Wednesday, February 17, 2016

இறுதிப்போரில் நிகழ்ந்ததை அறியாதோரே இலங்கையின் யுத்திகள் குறித்து பேசுகின்றனர்

*இலங்கையின் பிரச்சனைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இலங்கையின் தீர்வுகள் காணப்படவேண்டும்.
*ஜனநாயக மயமாக்கலும் சட்டத்தின் ஆட்சியுமே இருக்கின்ற ஒரே வழி
-துருக்கித்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் செவ்வி
1

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்
இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின் போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டவழியில் நாமும் தீர்வுகாணவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என துருக்கிய அரசியல்வாதியொருவர் தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து வினவியபோதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த நாட்டிற்கு நீங்கள் வருகைதந்து சில மாதங்களாகிவிட்டன. இந்த நாட்டின் ஜனநாயகப் பயணம் தொடர்பாக நீங்கள் எத்தாகைய மதிப்பீட்டைக் கொண்டுள்ளீர்கள்?
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நான் இலங்கைக்கு வருகைதந்தேன்.உண்மையில் இந்த நாட்டில் மாற்றமொன்று ஆரம்பமாகிய வேளையிலேயே நான் இங்கு வந்திறங்கியிருந்தேன். ஒரு புதிய சுவாசம்; ஒரு புதிய பரிமாணம்; ஒரு புதிய முன்னோக்கிய பார்வை இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மக்களின் எழுச்சிமிக்க உள்ளக்கிடக்கை குறித்து நான் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அது என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியிலும் ஊக்கமளிக்கின்றது. இங்குள்ள எனது சகபாடிகளுடன் பேசும்போது நீங்கள் சரியான நேரத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளீர்கள் ஏனென்றால் இங்குள்ள அனைத்து விடயங்களுமே புதிய ஆரம்பத்துக்குள்ளாக பயணிக்கத் தொடங்கியுள்ளன என்றுணர்த்தினர்.அதிகளவான கருத்துவெளியிடும் சுதந்திரத்துடன் புத்தூக்கம் நிறைந்ததாக ஊக்கத்துடன் இந்த நாட்டை ஆளுகைசெய்வது ஊக்கமளிப்பதாகவுள்ளது.மிகவும் ஆக்கபூர்வமானதும் அர்த்தபுஷ்டியானதுமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதலாக அனைத்துவிடயங்களும் கருத்தொருமைப்பாட்டுடன் கூடியதாக தீர்மானிக்கப்படுகின்றது. அது தனித்துவமானதென்பதுடன் மிகவும் சிறப்பானதாகும்.
ஆறாண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வரலாற்றின் பல விடயங்களில் குறிப்பாக நல்லிணக்கத்தை நோக்கிய தேடலில் தீர்க்கமான கட்டத்தில் இலங்கை பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் துருக்கி எவ்வாறு பங்களிக்க முடியும் என நினைக்கின்றீர்கள்?
இலங்கையின் நட்பு நாடாக மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டதாக துருக்கி திகழ்கின்றது. இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் ஜனநாயமயமாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை துருக்கி அவதானித்துக்கொண்டிருப்பதுடன் அதற்கு ஆதரவளித்துவருகின்றது. கடந்த கால கசப்புணர்வுகள் தொடர்பில் சிறப்பான ஜனநாயகப்பான்மையுடன் தீர்வுகாண்பதற்கு எடுத்துவருகின்ற முயற்சிகளையும் சிரமமான விடயங்களை தமது வல்லமைக்குட்பட்ட வகையிலும் தமது சொந்த முன்முயற்சியினாலும் கையாண்டுவருகின்றமை தொடர்பிலும் நாம் இலங்கை நண்பர்களின் சாதகமான அணுகுமுறைகளை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.ஜனாதிபதி; பிரதமர்; அமைச்சரவையின் தீர்க்கரமான உறுதிப்பாடு ஊக்கமளிப்பதாகவுள்ளது.3
துருக்கியும் உள்நாட்டுப் பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளது. இது போன்ற கடினமான காலப்பகுதியில் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்?
