Sunday, January 16, 2011

வேகம் வேகம் வேகம் ............. ரசிகர்களை மயிர்க்கூச்செறியவைக்கும் 100M ஓட்டம்வேகம்

மனித இனம் தோன்றிய காலம் முதல் வேகத்தின் மீதான நாட்டம் என்றென்றுமே அதிகரித்தே சென்று கொண்டிருக்கின்றது என்றால் மிகையல்ல
.
அனைத்திலும மனித மனம் வேகத்தை விரும்பியதன் பிரதிபலிப்பே இன்று உலகில் ஏற்பட்டுள்ள அனேக முன்னேற்றங்களுக்கு அடிநாதமாக விளங்குகின்றது

வேகம் என்பது விளையாட்டிற்கும் விதிவிலக்கல்ல .விளையாட்டுலகில் அனைத்துவிதமான விளையாட்டுக்களும் இன்னோரன்ன வகையில் வேகம் பெற்றுவந்தாலும் 100 மீற்றர் ஓட்டப்போட்டிகளுக்கிருக்கும் இடம் தனித்துவமானது .

இதன் காரணமாகத்தான் சாதாரண பாடசாலைப்போட்டிகள் முதற்கொண்டு சர்வதேசப் புகழ்மிக்க ஒலிம்பிக் வரையிலும் 100 மீற்றர் போட்டிகள் என்று வந்துவிட்டால் ரசிகர்கள் மத்தியில் பீறிட்டெழுகின்ற உற்சாகத்தையும் பரவச உணர்வையும் வர்ணிப்பதற்கு வார்த்தைகளே கிடையாதென்றவகையில் விளையாட்டு நிகழ்ச்சிகளில் 100 மீற்றர் ஓட்டம் என்பது தனித்துவமானதாக திகழ்கின்றது

100 மீற்றர் ஓட்டப்போட்டியில் வெற்றிபெறுகின்ற வீரரை அன்றேல் வீராங்கனையை உலகின் வேகமான மனிதராக கருதுகின்ற காரணத்தால் அதன் மீதான ஆர்வம் அனைத்துத்தரப்பினர் மத்தியிலும் அதிகமாக இருப்பதற்கு காரணமாகின்றது

இலத்திரனியல் முறையிலான நேரக்கணிப்பு (Electronic Timing)  1968ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது முதலாக இதுவரையில் 100மீற்றர் ஓட்டப்போட்டிகளில் ஆண்களுக்கான உலக சாதனை 12 தடவைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன . ஆண்களுக்கான 100மீற்றர் ஓட்டத்தில் முதன் முறையாக 10செக்கன்கள் என்ற வரம்பை முறியடித்து அதற்கு குறைவான நேரத்தில் ஓட்டத்தை நிறைவுசெய்த வீரராக அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம்  ஹினஸ் திகழ்கின்றார் .

1968ம் ஆண்டு மெக்ஸிகோவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளின் போதே அவர் இந்த உலக சாதனையை ஏற்படுத்தியிருந்தார்
தற்போது ஆண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை ஜமெய்க்கா வீரர் உசெயின் போல்ட் வசமுள்ளது .2009ம் ஆண்டு ஒகஸ்ற் 16ம்திகதி போல்ட் தனது முன்னைய சாதனையை 0.11 செக்கன்களால் குறைத்து 9.58 செக்கன்களில் ஓடி புதிய உலக சாதனையை நிலைநாட்டியிருந்தார்

1.   உசெய்ன் போல்ட்(ஜமெய்க்கா) -9.58 செக்கன்கள் -  16.08.2009 –பேர்லின்

2.   டைஸன் கே (அமெரிக்கா)-9.69 செக்கன்கள் -            20.09.2009- ஷங்காய்

3.   அஸாபா பவல்(ஜமெய்க்கா) -9.72 செக்கன்கள் -       02.09.2008- -லுஸான்

4.   நெஸ்டா கார்டர்(ஜமெய்ககா)-9.78 செக்கன்கள்-       29.08.2010  -ரீடி

5.   மொரிஸ் கிறீன்(அமெரிக்கா)-9.79 செக்கன்கள் -      16.06.1999 – ஏதென்ஸ்



பெண்களுக்கான 100மீற்றர் உலக சாதனை கடந்த 20 வருடங்களுக்கு மேலாக முறியடிக்கப்படாமலேயே உள்ளது
1988ம் ஆண்டு ஜுலை 16ம்திகதி அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் இடம்பெற்ற போட்டியொன்றில்100மீற்றர் தூரத்தை 10.49 செக்கன்களில் ஓடிமுடித்து அமெரிக்க வீராங்கனை ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர் நிலைநாட்டிய சாதனையே இன்னமும் பெண்கள் பிரிவில் உலக சாதனையாகவுள்ளது .

பெண்களுக்கான 100 ஓட்டத்தில்; அதி சிறந்த பெறுதிகள்

1.   ஃபுளொரன்ஸ் கிரிபித் ஜொய்னர்(அமெரிக்கா)  10.49 செக்கன்கள் 16.07.1988-  இன்டியானாபொலிஸ்

2.  கார்மலிடா ஜீற்றர் (அமெரிக்கா)   10.64 செக்கன்கள் 20.09.2009 -ஷங்காய்

3.  மேரியன் ஜோன்ஸ்( அமெரிக்கா)10.65செக்கன்கள் 12.09.1998-ஜொகனஸ்பேர்க்

4.  ஷெலி ஆன்ஃபிரேசர்(ஜமெய்க்கா) 10.73செக்கன்கள் 17.08.2009- பேர்லின்

5.  கிறிஸ்ரின் ஆரோன் (பிரான்ஸ்) 10.73 செக்கன்கள் 19.08.1998- புடாபெஸ்ற்

 100 மீற்றர் ஓட்டத்தைப் பொறுத்தவரையில் சில தருணங்கள் ரசிகர்களால் என்றென்றுமே மறக்க முடியாதவையாக மனதைவிட்டு நீங்காதவையாக நிலைத்திருப்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்

அப்படியான தருணத்திற்கு சொந்தக்காரர் தற்போதுள்ள உசெய்ன் போல்ட்டோ அன்றேல் அஸாபா பவலோ அல்ல மாறாக ஊக்கமருந்துபாவித்தமைக்காக அபகீர்த்திக்குள்ளான கனடா நாட்டைச் சேர்ந்த வீரர் பென் ஜோன்ஸன் என்றால் பார்க்காதவர்களுக்கு சந்தேகம் தோன்றலாம்

 1988ம் ஆண்டு தென்கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் அவர் ஓடிய ஓட்டம் அப்பப்பா இன்று நினைத்தாலும் பரவசத்தின் உச்சத்திற்கு ரசிகர்களைக் கொண்டுசென்றுவிடும் . பென் ஜோன்ஸனின் உருண்டுதிரண்ட கட்டுமஸ்தான உடல்வாகு மிரட்டும் விழிகள் அசூர வேகம் என்பன இன்றும் என் கண்களுக்கு முன்னால் நிழலாடுகின்றது

 ஊக்க மருந்து பாவித்தமை பெருங்குற்றம் என்பதை நானும் ஒத்துக்கொள்கின்றேன் ஆனால் எத்தனை பேர் பாவித்தும் தப்பித்துக்கொண்டார்கள் என்று எண்ணுகையில் இது தெரிந்து தான் நடந்ததா இல்லை சூழ்ச்சியால் நடந்ததா என்பது இன்னமும் புரியாமலேயே உள்ளது

 1988ல் பென் ஜோன்ஸன் ஊக்கமருந்து பாவித்ததாக கண்டுபிடித்தவர்களால் ஏன் 2000ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளில் மேரியன் ஜோன்ஸ் ஊக்க மருந்து பாவித்ததை கண்டுபிடிக்க முடியவில்லை .இறுதியில் மேரியன் ஜோன்ஸே ஒப்புக்கொண்ட பின்னர் தானே அவர் பாவித்தமை தெரியவந்தது

 இப்படியாக எத்தனை வீர வீராங்கனைகள் ஒத்துக்கொள்ளாமலேயே சாதனைக்கு சொந்தங்கொண்டாடியிருப்பர் என்று நினைத்தால் விளையாட்டின் மீதான அபிமானமே இல்லாமல் போய்விடும்

   யார் செய்தாலும் தவறு தவறுதான் .பென் ஜோன்ஸனின் பெயரைக் குறிப்பிட்டது அவர் செய்தது சரியென்று சொல்லவல்ல மாறாக வேகத்தின் அடையாளமாக அபகீர்த்திக்குள்ளான நிலையிலும் என் நினைவலைகளில் வந்துசெல்கின்றமை காரணமாகவே !

