Tuesday, June 14, 2016

சிங்களவர்களுக்கே நல்லிணக்கதை புரியவைக்கவேண்டியுள்ளது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

*வடக்குமக்களின் பிரச்சனைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்ளமலிருப்பதே நல்லிணக்கதை முன்னெடுக்க பெரும் சவாலாகவுள்ளது

*தெற்கிலுள்ளவர்கள் மத்தியில் உண்மையை எடுத்துவிளக்க விரிவான வேலைத்திட்டம்
*நல்லிணக்கத்தைப் பலப்படுத்துதல் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தலின் மூலமே நாட்டை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என ஜி- 7 தலைவர்கள் கூறினர்.
*கிழக்கு முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தவிடயத்தை பூதாகரப்படுத்தியுள்ளனர்.


சுடர் ஒளிக்கு ஜப்பானின் நகோயா நகரிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விசேட செவ்வி

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்


நல்லிணக்கம் என்பதும் வெளிநாட்டவர்களும் அரச சார்பற்;ற நிறுவனங்களும் அதிகாரிகளும் வடக்கை நோக்கியே படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தைப் பற்றி எடுத்து விளக்க வேண்டியது தெற்கிலுள்ளவர்களுக்கே. ஏனென்றால் அவர்களே அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளாதிருக்கின்றனர்.அதுவே நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உள்ள முக்கிய சவாலாக இருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் நேற்றைய தினம் சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியே நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.


நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்குள்ள முக்கிய சவாலாக எதனைக் காண்கின்றீர்கள்?

வடக்கிலுள்ளவர்களின் பிரச்சனையை தெரிந்துகொள்வதற்கு அன்றேல் அதன் ஆழத்தை விளங்கிக்கொள்வதற்கு தெற்கிலுள்ளவர்கள் முன்வராமையே நல்லிணக்தை முன்னெடுப்பதற்கு பெரும் தடையாகவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டால் அவர்களின் நிலைமை புரியும் ஆனால் இங்குள்ளவர்கள் கத்துகின்றார்களே ஒழிய சென்று பார்க்க முன்வருவதில்லை.

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களின் காணிகளை 20வருடங்கள் கழித்து மீளக்கையளித்தபோது தன்னுடைய காணியை மீளப்பெற்ற ஒருவர் அந்தக்காணியி;ல் வீழ்ந்து படுத்ததைப்பார்த்தேன். அது போன்று திரும்பக் கையளிக்கப்பட்ட மற்றுமொரு காணியில் இருந்த தென்னை மரத்தில் ஒருவர் ஏறி இருந்ததைப் பார்த்தேன்.  கனடாவிலிருந்து வந்த ஒருவர் தன்னுடன் ஒரு டப்பியொன்றை எடுத்து வந்து தன்னுடைய காணியில் மண்ணைத் தோண்டி அதனுள் டப்பியில் எடுத்துவந்ததை புதைத்தார். தமது காணியை அவர்கள் எந்தளவிற்கு நேசிக்கின்றனர் என்பது இதிலிருந்து புலனாகின்றதல்லவா?  இதை தெற்கிலுள்ளவர்கள் உணர மறுக்கின்றனர். வடக்கிற்கு சென்று அங்குள்ள முகாம்களின் வாழும் மக்களின் உண்மை நிலையை அறிந்துகொள்ளுங்கள் என்று கூறினாலும் போகின்றனர் இல்லை. இங்கிருந்து  கொண்டு தமக்கு வேண்டியதைக் கூறிக்கொண்டு தவறான தகவல்களைக் கொடுத்து மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கின்றனர்.

யுத்தம் நடந்த நாடுகளை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் போது காணிகளை பிடித்துவைப்பதுண்டு. ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதனை விட்டுவிடவேண்டும். அப்படித்தான் பல நாடுகளில் நடந்துள்ளது.
நல்லிணக்கம் என்றவுடன் வடக்கு கிழக்கை நோக்கியே வெளிநாட்டவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச அதிகாரிகள் என அனைவரும் படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி விளங்கித் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தெற்கிலேயே இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கில் அங்குள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.

