Sunday, October 27, 2019

நெல்சன் மண்டாவின் மண்ணில் ...



ஊடகவியலாளாராக சர்வதேச நாடுகளுக்கு அந்நாடுகளைக் கண்டறிந்துகொள்வதற்காக ஏற்பாடுசெய்யப்படும் சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்வதானாலும் அன்றேல் ஏதேனும் சர்வதேச மாநாட்டில் பங்கேற்க வாய்ப்பு அமைந்தாலும் அவை சம்பந்தப்பட்ட செய்திகளை ஊடகநிறுவனங்களுக்கு அனுப்பிவிட்டு  விபரமாக பின்னர் எழுதுவோம் என்று எண்ணும் ஊடகவியலாளர்கள் பலர் என்னைப் போன்று இருக்கக்கூடும். ஆனால் அடுத்தடுத்து பணிகள் குடும்பவிடயங்கள் போன்றவற்றால் ஏற்படும் வேலைப்பளுவால் அப்படி விபரமாக எழுத முழுயாத சந்தர்ப்பங்களும் அமைந்துவிடுவதுண்டு. அந்தவகையில் தெனனாபிரிக்காவிற்கு 2017ம் ஆண்டு சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொள்ளவதற்கு  அரிய வாய்ப்புக்கிடைத்திருந்தது. அதன்போது கண்டுரசித்து வியந்த பார்த்த விடயங்களை எழுதுகின்றேன்.




Tuesday, October 1, 2019

போலிச் செய்திகள் ,வெறுப்பு பேச்சு தேர்தலில் எந்தளவில் தாக்கம் செலுத்தப்போகின்றன?




அருண் ஆரோக்கியநாதர். 



ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்று முதல் இன்னமும் 48 நாட்களே உள்ளன. ஏற்கனவே பிரசார நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிட்டன. இதில் பெருமளவானவை சமூக ஊடகப் பரப்பில் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. 2010ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னரே இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் சமூக ஊடகங்களைப் பாவிக்கத் தொடங்கினர். அப்போது ஜனாதிபதியாகவிருந்த  மஹிந்த ராஜபக்ஸ வெகுஜனத் தொடர்புகளுக்கான ஒரு பொறிமுறையாக பேஸ்புக் தளத்தை முதலில் பாவிக்கத்தொடங்கினார். உண்மையைக் கூறுவதாயின் 2015ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போதே இலங்கையில் தேர்தலொன்றில் சமூக ஊடகங்கள் வெளிப்படையான பாத்திரமொன்றை வகித்திருந்தன. அந்த தேர்தல் காலகட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியை சமூக ஊடகங்களில் கணிசமானவர்கள் பின்தொடர்ந்திருந்த போதிலும் கூட அவரது எதிர்த்தரப்பினரோ இலகுவாக அணுகக்கூடிய இணையத்தின் திறந்ததன்மையை பயன்படுத்தி அன்று அரச ஊடகங்கள் மீதும் சில தனியார் ஊடகங்கள் மீதும் அவர் கொண்டிருந்த இரும்புப் பிடியை முறியடிப்பதற்கு சமூக ஊடகங்களை பயன்படுத்திக்கொண்டனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தல் தொடக்கம் தற்போதுள்ள காலப்பகுதியில் தேசிய தேர்தல்களில் சமூக ஊடகம் என்பது பிரதான ஒரு விடயமாக பரிணமித்துநிற்கின்றது. பேஸ்பும் மற்றும் டுவிட்டர் தளங்கள் இல்லாமல் இருந்திருந்தால் 2018ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் இடம்பெற்ற அரசியல்சாசன நெருக்கடி மிகவும் வித்தியாசமாக கையாளப்பட்டிருக்கும். பிரதமரைப் பதவி நீக்கம் செய்தமைக்கு எதிரானவர்கள் தமக்கானதொரு பொதுமேடையை ஏற்படுத்திக்கொள்வதற்கு சமூக ஊடகங்களே களமமைத்துக்கொடுத்ததை மறந்துவிடமுடியாது. சமூக ஊடகங்களின் வரவு ,அரசாங்கங்கள் செய்தி மீது கொண்டிருந்த ஒருவிதமான ஏகபோகத்தன்மையை அன்றேல் இரும்புப்பிடியை கணிசமானளவில் தளர்த்துவதற்கு வழிகோலியது.