உலகத்தில் ஏதேதோ காரியத்திற்காகவெல்லாம் எவ்வளவோ விலை கொடுக்கின்றனர் . ஆனால் வேகத்திற்கான தம் வாழ்வையே விலையாக கொடுக்க நேரிடுவது வீரவீராங்கனைகளைப் பொறுத்தமட்டில் மிகமிக அதிகமானது என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்

Saturday, January 15, 2011

13வது திருத்ததிற்கு அப்பால் அரசியல் தீர்வு

ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது



                              (அருண் ஆரோக்கியநாதர் )




அரசியல் தீர்வு 13வது திருத்தத்தினை விடவும் அதிகமாக 1310 ஆகவே அமையும் ஆனாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்

நேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இலங்கையில் பணியாற்றுகின்ற வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இந்தக்கருத்துகளை வெளியிட்டார்

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளைப் பொறுத்ததாக அனைத்துக் கட்சிகளுடனான இணங்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனினும் இதற்கு எவ்வளவு நாள் எடுக்கும் என கூறமுடியாது மத்திய அரசாங்கத்துடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்கின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன .

ஆனால் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எவ்வகையிலும் இடமில்லை அது நிச்சயமாக வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட நாடொன்றில் விமானத்தையே இறக்க அனுமதிக்கவில்லை என்பதை உதாரணமாக சுட்டிக்காட்டினார். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே தெரிவித்தாகவும் அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார் .

முழுமையான விசாரணைக்கு உத்தரவு

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு இலங்கை கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இலங்கை கடற்படையினரின் தரவுகளுக்கு அமைவாக அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறவில்லை எனத் தெரிகின்றபோதிலும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.     ' முன்னர் எமக்கிடையில் சில ஏற்பாடுகள் இருந்தன எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அமைதிச் சூழலின் அடிப்படையில் இது மாற்றியமைக்கப்படவேண்டும்' என ஜனாதிபதி கூறினார்
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி 'மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வடபகுதியில் மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை மீனவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர் .தற்போது அவர்களால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடியதாகவுள்ளது அந்தவகையில் இரு நாடுகளின் மீனவர்களுக்கிடையில் புரிந்துணர்வீன்மையும் மோதல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவததாகவும் சுட்டிக்காட்டினாhர்

இவ்வாறான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கிடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியமை முக்கியமானதென தெரிவித்த ஜனாதிபதி இது இருநாடுகளும் கடந்த ஜுன் மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இசைவானதெனவும் சுட்டிக்காட்டினார்

இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய அரசாங்கத்தால் விளங்கங்கோரலுக்காக அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ' இந்திய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கத்திற்கும் அவ்வாறான உரிமை காணப்படுகின்றது.இதுபோன்ற சூழ்நிலைகளில் இலங்கை அரசாங்கமும் இதுபோன்ற நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் இது தொடர்பில் எமக்கு எந்தவிதப்பிரச்சனையும் கிடையாது' எனத் தெரிவித்தார்.

                வேண்டுகோள் இன்றியே இந்தியா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறும் இதனை அத்தியாவசியச் சேவையாக கருதி செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார் .

மோசமான காலநிலை காரணமாகவே மட்டக்களப்பிற்கான தனது விஜயம் இரத்துச்செய்யப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி ஆனாலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்திவருவதாக குறிப்பிட்டார் .இந்தியாவின் வெள்ள நிவாரண உதவிகளுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதிபதி இலங்கை வேண்டுகோள் விடுக்காத நிலையிலேயே இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்ததாக தெரிவித்தார்

     மேற்குலகுடனான உறவுகள் வலுவாகவுள்ளது

மேற்குலகுடனான உறவு தொடர்ந்துமே வலுவாக இருந்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததுடன் சில நாடுகளில் இலங்கை தொடர்பான சாதாகமான போக்குகள் முன்னேற்றம் கண்டுவருவதாக குறிப்பிட்டார் .

குடிவரவு தொடர்பான கனடாவின் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் சுவிற்சர்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி புலம்பெயர்ந்த மக்களுடனான உறவை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஏற்கனவே புலம்பெயர்ந்த மக்களில் சிலர் இங்கு அழைத்துவரப்பட்டு உண்மை நிலைமை அவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .

இருந்தபோதிலும் சில தரப்பினர் எதிர்காலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முனையக்கூடும் அத்தகையவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்

இதன்போது ஊடவியலாளர் ஒருவர் இவ்வாண்டில் எந்தெந்த நாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டீர்கள் என வினவினார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி முன்கூட்டியே இதனைக் கூறமுடியாது அப்படிக் கூறினால் பதாதைகளுடன் வந்துநின்றுவிடுவார்கள் அப்படியாக இன்னுமொரு சம்பவம் இடம்பெறுவதை விரும்பவில்லை என நகைச்சுவையுணர்வுடன் கூறினார்

வேறெந்த நாடும் இவ்வளவு வெற்றியைக் கண்டதில்லை

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த ஜனாதிபதி 5000ற்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

.தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி '30வருடகாலமாக பயங்கரவாத்திற்கெதிரான யுத்தத்தின் பின்னர் 6 மாதமளவிலான குறுகிய காலப்பகுதியில் அவர்களை விடுவிக்க முடிந்துள்ளது இது இலகுவான காரியம் கிடையாது வேறெந்த நாட்டாலும் இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்ததில்லை'எனத் தெரிவித்தார் . சான்றுகளின் அடிப்படையில் தடுப்பிலுள்ளவர்களுக்கு எதிராக வழங்குகள் தொடரப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

Friday, January 7, 2011

மங்கிவரும் மகளிர் டென்னிஸ்


உலகிலுள்ள பல்வேறு விளையாட்டுக்களின் ரசிகர்களுக்கும் மகளிர் டென்னிஸ் மீது ஒரு அலாதிப்பிரியம் உண்டு.

இதற்கு ஸ்டெபி கிராப் -கப்ரியேல்லா சபாடினி- கிறிஸ் எவர்ட் - மார்ட்டினா நவரெட்டிலோவா –ஜெனிபர் கப்ரியாட்டி – மொனிகா செலஸ் போன்ற வீராங்கனைகள் மகத்தான டென்னிஸ் ஆற்றலுடன் அழகியலையும் இணைத்து விளையாடியமையே காரணமாக அமைந்தது.

ஆனால் நிகழ்காலப்பகுதியிலோ மகளிர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் படிப்படியாக குறைந்துகொண்டே செல்கின்றது என்பது உணரப்பட்டுள்ள உண்மையாகும் .

தற்போதைய காலத்திலும் அழகுமிக்க வீராங்கனைகள் கவர்ச்சியாக விளையாடுவதை அவதானிக்க முடிந்தாலும் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தக்கட்டுரையின் ஆரம்பத்திலேயே நான் குறிப்பிட்ட வீராங்கனைகள் வெளிப்படுத்திய ஆற்றல்களை தற்போதுள்ளவர்கள் வெளிப்படுத்துவதில்லை என்பதை சாதாரண ரசிகர்களால் கூட புரிந்துகொள்ளமுடியும் .1980களிலுள்ள வீராங்கனைகளை ஒப்பிடக்காரணம் அந்த வீராங்கனைகளையே அறிவுபெற்ற காலப்பகுதியில் சிறுவயதில் காணக்கிடைத்தது

அவர்களுக்கு முன்னர் விளையாடிய பெரும் வீராங்கனைகளான பிலி ஜீன் கிங் - மாங்கிரட் கோர்ட் போன்ற வீராங்கனைகளின் ஆற்றல்களை தொலைக்காட்சிகளுடாக கூட காணக்கிடைக்கவில்லை என்பதால் தால் அவர்களை இங்கே ஒப்பிடவில்லை

தற்போது விளையாடிவரும் வில்லியம்ஸ் சகோதரிகள் அவ்வப்போது சம்பியன் பட்டங்களைக் கைப்பற்றுவது உண்மைதான் .அவர்கள் கவர்ச்சியைக் கிளறும் ஆடைகளை அணிந்து ரசிகர்களை கவர முற்படுவதையும் உணர்ந்துகொள்ளமுடிகின்றது .ஆனால் எனது பார்வையின் வில்லியம்ஸ் சகோதரிகள் பட்டங்கள் பலவற்றை கைப்பற்றியிருந்தாலும் அவர்கள் தமது உடற்பலத்தினை வைத்துக்கொண்டு ''Power Tennis" விளையாடுகின்றனரேயன்றி நுட்பத்திறனுடன் விளையாடிய ஸ்டெபி கிராப் போன்றவர்களின் ஆற்றல்வெளிப்பாடுகளை அவர்களிடத்தில் காணமுடியவில்லை

மரியா ஷரபோவா ஜஸ்ரின் ஹெனின் கிம் கிளைஸ்டர்ஸ் போன்ற வீராங்கனைகள் தற்போதும் விளையாடினாலும் அவர்களிடத்தில் ஆற்றலின் உச்சத்தில் தொடர்ச்சியாக நிலைத்து நின்று அடுத்தடுத்து சம்பியன் பட்டங்களை வெல்லும் திறன் காணப்படவில்லை.