அரச அதிகாரம் என்பது வடக்கில் கடந்த 70 வருடகாலப்பகுதியில் எந்தளவிற்கு இருந்துள்ளதென்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தக்காலப்பகுதியில் வடக்கில் எத்தனை அமைச்சர்கள் இருந்தார்கள்? ஒரு அமைச்சருக்கு என்ன செய்யமுடியும் ஒரு பிரதியமைச்சருக்கு என்ன செய்ய முடியும் என்று எனக்குத்தெரியும். ஆனால் அது வடக்கு மக்களுக்கு கிடைக்கவில்லை. தெற்கில் கிராமங்களுக்கு போகும் போது அங்கு சந்திக்கும் மக்களின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படியிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக்கொண்டுவிடலாம். ஒருவர் வங்கியில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கின்றார் என்பதிலோ அன்றேல் அவரிடம் எத்தனை காணிகள் இருக்கின்றன என்பதிலோ அன்றி அவரைப் பார்க்கும் போதே வாழ்க்கைத்தரத்தின் நிலைமையை விளங்கிக்கொண்டுவிடலாம்.

மொழிப்பிரச்சனை என்பது இன்னமும் தீர்க்கப்படாத பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.


வடக்கிலுள்ளவர்களின் காணிகளைத் திரும்பக்கொடுக்காமல் தொடர்ந்தும் வைத்திருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் நாம் யுத்தமொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே காணிகளைத் திருப்பிக்கையளிக்க வேண்டிய விடயத்தை மீண்டுமாக வலியுத்திவருகின்றேன்.

நான் வடக்கிற்கு சென்ற போது இராணுவ முகாம்களுக்கு சென்றிருந்தேன். அப்போது அந்த வளவுகளில் கிணறுகள் இருப்பதைக் கண்ணுற்றேன். கிணறுகள் என்பது அங்கு வீடுகள் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. அந்தக்கிணறுகள் கட்டப்பட்டுள்ள விதத்தை வைத்து அங்கு வாழ்ந்தவர்களின் நிலையை விளங்கிக்கொள்ளமுடியும். சிறப்பாக வாழ்ந்துள்ளனர் எனப்புரிந்துகொள்ளமுடியும்.

வடக்கு விஜயத்தின் போது அங்குள்ள பாடசாலையொன்றை நான் மக்களிடம் மீளக்கையளித்திருந்தேன். உண்மையில் கூறுவதென்றால் அந்தப்பாடசாலையை நாம் எப்போது திருப்பிக் கையளித்திருக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதை உடனடியாக திருப்பிக் கையளித்திருக்க வேண்டுமல்லவா?

வடக்கில் இராணுவ முகாம்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. சர்வதேசமும் அது விடயத்தில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இதனை எப்படிப்பார்க்கின்றீர்கள்? வடக்கில் இராணுவ முகாம்கள் இருக்க இருக்க சர்வதேச நெருக்கடி அதிகரிக்குமல்லவா?

வடக்கில் இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் இருக்க இருக்க சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்பது உண்மையானது.. யுத்த காலத்தின் போது கொழும்பில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் இருந்தன. இராணுவத்தின் பிரச்சன்னம் இருந்தது. ஆனால் யுத்தம் நிறைவடைந்ததும் அவை அகற்றிக்கொள்ளப்பட்டன. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருந்தால் மக்களின் மனநிலை எப்படியிருக்கும். அதனை ஏற்றுக்கொள்வார்களா நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யப்பானைப் பாருங்கள் வழமையான நாட்களில் இங்கு பொது இடங்களில் ஒரு பொலிஸைக் கூட பார்க்க முடியாது.

ஜெனிவா தீர்மானத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலையையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கின்றது என எண்ணுகின்றீர்களா?

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றினாலேயே  75 வீதமான ஜெனிவா பிரச்சனைக்கு தீர்வுகண்டுவிடலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது.


 ஜி-7 மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெற்ற நிகழ்விலே முதன்முறையாக பங்கேற்ற இலங்கைத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றீர்கள். இதன் போது ஜி-7தலைவர்கள் என்ன கூறினார்கள்?


ஜி-7 மாநாட்டில் பங்குகொண்ட தலைவர்கள் இலங்கைக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினார்கள். நல்லிணக்கத்தை பலப்படுத்தி ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமைiயான நடவடிக்கை எடுப்பதன்
மூலமாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். அவர்களது நிலைப்பாடு சரியானதென்றே நான் காண்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலைமைச்சர் விடயத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

உண்மையைச்  சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விடயத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால் அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவிற்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்தார் போன்ற  பொய்யான செய்திகளைத் திட்டமிட்ட செய்திகளை கடும்போக்குத் தரப்பினர் பரப்புவது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதகமல்லவா?

முதலிலே எதிர்க்கட்சித்தலைவர் ஏன் அங்கு போனார் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். அங்கு சந்திப்பொன்றுக்கு போனவர் மக்கள் தங்கள் காணிகளை வந்து பார்க்குமாறு கூறியதனாலேயே முகாமிற்கு சென்றிருக்கின்றார். சென்றதும் அவர்கள் திறந்துவிட்டுள்ளனர்.