்மார்க் 92 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த அதேவேளை, வடகொரியா மற்றும் சோமாலியா ஆகியன தலா 8 புள்ளிகளுடன் கடைசி ஸ்தானங்களைத் தமதாக்கிக்கொண்டன.

இலங்கை 50 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்றிருப்பதனால் அரச துறையில் இடம்பெறும் ஊழல்களைக் குறைக்கமுடியாத நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது என ட்ரான்ஸ் பரன்ஸி இன்டர்ந­னல் இலங்கை கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ். ரணுக்கே தெரிவித்துள்ளார். ஊழல் கருதுநிலைச் சுட்டி கருதுநிலையை அடியயாற்றியதாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சுட்டெண்ணாகவும் அதிகமாக மேற் கோள் காண்பிக்கப்படும் சுட்டெண்ணாகவும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்கத்கது.

ஊழல் கருதுநிலைச் சுட்டியானது அரசதுறை ஊழல் குறித்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். தலைவர்களை பொதுமக்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடிய திறந்த அரசு இருப்பின் நாடுகளது மொத்தப்புள்ளிகளுக்கு அது வலுச்சேர்க்கும். ஊழல் தொடர்கதையாக இருக்குமிடத்திலும் ஊழலுக்கான தண்டனைகள் போதுமானதாக இல்லாமலிருப்பினும் அரச நிறுவனங்கள் பிரஜைகளது தேவைகள் தொடர்பாக பதிலளிக்காத நிலையிலும் குறைவான புள்ளிகளே வழங்கப்படும்.

இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இல்லாமையானது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருவதுடன் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழலை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வ லர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான வரையறைகள் இல்லாமை பெருங்குறைபாடாகக் காணப்படுகின்றது.

Monday, December 1, 2014

உற்சாகமளிக்கும் ஆரம்பம்

நேற்றைய தினம் பொலநறுவையில் இடம்பெற்ற பொது எதிரணிகளின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மிகுந்த உற் சாகத்துடன் பங்கேற்றிருந்தனர்.

பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன முதன் முதலாக தன்னை அறிவித்தபோது கடந்த மாதம் 21ஆம் திகதியன்று கொழும்பு புதிய நகர மண்டபத்தில் காணப்பட்ட உற்சாகம் அதன் பின்னர் அவர் பங்கேற்ற நிகழ்வு களில் அதிகரித்துவந்த நிலையில், நேற்றைய தினம் பொலநறுவையில் நடைபெற்ற கூட்டத்தில் உற்சாகம் மற்றுமொரு கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. விவசாயப் பின்புலத்தைக் கொண்ட மைத்திரிபால சிறிசேனவின் சொந்தத் தேர்தல் தொகுதியான பொலநறுவையில் கூட்டம் இடம்பெற்றமை இதில் முக்கிய பங்களிப்பை வழங்கி யிருந்ததை மறுக்க முடியாது.

கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்கள் மத்தியில் மட்டுமன்றி, பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர் கள், தொண்டர்கள் மத்தியிலும் ஒருவிதமான புத்து ணர்ச்சியுடன் கூடிய உற்சாக நிலையைப் பார்க்கும் போது எதிரணியினரின் நகர்வுகள் நல்லதொரு ஆரம்ப அடித்தளத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகின்றது.

இந்நிலையில், பொது எதிரணியினர் இன்று விகாரமாதேவி பூங்காவில் புரிந்துணர்வு ஒப்பந்தத் தில் கைச்சாத்திடவுள்ளனர். தேசிய அரசை நிறுவி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல், புதிய தேர்தல் முறைமை, சுயாதீன ஆணைக் குழுக்கள் ஆகியவற்றை ஸ்தாபிக்கின்ற 17ஆவது திருத்தத்தை மீண்டும் செயன்நிலைக்குக் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தல் போன்ற முக்கிய அம் சங்களை இன்றைய புரிந்துணர்வு ஒப்பந்தம் தாங்கி யுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையில் மேலும் எதிர்பார்ப்புகள் அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பேன் என்று வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்­ ஆகியோர் இரு தடவைகள் ஆட்சியில் இருந்தும் அம் முறைமையை ஒழிக்கத் தவறிய நிலையில் மைத் திரிபால சிறிசேன ஆட்சிபீடமேறினால் தமது வாக்குறு தியை நிறைவேற்றுவார் என்பதற்கு எவராலும் ஆணித்தரமான உத்தரவாதங்களைக் கொடுக்க முடியாமற் போனாலும் மாற்றமொன்றை வேண்டி நிற்கும் மக்களுக்கு மைத்திரியின் வருகை உற்சா கத்தைக் கொடுத்துள்ளதை உணர்வுவெளிப்பாடுகள் துலாம்பரமாக்கி நிற்கின்றன.

உற்சாகம் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணி யினர் செயற்பாட்டில் எதிர்கொள்ளக்கூடிய சவால்கள், நெருக்கடிகள் குறித்த ஆரம்பக்கட்ட ஐயப்பாடுகளும் நிலவுகின்றன. 35இற்கு மேற்பட்ட அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புகளைத் தாங்கிய பொது எதிரணியிலுள்ள அனைவரும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவேண்டும் போன்ற நல்லாட்சியுடன் தொடர்புடைய பொதுப்புள்ளியில் இணைந்திருக்கின்றார்களே அன்றி ஏனைய அனைத்து விடயங்களிலும் உடன்பாடு உடையவர்கள் அல்லர் என்பதை ஜாதிக யஹல உறுமயவின் அண்மைய அறிவிப்புகள் வெளிப்படுத்திநிற்கின்றன.

குறிப்பாக, பொறுப்புக்கூறுதல் விடயத்தில் நல்லி ணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பையே கடுமையாக எதிர்த்துநிற்கும் யஹல உறுமய தமிழர்களின் அரசியல் தீர்வு தொடர்பாக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. இப்படியாக பல முரண்பட்ட அமைப் புகளின் கூட்டணியே பொது எதிரணி என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு அதன்மீதான எதிர்பார்ப் புகளை யதார்த்தமாக வைத்துக்கொண்டால் ஏமாற் றங்களைத் தவிர்த்துக்கொள்ளமுடியும்.

அடுத்தடுத்த கட்டங்களில் வரக்கூடிய சவால்கள், சங்கடங்கள், நெருக்கடிகள் ஒருபுறம் இருந்தாலும் பொது எதிரணியினரின் ஆரம்பச் செயற்பாடுகள் உற்சாகமளிப்பதை மக்களின் உணர்வலைகளி லிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது.

ஆரம்பம் சரியாக அமைந்தால் அடுத்துவரும் கட்டங்களும் சரியாகும் என்ற நம்பிக்கையை வலுவாகக்கொண்ட எமது மக்களின் எதிர்பார்ப்புகள் தடை களைத் தாண்டி நிறைவேறுமா என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.