 முதற்தர டென்னிஸ் போட்டிகளில் எத்ததைய சம்பியன் பட்டங்களையும் வெற்றிகொள்ளாமலேயே பலகோடிருபாவை சம்பாதித்த ரஷ்ய வீராங்கனை அனா கோர்னிகோவா போலன்றி மரியா ஷரபோவா தனது டென்னிஸ் வாழ்வில் மூன்று கிராண்ட்லாம் பட்டங்கள் உட்பட பல பட்டங்களை வென்றிருந்தாலும் தற்போது அவரது கவனமும் ஃபெஷன் மொடலிங் எனக்குவிந்துள்ளதால் தற்போது டென்னிஸ் ஆற்றல் வெளிப்பாடுகள் குறைந்துவிட்டன

ரொஜர் பெடரர் ரவேல் நடால் போன்ற வீரர்களின் அபரீதமான ஆற்றல்வெளிப்பாடுகளால் பீற் சாம்பிரஸ் அன்ட்றே அகாஸி; போன்ற ஜாம்பவான்களின் வெளியேற்றத்திற்கு பின்னரும் ஆடவர் டென்னிஸ் மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரிக்கின்றபோதும் மகளிர் டென்னிஸ் மீதான ஆர்வம் மங்கிவருவதற்கு டென்னிஸ் ஆட்டத்தில் அன்றி வேறு துறைகளில் அவதானம் சிதறுவதே காரணமாகும்

Wednesday, January 5, 2011

அழிவை நோக்கிச் செல்லும் உலகில் நமது வகிபாகமென்ன?

இன்று உலக சுற்றாடல் தினம்



விடைபெற்ற 2010ம் ஆண்டு என்றுமில்லாத வகையில் உலகம் காட்டுமிராட்டித்தனம் நிறைந்ததாக போய்விட்டதற்கு சான்றுபகர்கின்றதென்றால் மனிதராகிய எம்மத்தியில் சந்தேகம் தோன்றுவதற்கு பதிலாக சங்கடம் தோன்றுவதற்குத்தான் இடமுண்டு

ஏனென்றால் ஐந்தறிவு மிருகங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திய முக்கிய காரணிகளிலொன்றான மனிதாபிமானம் தொலைந்து மனிதர்கள் மனிதத்தன்மையை வேகமாக இல்லாதொழித்துக்கொண்டிருப்பது ஒருபுறம் நடக்க இயற்கையும் தன் கோரமுகத்தைக் காண்பித்து ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதே இதற்கு காரணமாகும்.

 இயற்கையின் சீற்றத்திற்கும் மனிதர்களின் நடவடிக்கைகளே மூலகாரணமாக இருப்பது நிருபணமாகியிருப்பதே சங்கடத்திற்கு வழிகோலுகின்றது

இன்றைய நிலையில் நாடுகள் தமது பொருளாதாரத்தை வளப்படுத்திக்கொள்வதற்காக மனிதர்களைக் காவுகொடுக்கவே தயங்காத நிலையில் இயற்கையின் கதியை எண்ணினால் கவலைகொள்வதைத்தவிர வேறுவழியில்லை

ஆனால் இயற்கையை மனிதன் தன்செயற்பாடுகளால் அழிக்க முனையும் போது மனிதர்களது வேகத்திற்கு மேலாக பன்மடங்கு அசூரத்தனமாக இயற்கை பதிலடி கொடுத்துவருவதற்கு ஆதாரம் தேடுவதற்கு வரலாற்றில் நாம் பலவருடகாலத்திற்கு பின்னோக்கி பயணிக்க வேண்டியதில்லை

எம்மிடமிருந்து அண்மையில் விடைபெற்ற 2010ம் ஆண்டிலேயே இதற்கான பதிலைத் தேடிவிடமுடியும்

பூமி அதிர்ச்சிகள்- வெப்ப கதிர்வீச்சுக்கள் -வெள்ள அனர்த்தங்கள் -எரிமலை சீற்றங்கள்- அசூர சுறாவளிகள் -கடும்பனிப்புயல் -நிலச்சரிவுகள் -வரட்சிகள் என இயற்கையின் கோரத்தாண்டவத்தில் 2010ம் ஆண்டில் ஆகக்குறைந்தது 5லட்சம் மக்கள் கொல்லப்பட்டதான உறுதிப்படுத்தப்பட்ட சான்றுகள் வெளியாகியுள்ளன.


கடந்த ஒருதசாப்ததிற்கு மேலான காலப்பகுதியில் கடந்தாண்டே மிகவும் பயங்கரமான ஆண்டாக அமைந்ததுடன் கடந்த 40வருடங்களில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளில் கொல்லப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த தொகையிலும் பார்க்க அதிமான மக்கள் 2010ம் ஆண்டிலே இயற்கை அனர்த்தத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது

இயற்கை அனர்த்தங்கள் எதிர்பாராத வகையில் நிகழும் போதிலும் அதனால் ஏற்படும் மோசமான அழிவுகளுக்கு அனேக சந்தர்ப்பங்களில் மனிதர்களையே குறைகூறவேண்டும் என விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்

இதற்கு உதாரணமாக ஹெய்டி மற்றும் சிலி ஆகிய நாடுகளில் கடந்தாண்டு இடம்பெற்ற பூகம்பங்கள் ஒப்புநோக்கப்படுகின்றன

ஹெய்டியில் கடந்தாண்டு ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற பூகம்பத்தில் இரண்டு லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமமானவர்கள் கொல்லப்பட்டனர் .ஆனால் அதைவிடவும் அளவில் 500 மடங்கிற்கும் அதிகமான பெரிய பூகம்பம் சிலியில் இடம்பெற்றபோது அதில் 1000ற்கும் குறைவானவர்களே கொல்லப்பட்டிருந்தனர் .

ஹெய்டியில் திட்டமிடப்படாத வகையில் அமைந்திருந்த அடர்த்திமிக்க மக்கள் குடியிருப்புக்களும் மிகவும் மோசமான முறையில் நிர்மாணிக்கப்பட்டிருந்த கட்டிடங்களும் குடியிருப்புகளுமே ஹெய்டியின் பயங்கர அழிவுகளுக்கு வித்திட்டதாக சுட்டிக்காட்டப்படும் அதேவேளையில் சிலியில் மக்கள் தொகை அடர்த்தி குறைவாக காணப்பட்டமையும் பாதுகாப்பான முறையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த கட்டிடங்களுமே மிகக்குறைவான இழப்புக்களுக்கு காரணமென விஞ்ஞானிகளும் அனர்த்த நிபுணர்களும் குறிப்பிடுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி என்பதையே மையமாகக்கொண்ட மனிதர்களின் கட்டற்ற வேட்கையின் விளைவால் உருவான பூகோள வெப்பமயமாதல் காரணமாக பூமியின் காலநிலை வழமையிலும் பார்க்க முரணானதாக மாறிக்கொண்டிருப்பதாக பூகோள விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் இதனால் கடுமையான காலநிலை மாற்றங்கள் கடந்தாண்டில் பதிவுசெய்யப்பட்டன. இதில் வெப்பக்கதிர்வீச்சு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பவை குறிப்பிடத்தக்கது


கடந்தாண்டு கோடைகாலத்தில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடுமையான வெப்பக்கதிர்வீச்சில் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் .ரஷ்யாவில் ஏற்பட்ட வெப்பக்கதிர்வீச்சு 111 டிக்கிரி வெப்பம் கொண்டதெனவும் இது ரஷ்யாவின் வரலாற்றில் மிகமோசமானதென்பதுடன் நூறாயிரம் ஆண்டுகளுக்கு ஒருதடவையே இவ்வாறான அசாதாரணமான வெப்பக்கதிர்வீச்சு நிகழ்வதாக வரலாற்றுச்சான்றுகள் குறிப்பிடுகின்றன ஆனால் பூகோள வெப்பமயமாதல் காரணமாக இப்படியான நிகழ்வுகள் அடிக்கடி இடம்பெறும் நிகழ்வுகளாக மாறியிருப்பது கவலைக்கிடமானது .