கடந்தாண்டு அரசியலமைப்பு நெருக்கடியைத் தொடர்ந்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானபோது அவரது பதவியேற்பு தொடர்பான செய்தி இந்த நாட்டிலுள்ள 21மில்லியன் மக்களுக்கு ஒரு டுவீட் செய்தி மூலமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு நிகழ்வை படம்பிடிப்பதற்கு ஊடகங்கங்களுக்கு ஜனாதிபதி தடைவிதித்த ஒரு நிலைமையை எதிர்கொண்ட ஒரே நாடாக இலங்கையே இருந்திருக்க வாய்ப்புண்டு. அங்கு பிரசன்னமாகியிருந்த அமைச்சர்களும் ஏனையதரப்பினரும் தமது திறன்கைபேசிகளை பயன்படுத்தி வெளியிலுள்ள மக்களுக்கு என்ன நடைபெறுகின்றது என்பதை தெரியப்படுத்தியிருந்தனர். திறன்கைபேசிகளோ அன்றேல் டுவிட்டரோ இல்லாமல் இருந்திருந்தால் நிலைமை எப்படியிருந்திருக்கும் எனக் கற்பனை செய்துபாருங்கள். 

அரசியல்சாசன நெருக்கடிக்கு முன்னரும் பின்னரும் அரசாங்கம் சமூக ஊடகங்களைத் முடக்கியதனை நாம் கண்ணுற்றுள்ளோம். திகண கலவரத்தையடுத்து 2018 மார்ச் மாதத்தில் முதலிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களையடுத்தும் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டிருந்தன. 
சமூக ஊடகங்களை இலங்கையர்கள் மீது எங்ஙனம் தாக்கம் செலுத்துகின்றது என்பது தொடர்பான உத்தியோகபூர்வமான ஆய்வுகள் இல்லையென்ற போதிலும் இலங்கையிலுள்ள 21 மில்லியன் சனத்தொகையில் 6மில்லியன் மக்கள் அதாவது 30 வீதமானவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர்.என்பது நிருபணமாகியுள்ளது.  ஒரு மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்ட இசைக்கலைஞர் ஈராஜ் வீரரத்ன தனது பதிவுகளுடாக கோத்தபாயவிற்கு ஆதரவைச் சேர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். அண்மையில் ஐதேக உட்பட அதனைச் சார்ந்தவர்களை அசிங்கப்படுத்தி பாடலொன்றை வெளியிட்டிருந்தார். இதேபோன்று இன்ஸ்டகிராம் தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானர்களை ரசிகர்களாக கொண்டுள்ள இலங்கை மொடல் ஒருவர் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போது அதற்கு ஆதரவாக பதிவிட்டிருந்தார். அப்படியான ஆதரவுப்பதிவுகள் இனி அடிக்கடி வர வாய்ப்புக்கள் உள்ளன. இன்னுமொரு பிரபல யூடிப் பயனாளர் போலி தேர்தல் பெறுபேறு உட்பட பல்வேறு தில்லுமுல்லுகள் நிறைந்த வீடியோவை சமீபத்தில் வெளியிட்டபோது அதற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான லைக்குகள் கிடைத்தன. 