இது மட்டுமன்றி 18 நாடுகளில் கடந்தாண்டிலேயே அந்நாடுகளின் வரலாற்றில் வெப்பமான நாட்கள் பதிவாகியிருக்கின்றன. கடந்தாண்டில் ஏற்பட்ட தனியொரு வெப்பக்கதிர்வீச்சுபுயல்காரணமாக 17000 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர் .

இந்த எண்ணிக்கையானவர் கடந்த 15 ஆண்டுகாலத்தில் உலகில் நிகழ்ந்த ஒட்டுமொத்த விமானவிபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிடவும் அதிகமென சுட்டிக்காட்டப்படுகின்றது. கடந்தாண்டு ஒரு பக்கம் வெப்பக்கதிர்வீச்சென்றால் மறுபக்கம் பாகிஸ்தானில் இடம்பெற்ற வரலாறுகாணாத வெள்ளப்பெருக்கில் 62000 சதுர மைல்கள் பிரதேசம் மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதவாறு வெள்ளத்தால் துண்டாடப்பட்டன .இலஙகையின பரப்பளவைவிடவும் இரண்டுமடங்கிற்கு அதிகமான பிரதேசம் பாகிஸ்தானில் வெள்ளத்தால் துண்டாப்பட்டதென்றால் வெள்ளத்தின்
பரிமாணத்தை விளங்கிக்கொள்ளமுடியும் .


மனிதர்கள் ஏற்படுத்தும் அழிவுகளால் இயற்கை சீற்றமெடுத்த மேற்குறிப்பிட்ட நிகழ்வுகள் எமது நாட்டிற்கு வெளியில் இடம்பெற்றவை என்பதால் அவற்றின் தாக்கங்களை விளங்கிக்கொள்ளமுடியாதவர்கள் கடந்தாண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி இரவுமுதல் அதிகாலை வரையில் கொழும்பில் பெய்த கடும் மழைவீழ்ச்சியையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் எண்ணிப்பார்த்தால் காத்திருக்கும் அபாயத்தின் பயங்கரம் புரிந்துவிடும்


ஒருநாள் பெய்த மழையிலேயே பாராளுமன்றம் உட்பட தலைநகரின் பலபகுதிகள் மூழ்கிவிட்டதென்றால் பாகிஸ்தானில் போன்று தொடர்ச்சியாக வாரக்கணக்கில் மழைபெய்தால் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பது புலனாகிவிடும்



தனிமனிதர்களாகிய நாம் பொலித்தின் பாவனையை குறைத்தல் .வீடுகளிலும் நாம் வாழும் சூழலிலுமுள்ள கழிவுநீர் வழிந்தோடும் பகுதிகளை நேர்த்தியாக வைத்திருந்தல் போன்ற சிறிய செயற்பாடுகளுடாகவே சுற்றாடலை சிறப்பாக வைத்திருப்பதற்கு பங்களிக்கமுடியும் .

உலக சுற்றாடல் தினமாகிய இன்றைய நாளில் நாம் வாழும் இந்த உலகம் மனிதர்களின் செயற்பாடுகள் காரணமாக வேகமாக அழிவுப்பாதையை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதனை உணர்ந்து அதனைத் தவிர்க்க முடியாவிட்டாலும் தாமதிப்பதற்கு எம்மால் செய்யக்கூடிய சிறிய செயற்பாடுகளையேனும் செய்தாக வேண்டும் என்பதை சிந்தனையில் நிறுத்தி செயற்படவேண்டும்

Saturday, January 1, 2011

கண்ணிவெடி கவனம்

விழிப்புணர்வு என்றென்றும் அவசியம் 



இலஙகையில் யுத்தம் இன்னமும் முடிவிற்கு கொண்டுவரப்படவில்லை என்ற அறிவிப்பை சாதாரணநபரொருவர் விடுத்திருந்தால் அதனை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம். கடந்த 21ம்திகதி தியத்தலாவையில் இடம்பெற்ற இராணுவ பயிற்சிநிறைவு வைபவத்தில் ஜனாதிபதி இவ்வறிவிப்பை விடுத்தமை அனைத்துதரப்பினரதும் கவனத்தை ஈர்த்திருந்தது

ஜனாதிபதி தனது உரையின் போது 'வடக்கில் இடம்பெயர்ந்த மக்களை முழுமையாக மீளக்குடியமர்த்தி அப்பகுதியில் கண்ணிவெடிகளை அகற்றியபின்னரே யுத்தம் முடிவிற்கு கொண்டுவந்ததாக அர்த்தம்' எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

2009ம் ஆண்டு மே 19ம் திகதியன்று யுத்தம் நிறைவிற்கு வந்ததாக பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விடுத்த அறிவிப்பின் பின்னர் ஆளும் தரப்பினர் முதற்கொண்டு பிரதான எதிர்க்கட்சியினரும் பெரும்பான்மை மக்களும் இவ்விதமான கருத்துக்களையே தெரிவித்துவந்தநிலையில் தியத்தலாவையில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தில் இருந்து
கண்ணிவெடிகள் எவ்வளவு பாரதூரமானவை என்பது மீளவலியுறுத்தப்பட்டிருக்கின்றது .

சிறிய மிதிவெடிகள் பெரும் கவசத்தாங்கி அழிப்பு மிதிவெடிகள் வெடிக்காத நிலையிலுள்ள குண்டுகள் முதலான பொருட்கள் ஆகியன கண்ணிவெடிகள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன.

இயல்புவாழ்க்கை என அனைத்து விடயங்களிலும் தாக்;;;கம் செலுத்துகின்ற கண்ணிவெடிகள் யுத்தம் நிறைவடைந்து பல்லாண்டு காலங்களுக்கும் ஆபத்துநிறைந்தவிடயமாக இருக்கப்போகின்றன.

அடிப்படைவசதிகளுடன் மீள்குடியேற்றப்பட்டதாக அரசாங்கமும் முகாம்களில் இருந்து கொண்டுபோய் எவ்வித வசதிகளும் இன்றி வெறுமனே கொட்டப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகளும் குறைகூறும் மக்களின் நிலை கண்ணிவெடிகளால் கவலைக்குரியதாகவே காணப்படுகின்றது

மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்த மக்களுக்கு மட்டுமன்றி வெளியிலிருந்து அப்பகுதிகளுக்கு பல்வேறு தேவைகளின் நிமித்தம் விஜயம் செய்கின்றவர்களுக்கும் கண்ணிவெடிகள் பாரிய அச்சுறுத்தலாக இனிவரும் காலங்களில் இருக்கப்போகின்றன

2009ம் ஆண்டு ஜனவரி 1ம்; திகதியிலிருந்து 2010ம் ஆண்டு நவம்பர் 30ம்திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 432 சதுரகிலோமீற்றர்கள் நிலப்பரப்பு 'நுஒpடழளiஎந சுநஅயெவெள ழக றுயச(நுசுறு)' தொழில்நுட்பமுறை மூலமான கண்ணிவெடியகற்றல் நடவடிக்கையை அடுத்து மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டதாக ஐக்கியநாடுகள் சபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மதிப்பீடுகளுக்கு அமைவாக பெரும்பாலும் வடக்கிலும் கிழக்கில் ஆங்காங்கே விடப்பட்ட சிலபகுதிகளிலுமாக 536சதுரகிலோமீற்றர் பிரதேசம் கண்ணிவெடிகளால் நிறைந்த பிரதேசமாக அடையாளங்காணப்பட்டுள்ளது .

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலுள்ள பல கிராமசேவகர் பிரிவுகளில் இன்னமும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவேண்டியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உதய மெதவெலவின் தரவுளுக்கு அமைவாக இராணுவத்தினரின் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பிரிவு(ர்னுரு) இதுவரையில் 306300 கண்ணிவெடிகளை அகற்றி அழித்துள்ளதாகவும் 1866சதுர கிலோமீற்றர் பிரதேசம் இயந்திர மற்றும் மனித முறைகளைப்பயன்படுத்தி துப்பரவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடப்படுகின்றது.

இலங்கை இராணுவத்தினரின் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பிரிவுடன் ஹலோ டிரஸ்ற் இ மெக் எனும் மிதிவெடி ஆலோசனைக்குழு உட்பட 6 சர்வதேச நிறுவனங்களும் 2 உள்ளுர் நிறுவனங்களும் தற்போது இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன

இவற்றில் மொத்தமாக 2000ற்கு அதிகமான பணியாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளனர்

கண்ணிவெடியகற்றல் என்பது மிகவும் செலவுமிக்க நடவடிக்கையாகும் . கண்ணிவெடியொன்றை புதைப்பதற்கு 3முதல் 10 அமெரிக்க டொலர்கள் வரை செல்லும் அதேவேளை ஒரு கண்ணிவெடியை அகற்றுவதற்கு 1000 அமெரிக்க டொலர்கள் வரை செலவாவதாக உலகளவில் ஏற்கப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 7ம்திகதியன்று ஹொட்டல் கலதாரியில் இடம்பெற்ற நிதி நிறுவனங்களின் பணிப்பாளர்கள் மாநாட்டில் உரையாற்றிய இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் கண்ணிவெடி அகற்றுகின்ற செயற்பாட்டை அரசசார்பற்ற நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் ஆகக்குறைந்தது 2பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டிருக்க வேண்டியேற்பட்டிருக்கும் என்றும் ஒரு கண்ணிவெடியை அகற்ற சுமார் 2000 அமெரிக்க டொலர்களைச் செலவிட்டிருக்க வேண்டியேற்பட்டிருக்கும் எனவும் கூறியிருந்தார் .

இறுதியுத்தம் என்றும் நான்காவது ஈழப்போர் என்றும் அழைக்கப்பட்ட கடைசியுத்தத்திற்கு 2006ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டுவரையில் 6பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு குறைவான தொகை செலவிடப்பட்டிருந்ததாகவும் இதன்போது மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியிருந்தார்.

கண்ணிவெடியகற்றல் செலவுமிக்க நடவடிக்கை என்பதை விடவும் இலங்கையைப் பொறுத்தவiரையில் கண்ணிவெடியகற்றுபவர்கள் முகங்கொடுக்கின்ற சவால்கள் ஏராளம்.

ஒழுங்கமைவின்றி அங்கொன்றுமிங்கொன்றுமாக புதைக்கப்பட்டுள்ளமை புதைத்துவைக்கப்பட்ட கண்ணிவெடிகள் தொடர்பான தரவுகள் ஆவணப்படுத்தப்படாமை போதியகண்ணிவெடியகற்றும் இயந்திரங்கள் இன்மை என்பனவும் இவற்றில் அடங்கும்

 
தற்போதைய நிலையில் இலங்கையில் மூன்று விதமான கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதில்

 1)மனிதவலுவைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கண்ணிவெடியகற்றல் செயற்பாடு

2) கண்ணிவெடிகளை கண்டறியும் நாய்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் மனித வலுவுடனான கண்ணிவெடியகற்றல் செயற்பாடு

 3) இயந்திரங்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற கண்ணிவெடிகயகற்றல் செயற்பாடு என்பனவே இவையாகும்

சீரிய நிலமாக இருந்தால் மனிதர்கள் நாளொன்றிற்கு 25சதுர மீற்றர்கள் வரையான பகுதியில் கண்ணிவெடியகற்றலை மேற்கொள்ளமுடியும். பொஸினா மெஸின் ஃபிளெய்ல் மெஸின் என அழைக்கப்படுகின்ற கண்ணிவெடியகற்றும் இயந்திரங்களால் நாளொன்றிற்கு 2000 சதுர மீற்றர் பகுதியை சுத்திகரிக்கமுடியும்

என்னதான் இயந்திரங்களால் விரைவாக சுத்திகரிக்கமுடிந்தாலும் மனிதர்களாலேயே கண்ணிவெடியகற்றலை நேர்த்தியாக சாதுரியமாக மேற்கொள்ளமுடியும் என நிருபிக்கப்பட்டுள்ளது இயந்திரங்கள் கண்ணிவெடியகற்றலை மேற்கொள்ளும் போது கண்ணிவெடிகள் முற்றிலுமாக அகற்றப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுவதே இதற்கு காரணமாகும்

கண்ணிவெடி அபாயமும் விழிப்புணர்வுக் கல்வியும் 

யுத்தங்கள் ஓய்ந்து பன்னெடுங்காலம் கண்ணிவெடிகள் இயங்குநிலையில் காணப்படும் தன்மை கொண்டவை என்பதால் அதன் ஆபத்துக்கள் குறித்து என்றென்றும் அவதானமாக இருக்கவேண்டும்

ஓரிடத்தில் கண்ணிவெடி முழுமையாக அகற்றப்பட்டுவிட்டதென கண்ணிவெடி நிபுணர்களாலேயே உறுதிபடக்கூறிவிடமுடியாது கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் பகுதிக்கு நேரிலே அண்மையில் சென்றிருந்தபோது கண்ணிவெடியகற்றுகின்றவர்கள் நிலமட்டத்தில் இருந்து 15சென்ரிமீற்றர்கள் வரையான ஆழப்பகுதியிலேயே அவர்களின் செயற்பாடுகளை மேற்கொள்வதை அவதானித்தேன் .

 மழை உட்பட காலநிலை மாற்றம் மனிதரின் செயற்பாடுகள் காரணமாக 15 சென்ரீமீற்றர் ஆழத்திற்கு கீழுள்ள பகுதிக்குள் கண்ணிவெடிகள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றும் வாய்ப்பு இல்லாது போய்விடுகின்றது .பின்னர் ஒரு காலத்தில் அக்கண்ணிவெடிகள் வெளிக்கிளம்புகின்றபோது அதனால் ஆபத்துக்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகியது

கண்ணிவெடிகள் எத்தகைய ஆபத்தைக்கொண்டவை என கண்ணிவெடி விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தொண்டரான வின்சன்ற் ஜேசுதாசன் என்பவரிடம் வினவியபோது முதலில் கண்ணிவெடிகள் சாகாவரம் பெற்றவை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும் .அவை ஒரு குடும்பத்தையோ சமூகத்தையே நிர்மூலமாக்கக்கூடிய பயங்கரமானவை .இதனால் தான் சமூகத்திற்கு உதவும் நோக்குடன் கண்ணிவெடி விழிப்புணர்வு பணியில் தாம் ஈடுபடுவதாக அவர் கூறினார்


பாடல்கள் மூலமும் கிராமிய மணம் கமிழ்ந்த கதைகள் மூலமும் மன்னார் வவுனியா மாவட்டங்களில் கண்ணிவெடி விழிப்புணர்வை மேற்கொண்டுவரும் இவர் மக்கள் மனங்களில் நின்றுநிலைக்கும் தமிழ் சினிமா பாடல்களின் இசையையும் தனது வரிகளையும் கொண்டு பாட்டிசைக்கும் பாங்கு அலாதியானது

'மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணுகேளு' என்ற பாடலை மைன்ஸ் இருக்கு; ஷெல் இருக்கு என்றும் 'ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவ வாங்கமுடியுமா' என்ற பாடலை ஆசைப்பட்ட திசைகளெல்லாம் காலிருந்தா போகலாம் இல்லாட்டி போகமுடியுமா என்றும் இப்படியாக பல பாடல்களை பாடி விழிப்புணர்வை ஊட்டிவருவது பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் மெய்சிலிர்க்கவைக்கின்றது

வின்சன்ற் ஜேசுதாசன் போன்றவர்களின் நோக்கம் இலங்கையைப் பொறுத்தவரையில் நிறைவேறிவருவதை அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்கள் கோடிட்டுக்காட்டுகின்றன


கண்ணிவெடி அபாய விழிப்புணர்வுக் கல்வி காரணமாக இலங்கையில் இவ்வருடத்தில் கண்ணிவெடி இழப்புக்கள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது .இவ்வருடத்தில் கண்ணிவெடிகளில் சிக்கி 18 சிறுவர்கள் அடங்கலாக 38பேர் காயமுற்றுள்ளதாகவும் இவர்களில் 4சிறுவர்கள் உட்பட 7பேர் பலியானதாகவும் ஒக்டோபர் மாத இறுதியில் வெளியான யுனிசெவ் புள்ளிவிபரத்தில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது .

ஆயுதமோதல் நிறைவடைந்தபின்னர் கடந்தபோன 12மாதகாலப்பகுதியில் கண்ணிவெடிகாரணமாக மாதமொன்றிற்கு 3பேர் இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .இது மோதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பெரிதும் குறைவானதென சுட்டிக்காட்டப்படுகின்றது

2001ம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் 172பேர் அளிவில் மாதமொன்றிற்கு கண்ணிவெடியால் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளையில் கம்போடியாவில் மாதமொன்றிற்கு 65பேர் அளவில் கண்ணிவெடிப்பாதிப்பிற்குள்ளாகினர் .