பொது தளம் என்பது தற்போது இவ்வாறான திருகுதாளங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமை கவலைக்கிடமானது. வரவர இத்தகையவர்களின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக அவதானத்தில் வைத்திருப்பதும் அவர்கள் ஒழுங்குவிதிகளைப் பின்பற்றி நடக்கின்றனரா என பார்ப்பதும் கடினமாகிக்கொண்டுவருகின்றது.  எந்தவொரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் போலியான தேர்தல் பெறுபேறுகளை ஒளிபரப்பமாட்டாது. ஏனெனில் தெளிவான சட்டங்களும் ஒழுங்குகளும் அவர்களுக்கென முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால் யார் யூடிப் வீடியோ தொடர்பில் பொறுப்புக்கூறுவது? யூடிப் தளமானது அதில் உள்வாங்கப்படும் வீடியோக்களிலுள்ள விடயதானம் தொடர்பாக எவ்விதமான பொறுப்புக்களையும் எடுத்துக்கொள்ளாத ஒருதளமாகவே நோக்கப்படுகின்றது. இவ்வாறான விடயதானம் என்பது பிரச்சனைக்குரியதாக இருந்தாலும் கூட அதுதொடர்பாக மக்களின் அதிகரித்த முறைப்பாடுகளின் மத்தியிலேயே நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதற்குள்ளாக ஒரு மில்லியன் பேர் அதனைப் பார்வையிட்டுவிட்டனர் என்பது கரிசனையை ஏற்படுத்துகின்றது. அண்மையில் கிழக்குமாகாணத்தின் பாணமயில் அமைந்துள்ள முகுது மாகா விகாரை என்ற பௌத்த ஸ்தானத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக ஈராஜ் உட்பட சிலர் பெரும் பிரசாரத்தை சமூக ஊடகங்கள் மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் மூலம் முன்னெடுத்து சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த முற்பட்டனர். ஆனால் பதும் கேனர் என்ற சுயாதீன ஊடகவியலாளர் அங்கு சென்று நேரில் இடத்தைப் பார்வையிட்டு அங்குள்ள பௌத்த தேரரை நேர்காணல் செய்து உண்மையை வெளிப்படு;த்தியிருந்தார். அந்த சிலைகள் நிற்கும் நிலையில் வைக்கப்படுவதற்காக தற்போது தரையில் கிடப்பில் வைக்கப்பட்டுள்ளதே தவிர அவை உடைக்கப்படவில்லை என்பதே அவர் வெளிப்படுத்திய உண்மை. தேர்தல்காலத்தில் இவ்வாறான போலிச் செய்தியின் உண்மையான பக்கம் வெளிப்படுத்தப்படாவிடின் மக்களை அச்சங்களில் குளிர்காய நினைப்பவர்களுக்கு அது அனுகூலமாக அமைந்துவிடும். 

சமூக ஊடகங்களைக் கண்காணித்து பிரச்சனைக்குரிய பதிவுகள் தொடர்பாக முறைப்பாடு செய்யவுள்ளதாக இலங்கையின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர். போலிச் செய்திகள் மற்றும் காழ்ப்புணர்வுமிக்க மோசமான பதிவுகளை கண்காணித்தல் மற்றும் அவற்றை நீக்குதல் தொடர்பாக இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே பேஸ்புக் நிறுவனத்தினருடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர். ஆனாலும் நடைமுறையில் இதனைச் செய்வது எந்தவகையிலும் இலகுவானதாக இருக்கப்போவதில்லை.  தேர்தல் காலப்பகுதியில் போலிச் செய்திகளையும் வெறுப்புணர்வுப் பேச்சுக்களையும் கண்காணிக்கவுள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிக்கும் (சிஎம்ஈவி) அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் விரைவாக இவற்றை இனங்கண்டுபிடிப்பதற்கு உரிய வளங்கள் உள்ளதா என்பது முக்கியவிடயமாகும். 

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் தளங்களைப் பார்க்கும் போது ஏற்கனவே அவை ஊடகவியலாளர்கள் அரசியல் வாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கு எதிரான சொற்தாக்குதல்களால் நிறைந்துகிடக்கின்றன. இந்தப்பதிவுகளுக்கு எதிராக எந்தவிதமான வினைத்திறன்மிக்க தடுப்புச் செயற்பாடுகளையும் காணமுடியவில்லை. கடந்தகாலத்தைப் போன்று அவற்றை இனங்காண்பதும் ஆவணப்படுத்துவதும் மட்டும் போதுமானதல்ல. தற்போது அதனையும் தாண்டிய நகர்வுகளை முன்னெடுப்பதே அவசியமானதாகும். 



Live well, Laugh often, & Love with all of your heart! 

TRICI