இவ்வாண்டில் முதற்பத்து மாதங்களிலும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளைச் சேர்ந்த 308000 பேருக்கும் கண்ணிவெடி விழிப்புணர்வுகல்வி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் மோதல் இடம்பெற்ற பகுதியைச் சேர்ந்த மக்களில் 80 சதவீதத்திற்கு அதிகமானவர்கள் கண்ணிவெடி அபாய சமிஞ்கைகளை அறிந்துவைத்திருப்பது அண்மையில் மிதிவெடி ஆலோசனைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட கருத்துக்கணிப்பில் இருந்து வெளியாகியிருந்தது

என்னதான் விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும் மக்கள் அறிவுபெற்றாலும் அபாயம் என்றே தெரிந்துகொண்டே செயற்பாடுகளில் ஈடுபடுவதே கண்ணிவெடி அபாய கல்வியை மேற்கொள்பவர்களுக்கு முன்பாகவுள்ள மிகப்பெரிய சவாலாக உள்ளதென சுட்டிக்காட்டப்படுகின்றது

விவசாயத்திற்காகவும் இன்னோரன்ன தேவைகளுக்காகவும் நிலத்திலுள்ள காடுபற்றிய பகுதிகளை அன்றேல் குப்பைகளை எரித்தல் இரும்புபொருட்களை சேகரித்தல் குழி தோண்டுதல் காடுகளில் விறகு சேகரித்தல் பழங்கள் காய்கறிகள் தேன் சேகரித்தல் போன்றவற்றுடன் குளங்கள் ஏரிகளில் மீன்பிடித்தல் என்பனவும் கண்ணிவெடி அபாயத்தை அதிகரிக்கின்ற விடயங்களாக காணப்படுகின்றன

18வயதுமுதல் 45வயதுடையவர்களே கண்ணிவெடிகளால் அதிகபாதிப்புக்களை எதிர்கொள்வதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது மொத்த இழப்புக்களில் 20வீதமானவை இந்தப்பிரிவைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்

இலங்கையைப் பொறுத்தளவில் ஏனைய துறைகளைப் போன்றே போதிய நேர்த்தியான தரவுகள் இன்மை கண்ணிவெடியகற்றல் துறையிலும் காணப்படுகின்றது இருப்பினும் கிடைக்கப்பெற்ற தரவுகளுக்கு அமைவாக 1999ம் ஆண்டுமுதல் 2008ம் ஆண்டுவரையான காலப்பகுதியில் 1272 கண்ணிவெடி விபத்துசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் இதில் 117பேர் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2009ம் மற்றும் 2010ம் ஆண்டுகளில் கண்ணிவெடி விபத்து சம்பவங்களில் குறைவுகள் ஏற்படுவதை புள்ளிவிபரங்கள் கூறினாலும் நடைபெறும் அனைத்துசம்பவங்களும் பதிவுசெய்யப்படுகின்றனவா என்ற ஆதங்கங்களும் மக்கள் மத்தியில் காணப்படுவதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்


கண்ணிவெடி ஆபத்து என்பது இலகுவில் புறக்கணித்துவிடமுடியாததொன்று என்பதை மீண்டுமாக அழுத்திக்கூறுவதுடன் இதுபற்றிய விழிப்புணர்வு ஒரிரு நாட்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல் காலாகாலத்திற்கும் தீவிரமாக முன்னெடுக்கப்படவேண்டும்

பாதுகாப்பும் அபிவிருத்தியும்

இலங்கையில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தம் நாட்டு மக்களின் உயிர் உடமை மற்றும் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் பாரதூரமானவை.

யுத்தத்தில் எத்தனை உயிர்கள் காவுகொள்ளப்பட்டன என்பது குறித்த தெளிவான தரவுகள் இல்லாமை போன்றே மக்களின் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த தெளிவான தரவுகள் காணப்படவில்லை

யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதாக அறிவிக்கப்பட்டு ஒன்றரை வருடங்கள் கடந்து விட்ட நிலையிலும் இதுபற்றிய உத்தியோகபூர்வமான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான எத்தனிப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாக அறியக்கிடைக்கவில்லை .

யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஐபிஎஸ் எனப்படும் கொள்கை கற்றலுக்கான நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் பிரகாரம் 1984ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட தொகையானது ஏறத்தாழ இலங்கையின் வருடாந்த மொத்த தேசிய உற்பத்தியின் நான்கு மடங்கிற்கு சமனானவை என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி அநுர ஏக்கநாயக்க கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக தெரிவித்திருந்தார்.

யுத்தத்திற்காக செலவிடப்பட்ட இந்தத்தொகை அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருக்குமாக இருந்தால் இலங்கை தற்போது மலேசியாவின் அபிவிருத்தி நிலையை அடைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தத்தினால் அசையாச் சொத்துக்களுக்கும் நிலப்பகுதிகளுக்கும் ஏற்பட்ட நேரடித்தாக்களுக்கு மேலாக யுத்தத்தினால் ஏற்பட்ட நேர்மறைச் செலவு புரிந்துகொள்ளப்பட்டதிலும் பார்க்க மிக மிக அதிகமானதெனவும் வர்த்தக சம்மேளனத்தலைவர் கூறியிருந்தார்.

அவரது கூற்றில் பல உண்மைகள் புதைந்துகிடக்கின்றன. உதாரணமாக யுத்தம் கடந்தாண்டுடன் நிறைவடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் அது ஏற்படுத்திய தாக்கம் தற்போதும் பெருமளவில் உணரப்படுகின்றது .இதற்கு அண்மையில் நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத்திட்டம் சான்று பகர்கின்றது .

யுத்தம் நிறைவுபெற்ற பின்னரும் கூட பாதுகாப்பிற்கான செலவீனத்தை இன்னமும் குறைக்க முடியாத யதார்த்த நிலை காணப்படுகின்றது .

பாதுகாப்பு அமைச்சிற்கென இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் 21521 கோடியே 96லட்சத்து 40 ஆயிரம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது .இது கடந்த முறையைவிடவும் 1300 கோடி ருபா அதிகமானதாகும்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் நாட்டின் பாதுகாப்புக்கு ஏன் இவ்வளவு நிதி என்கின்ற கேள்விகள் கேட்பதற்கும்; அதற்குப் பதிலளிப்பதற்குமான கடப்பாடுகளை அரசியல் வாதிகளுக்கும் அரச அதிகாரிகளுக்கும் ஒதுக்கிவிட்டு பாதுகாப்பு என்ற விடயத்திற்காக செலவிடப்படுகின்ற நிதியானது நாட்டு மக்களிற்காகவும் அபிவிருத்திக்காகவும்  செலவிடப்பட்டிருக்குமேயானால் எவற்றைச் செய்திருக்கமுடியும் என இங்கே ஆராய்ந்துபார்க்கின்றோம் .

2008ம் ஆண்டு பெப்ரவரி மாதம் வெளியான மொன்டாஜ்(MONTAGE) சஞ்சீகைக்காக காலஞ்சென்ற முன்னாள் விமானப்படைத்தளபதி எயார் சீப் மார்ஷல் ஹரி குணதிலக்க எழுதியிருந்த கட்டுரையொன்றிலிருந்து மேற்கோள் காட்டுவது இதனை விளக்குவதற்கு பெருந்துணையாக அமையும் எனக்காண்கின்றேன்.

யுத்தம் ஆரம்பமான 1983ம் ஆண்டு காலப்பகுதியில் பாதுகாப்பிற்கான செலவு 1.75 பில்லியன் ரூபா அதாவது 175 கோடி ருபா மாத்திரமே இதன் படி நாளொன்றிற்கான பாதுகாப்பு செலவீனம் 4.79மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டியிருந்த முன்னாள் விமானப்படைத்தளபதி 24வருடகாலப்பகுதியில் (கட்டுரை 2008ல் வெளியாகியபோது) இந்த தொகை 110 மடங்கிற்கு அதிகமாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தார்  .

2008ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்டிருந்த தொகை 166பில்லியன் ரூபா ( நாளொன்றிற்கு 456.4மில்லியன் ரூபா) இந்தக்கட்டுரை வெளியான போது வரவுசெலவுத்திட்டத்தில் பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையானது வருடமுடிவில் 200பில்லியன் ரூபாவைத்தாண்டும் (நாளொன்றிற்கு 550மில்லியன் ரூபா) என முன்னாள் விமானப்படைத்தளபதி எதிர்வுகூறியிருந்தார் .அதன்படியே இறுதியில் நடந்தேறியது

பாதுகாப்பு படைத்தரப்பைச் சேர்ந்தவராக இருந்தபோதும் அவர் சுட்டிக்காட்டிய விடயமே அந்தக்கட்டுரையில் அவதானத்தை மிகவும் ஈர்த்திருந்தது .யுத்தத்திற்கு செலவிடப்படும் தொகையை இந்நாட்டிலுள்ள வறியவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கு செலவிட்டிருந்தால் (500சதுர அடிX ரூபா 2000) என்ற அளவில் நாளொன்றுக்கு 300வீடுகள் அன்றேல் மொத்தமாக 109500 வீட்டு அலகுகளை 2006ம் ஆண்டில் அமைத்திருக்க முடியும் .நாளொன்றுக்கு 400 வீடுகள் என்ற அடிப்படையில் 2007ம் ஆண்டில் 146000 வீடுகளை அமைத்திருக்க முடியும் .

 நாளொன்றிற்கு கிட்டத்தட்ட 550 வீடுகள் என்ற அடிப்படையில் 2008ம் ஆண்டில் 200750 வீடுகளை அமைத்திருக்க முடியும் . 2006 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளுக்காக பாதுகாப்பிற்கு ஒதுக்கப்பட்ட தொகையைக் கொண்டு மொத்தமாக 456250 வீடுகளை அமைத்திருக்க முடியும் என முன்னாள் விமானப்படைத்தளபதி ஏயார் சீப் மார்ஷல் ஹரி குணதிலக்க சுட்டிக்காட்டியிருந்தார். இதனை இன்னுமொரு விதத்தில் குறிப்பிடுவதாயின் 2006 முதல் 2008ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் யுத்தத்திற்காக செலவிடப்பட்ட (467பில்லியன் ரூபா)தொகையைக் கொண்டு ஏறத்தாழ 9 மகாவலி அபிவிருத்தித்திட்டங்களை (1978ம் ஆண்டு காணப்பட்ட செலவில்) அமைத்திருக்க முடியும் எனவும் உதாரணம் காண்பித்திருந்தார் .

முன்னாள் விமானப்படைத்தளபதியின் கட்டுரை 2008ம் ஆண்டில் வெளியான பின்னர் இதுவரையில் மூன்று வரவுசெலவுத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவிட்டன .ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு செலவு முன்னையதிலும் அதிகரித்திருப்பதை வைத்து நோக்கும் போது இந்தத்தொகையைக் கொண்டு எத்தனை வீடுகளைக் கட்டிமுடித்திருக்க முடியும் என ஊகிக்கமுடியும் .இது நிச்சயமாக ஒரு மில்லியன் இலக்கை தாண்டும் என்பது புலனாகின்றது.

இம்முறை வரவு செலவுத்திட்டத்தை சமர்பித்து உரையாற்றிய ஜனாதிபதி அடுத்த 06 வருடங்களில் ஒரு மில்லியன் வீடமைப்பு அலகுகளை அபிவிருத்தி செய்வதற்கு உறுதியெடுத்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார் .

வடபகுதியில் மாத்திரம் 160000 வீடுகள் புனரமைப்பிற்குட்படுத்தப்படவோ அன்றேல் மீளக்கட்டப்படவோ வேண்டியுள்ளதாக இவ்வருடத்தின் முற்பகுதியில் வெளியாகியிருந்த ஐக்கியநாடுகள் சபையின் மதிப்பீடுகளில் இருந்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது
.
வடக்கில் மட்டுமன்றி நாடெங்கிலுமுள்ள வீடற்றவர்களுக்கும் வீடுகள் அவசியமானவர்களுக்கும் புதிதாக வீடுகளை அமைத்துக்கொடுப்பதற்கு பாதுகாப்பிற்கொதுக்கப்படும் நிதி தாராளமாக போதும் என்பதை முன்னாள் விமானப்படைத்தளபதியின் மதிப்பீடுகளின் அடிப்படையில் ஒப்புநோக்குகையில் புரிந்துகொள்ளமுடியும்.

அதனையும் தாண்டி யுத்தத்திற்கு செலவிடப்பட்ட தொகை அபிவிருத்திக்கு செலவிடப்பட்டிருக்குமானால் மலேசியாவின் நிலையை அடைந்திருக்க முடியும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமையை நோக்குகின்றபோது இன்னுமொரு விடயத்தை புரிந்துகொள்ளலாம் .

தற்போதைய நிலையில் இலங்கையின் பொருளாதாரத்தை 42பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் இலங்கையர்களின் தலாவருமானம் சராசரியாக 2000 அமெரிக்க டொலர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது .இதனை வைத்துக்கொண்டு மலேசியாவின் நிலைமையை நோக்கமுடியும்

 .தென்கிழக்காசியாவின் 3வது பெரும்பொருளாதாரமாக விளங்கும் மலேசியாவின் பொருளாதாரம் 188பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்படுவதுடன் தலாவருமானம் 7000 அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளது அந்தளவில் நாம் யுத்தம் காரணமாக எந்தளவிற்கு பின்தங்கியிருக்கின்றோம் என்பது தெளிவாகின்றது .

இனிவருங்காலத்திலேனும் சந்தேகங்களைக் களைந்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதன் மூலமாக இதுவரை இழந்த அபிவிருத்தியைக் காண்பதற்கு சாதாரண மக்கள் முதற்கொண்டு அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் வரையில் முழுமனத்தோடு செயற்படவேண்டும்

மீள்குடியேற்றம் முழுமைபெறுவது எப்போது?


இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் எப்போது முழுமைபெறும் என்பது பல்வேறுதரப்பட்டவர்களதும் கரிசனைக்குள்ளான விடயமாக தொடர்ந்தும் இருந்துகொண்டிருக்கின்றது
.
யுத்தம் நிறைவுபெற்றதாக பிரகடனப்படுத்தப்பட்டு 18மாதங்கள் உருண்டோடிவிட்ட நிலையிலும் அரசியல் மனிதாபிமான களங்களில் ஓங்கியொலிக்கின்ற விடயமாக மீள்குடியேற்றம் காணப்படுவதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

வடக்கில் யுத்தம் தீவிரமடையத்ததொடங்கிய 2008ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்கு பின்னர் அரசசாங்க கட்டுப்பாட்டுப்பகுதிக்கு இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் சுமார் 15 ஆயிரம் பேர் மாத்திரமே மீள்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளதாகவும் இவர்கள் இவ்வருட இறுதிக்குள்ளாக மீள்குடியமர்த்தப்படுவர் என இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் நம்பிக்கை வெளியிடப்பட்டிருந்தது

எனினும் இதனை இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கான திட்டவட்டமான காலக்கெடுவென எந்தத்தரப்பினரும் அறிவிக்கவில்லை.
இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் ழுழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை

 மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு உரிய வசதிகளோ நிவாரணங்கள் வழங்கப்படவில்லை அவர்கள் சொல்லோணா துன்பங்களை எதிர்நோக்கிவருகின்றனர் என எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தரப்பினர் தெரிவித்துவருகின்ற அதேவேளை வடக்கில் மீள் குடியேற்றம் என்பது சுலபமானதல்ல .சகல கட்டமைப்புக்களும் அழிக்கப்பட்ட நிலையில் பெரும் தொகையான கண்ணிவெடிகள் புகைக்கப்பட்ட சூழ்நிலையில் இந்தப்பணிகளை மேற்கொள்வதாக அரச தரப்பில் பதிலளிக்கப்படுகின்றது

.

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் கடந்த மே மாதத்தில் பின்னர் காணப்பட்ட நிலையில் இன்று பாரிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதை புள்ளிவிபரங்கள் உணர்த்திநிற்கின்றன.

கடந்த வருடத்தின் மே மாத இறுதிப்பகுதியில் வவுனியா முகாம்களில் சுமார் மூன்று லட்சமாக காணப்பட்ட இடம்பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை தற்போது பத்திலொரு பங்கைவிடவும் குறைந்திருக்கின்றது
.
வுன்னியுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மற்றும் முகாம்களாக மாற்றப்பட்ட ஆனந்த குமாரசுவாமி நிவாரணகிராம் கதிர்காமர் நிவாரணகிராமம் அருணாச்சலம் நிவாரணகிராமம் ராமநாதன் நிவாரண கிராமம் ஆண்டியாபுளியங்குளம் முஸ்லிம் மகாவித்தியாலம் அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் செட்டிகுளம் மகாவித்தியாலயம் கோமரசன் குளம் மகா வித்தியாலயம் பூந்தோட்டம் கல்வியியல் கல்லூரி நெலுங்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் தாண்டிக்குளம் மகா வித்தியாலயம் சூடுவெந்தபுலவு சுமதிபுர வீரபுரம் நலன்புரி நிலையம் ஷோன் 4(வலயம் 4) அமைக்கப்பட்ட 16 முகாம்களில் தற்போது கதிர்காமர் ஆனந்த குமாரசுவாமி மற்றும் அருணாச்சலம் ஆகிய மூன்று முகாம்கள் மாத்திரமே எஞ்சியுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

 இந்த முகாம்களில் அனுமதிப்பத்திரத்தடன் வெளியே சென்றுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையையும் சேர்த்துப்பார்க்கின்றபோது 30.11.2010 காலப்பகுதியில் மொத்தமாக (17977103331) 21308  பேர் மீளக் குடியேற்றப்பட வேண்டியுள்ளமை புலனாகின்றது

கடந்தவருடத்தில் வன்னி யுத்ததத்தால் இடம்பெயர்ந்தவர் பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட மூன்று லட்சம் என பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர் .

ஆனால் இதுவரையில் மீளக்குடியமர்த்தப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் தொடர்ந்தும் முகாம்களின் உள்ளவர்களின் எண்ணிக்கையை அவதானிக்கின்றபோது இந்த எண்ணிக்கை( 252064 1021308) 273372 ஆக இருப்பதை விளங்கிக்கொள்ளமுடியும்
.
இது தொடர்பாக மீள்குடியேற்ற அமைச்சின் உயர் அதிகாரியொருவரிடம் வினவியபோது வன்னியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வந்த ஆரம்பகாலப்பகுதியில் பல இடங்களில் ஒரே ஆட்களை திரும்பத்திரும்ப பதிந்தமை காரணமாக மொத்த எண்ணிக்கை அதிகமாக கூறப்பட்டதாகவும் ஆனால் தற்போது அத்தவறுகள் நிவர்த்திக்கப்பட்ட நிலையில் தற்போதைய எண்ணிக்கையே இறுதியானதாக காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார் .

மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பல கடந்து போயுள்ள போதிலும் முகாம்களில் எஞ்சியிருக்கின்ற மக்கள் அடுத்துவரும் மாதகாலப்பகுதியில் மீள்குடியமர்த்தப்படக்கூடும் என்ற நம்பிக்கைகள் தற்போது தெரிவிக்கப்படும் கருத்துக்களில் வெளியாகியுள்ளன.
அந்தவகையில் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்தோருக்கான மூன்று முகாம்களும் மூடப்படும் நாட்கள் அன்றேல் மூடப்பட்டதாக அறிவிப்பு வெளியாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை என்றே கூறவேண்டும் .

                                      காத்திருக்கும் பெரும் சவால்

வன்னியுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் முற்றுப்பெறுகின்ற காலம் அண்மிக்கும் நிலையில் இலங்கைக்கு முன்பாக பாரிய சவாலகள் காத்திருக்கின்றன .

முகாம்களில் இருந்து மீள் குடியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் தமது சமூகத்துடன் சேர்ந்துவாழும் சூழலை ஏற்படுத்துதல் அவர்களுக்குத் தேவையான ஆவணங்களை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான விடயங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை செய்துகொடுத்தல் சொந்தக்காலில் நிற்கத்தக்கதான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தல் போன்ற உடனடித் தேவைகளுக்கு அப்பால் அம்மக்களின் எதிர்காலம் தொடர்பாக நிலவக்கூடிய அச்சங்களைக் களைதலும் பாதுகாப்புணர்வை ஏற்படுத்தலும் முக்கியமானதாகும்
.
தற்போது மீள் குடியேற்றத்திற்காக தமது கிராமங்களுக்கு செல்கின்ற மக்கள் தமது கிராமசேவகர்களிடமும் உதவி அரசாங்க அதிபரிடமும் பதிவுகளை மேற்கொள்வதற்கு அப்பால் இராணுத்தினரது பதிவுகளுக்கும் உட்படவேண்டியுள்ளதாக கூறுகின்றனர்

.இதன்போது தமக்கென இராணுவத்தினர் வழங்குகின்ற இலக்கத்துடன் புகைப்படமெடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர் .இது குறித்த பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவற்காகவே மேற்கொள்ளப்படுவதாக இராணுவத்தினர் கூறுகின்றனர்
.
இருந்தபோதிலும் இவ்வாறான ஐயப்பாடுகளை ஆரம்பத்திலேயே களைவது மக்களின் சுமூகமான மீள்குடியேற்றத்திற்கு அவசியமென உணரப்படுகின்றது. தமது சொந்தக் இடங்களில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பல்வேறு பிரச்சனைககளுக்கு முகங்கொடுத்துள்ளபோதிலும் அவர்கள் முகாம்களில் இருந்த காலத்தில் கூறியதைப் போன்று தமது சொந்த இடங்களில் ஒரு வித நிம்மதியுடன் வாழ்வதை அத்தகைய மக்களில் பலருடனான உரையாடல்களின் போது உணர்ந்துகொள்ளமுடிந்தது .'

கஞ்சியையோ கூழையோ குடித்தாலும் சொந்த இடத்திற்கு சென்றால் போதும'; 'பச்சைத்தண்ணிய குடித்தாலாவது எங்கட இடத்தில இருக்கணும்' 'வீடு இல்லாட்டாலும் எங்கட இடத்தில மரநிழலிலாவது நிம்மதியா உறங்கலாம்' போன்ற வார்த்தைகளை முகாம்களில் இருந்தபோது மக்கள் திரும்பதிரும்ப கூறியதை கேட்டிருக்கின்றோம்.

தமது சொந்த இடங்களுக்கு சென்றவர்கள் அந்த உணர்வை நிஜத்தில் அனுபவிப்பதை பலர் கூறக் கேட்டேன்
 .
வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த மக்கள் தவிர மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டியுள்ள மக்கள் குறித்த விடயம் இலங்கைக்கு முன்பாகவுள்ள மற்றுமொரு சவாலாக உள்ளது.
இவர்கள் பழைய இடம்பெயர்ந்தவர்கள் என அழைக்கப்படுகின்ற பிரிவினராவர் .20வருடகாலத்திற்கு முன்னர் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த ஒருலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் .மூன்று தசாப்த காலப்போரின் விளைவாக இந்தியாவிற்கு சென்ற தமிழ் மக்கள் இவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்திற்கு அதிகமாகவுள்ளது . உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக வெளியேற்றப்பட்ட 70 ஆயிரம் வரையிலான மக்கள் என பல்வேறு பிரிவினரும் மீள்குடிமர்த்தப்படவேண்டியுள்ளனர்

மேற்குலக நாடுகளிலும் அவுஸ்திரேலியா நியுஸிலாந்து போன்ற நாடுகளிலும் அரசியல் தஞ்சம் கோரியுள்ளவர்களைத்தவிர அகதிகள் என்ற அந்தஸ்துடன் தற்போது 146098 இலங்கையர்கள் உலகிலுள்ள 64 நாடுகளில் பரந்துவாழ்ந்துகொண்டிருப்பதாக அண்மையில் ஒரு ஆங்கிலப்பத்திரிகையில் வெளியான கட்டுரையில் வாசிக்கமுடிந்தது

அகதிகளுக்கான ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகராலயத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிடப்பிரதிநிதி ஜெனிபர் பகோனிஸை மேற்கொள்காண்பித்து வெளியிடப்பட்டிருந்த அந்தத்தகவலில் ஒட்மொத்தமான 146098 அகதிகளில் 71சதவீதமானோர் அண்டைநாடான இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வாழ்வதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

'அகதிகளின் எண்ணிக்கை விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும்' என ஜெனிபர் பகோனிஸ் கூறியிருப்பது இந்த எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு காணப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே கொள்ளப்படவேண்டும் என அந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது

ஆக மொத்தத்தில் மீள் குடியேற்றம் என்பது வவுனியா முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை மீண்டும் அவர்களது கிராமங்களுக்கு கொண்டுசெல்வதுடன் முற்றுப்பெறுகின்ற விடயமாக அமையமாட்டாது என்பதையே இந்த விடயங்கள் உணர்த்திநிற்கின்றன
.
உண்;மையான நல்லிணக்கத்தை நோக்கியதான நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கத்தரப்பினர் திரும்பத்திரும்ப கூறிவருகின்றநிலையில் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்த அனைத்து மக்களும் மீள்குடியமர்த்தப்படவேண்டியது நல்லிணக்கத்திற்கான இன்றியமையாத அவசியம் என்பதை அனைத்துத்தரப்பினரும் ஆமோதிப்பர் என்பதில் ஐயமில்லை