நாட்டில் நீண்டகாலமாக இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதக விளைவுகளையும் துயரங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய சில நாடுகளில் ஒன்றாக துருக்கி விளங்குகின்றது. ஏதோ வழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதில் இலங்கை வெற்றிகண்டிருக்கின்றது.ஆனால் துருக்கி இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றது.துருக்கியிலும் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமான நீட்சிகொண்ட பிரிவினைவாத பயங்கரவாதம் உள்ளது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுகின்றோம். துருக்கி; ஐரோப்பிய கவுன்ஸிலின் அங்கத்துவ நாடாகவும் ஐக்கிய நாடுகள் சாதனத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பாகவும் உள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகையில் நாம் எதனைச் செய்தாலும் சட்டத்தின் ஆட்சி என்ற வரையறைக்குள்ளேயே நாம் அதனை செய்கின்றோம். நாங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவை யாவும் சட்டத்தின் ஆட்சி என்ற கட்டமைப்பிற்குள்ளாக அமைந்திருக்கின்றது.சட்டங்களையும் நியதிகளையும் பின்பற்றாத பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடும் போதுகூட ஜனநாயக நாடொன்று அந்த நாட்டினுடைய சட்டங்களையும் நியதிகளையும் தவிர்த்துச் செயற்படமுடியாது.பயங்கரவாதிகளுக்கு எல்லைகளென எதுவும் கிடையாது. பொதுமக்கள் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து அவர்கள் கவனத்திற்கொள்வதில்லை.பாடசாலைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டாலும் வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கணக்கில்லை. அவர்கள் அது போன்ற விடயங்கள் தொடர்பாக கவலைகொள்வதில்லை.பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் போது சட்டத்தின் ஆட்சியை முன்னிறுத்தி செயற்படுகின்ற ஜனநாயக நாடு தனது நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.
கடைசிக் கேள்விக்கு நீங்கள் வழங்கிய பதில் உங்களது துருக்கிய அமைச்சரொருவர் அண்மையில் கூறிய கருத்தை நினைவுபடுத்துகின்றது. இலங்கையில் போரின் போது பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்துகொண்டேன். இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவற்றை துருக்கி ஏற்றுக்கொள்கின்றது என இந்த அறிக்கையை வைத்து பொருள்கொள்ளமுடியுமா?
இல்லை. இது முற்றுமுழுதாக தவறானது. முதலில் அந்தக்கருத்தைக் கூறியவர் துருக்கிய அமைச்சரும் இல்லை அரசாங்க அங்கத்தவரும் இல்லை. இவ்வாறான உதாரண அறிக்கைகளை கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் இலங்கை போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்தவை பற்றி போதுமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டது அதே வழியில் நாமும் செயற்படவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர். அந்தக்கருத்துக்கள் தனிப்பட்டவை. அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் அல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டிற்குரித்தான சூழ்நிலைகள் களநிலைகள் உள்ளன. ஒருதரப்பினர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமானது ஏனையோருக்கு உதாரணமாக முடியாது. எம்முடைய சூழ்நிலைகள் களநிலைகள முற்றுமுழுதாக வித்தியாசமானவை. அதனால் தான் வேறொரு நாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை இறக்குமதி செய்து எடுத்துக்கொண்டு எங்களுடைய சொந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது சாத்தியமல்ல என்று கூறுகின்றேன்.

போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் தேவையென போரில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர். மேற்கு நாடுகளும் பொறுப்புக்கூறலில் அவசியம் குறித்து தொடர்ச்சியாக கோரிவந்துள்ளன. இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என நினைக்கின்றீர்களா? அன்றேல் ஒரு நாட்டை இலக்குவைப்பதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுவதாக நினைக்கின்றீர்களா?
இது இரு முனைகளைக் கொண்ட கத்திபோன்றதாகும். அதாவது இரு வாதங்களும் செல்லுபடியானவை என அர்த்தம்கொடுக்கின்றேன். மோதலின் போது தவறான நடவடிக்கைள் இடம்பெற்றுள்ளன. உள்ளகப் பிரச்சனையை தீர்க்கமுனைகையில் அவை இடம்பெற்றுள்ளன. அது சரியானதல்ல. அந்த கசப்பான உணர்வுகளைத் தாண்டி மேலெழுவதற்காக நாம் பணியாற்றுவோம். இந்த நாட்டை நல்லிணக்கப்படுத்துவோம் என்று ஒரு நாட்டிடம் நீங்கள் கூறமுடியும். அப்போது நல்லிணக்கம் இடம்பெறுமிடத்து எவ்விதமான கசப்புணர்வுகளும் இன்றி இலங்கை முன்னோக்கிப் பயணிக்க முடியும். இது சாதகமான அணுகுமுறையாகும். இந்த சாதக அணுகுமுறை இலங்கை அரசினாலும் பாராட்டப்படுவதாகவுள்ளது. மற்றைய அணுகுமுறை அதாவது சில கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிடம் வலுக்கட்டாயமாக கோரிக்கைகளை விடுப்பது என்னைப் பொறுத்தவரையில் எதிர்விளைவைக் கொண்டுவரக்கூடியதாகும். இலங்கையொரு இறைமையுள்ள நாடாகும். நாட்டை நிர்வகிப்பதற்கான சுயாதீனமான நீதித்துறையையும் ஏனைய தனக்குரித்தான சுயாதீனமான நிறுவனங்களையும் அது கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்த ரீதியில் தனது எதிர்காலம் தொடர்பாக இலங்கை தீர்;மானிக்க முடியும். ஆனால் நட்பு நாடுகளின் நல்லெண்ணத்துடன் கூடிய சிநேகபூர்வமான ஆலோசனைகள் நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி இட்டுச்செல்ல வழிகோலமுடியும்.
மேலைத் தேய நாடுகளில் ஏன் உங்களது நாட்டில் கூட உங்களது சொந்தப் பிள்ளையை அடித்தால் கூட பொலிஸிற்கு அழைப்பெடுத்தால் அவர்கள் வந்து மிகுதியைப் பார்த்துக்கொள்வர். அப்படியிருக்கும் போது தன்னுடைய மக்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள ஓர் அரசாங்கம் பயங்கரவாத்தை எதிர்த்துப் போரிடுகின்றதான போர்வையில் சொந்த மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இடத்தில் அன்றேல் அந்த மக்களைக் கொன்றொழிக்குமிடத்தில் எவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
ஜனநாயக மயமாக்கலும் சட்டத்தின் ஆட்சியுமே இருக்கின்ற ஒரே வழியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் சமூகத்தினரும் ஒன்றுதிரண்டு பொதுவான இணக்கப்பாட்டை அடைந்துகொள்ள முற்படவேண்டும். ஜனநாயகம் மற்றும் அநீதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படும் போது அனைத்துவிதமான உள்ளக தெரிவுகளும் தீர்ந்துவிட்டநிலையில் அதாவது அவற்றை இயன்றளவு முயற்சித்துப்பார்த்தும் சரிவராத நிலையில் தான் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவிகளைக் கோருவது ஒரு தெரிவாக இருக்க முடியும். ஜனநாயகம் மற்றும் நீதி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். சட்டத்தின் ஆட்சி என்பது கட்டாயமானது. அது இல்லாத விடத்தில் நிரந்தரமான தீர்வைக் கண்டுவிட முடியாது. மேம்பட்ட ஜனநாயகத்தைகக் கொண்ட மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட தவறுகள் இடம்பெறக்கூடும். ஆனால் அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும். இறுதியாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டவேண்டும் அதாவது இலங்கையின் பிரச்சனைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இலங்கையின் தீர்வுகள் காணப்படவேண்டும். இந்த முயற்சியில் நட்புரீதியான நாடுகளின் நேர்மையானதும் நல்ல நோக்கம் கொண்டதுமான ஆலோசனைகளில் இலங்கை நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
துருக்கி மதச்சார்பற்ற அரசியல்யாப்பைக்கொண்டுள்ளது. தமது அரசியல்யாப்புக்களில் மதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் பல இருக்கும் போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட உங்கள் நாடு உலகிற்கே சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றது. இலங்கையர்கள் தற்போது அரசியல்யாப்பு தயாரிப்பு வாதப்பிரபதிவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் யாப்பு என்பது மதச்சார்பற்றதாக அமைவது எந்தளவிற்கு முக்கியமானது எனக்கருதுகின்றீர்கள்?


அது மிகவும் முக்கியமானது.90 வருடங்களுக்கு முன்னர் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு நவீன துருக்கி கட்டியெழுப்பப்பட்டபோது  நாகரிகமிக்க, மேற்குலக நாடாக மாறுவதற்கு அரசையும் மதத்தையும் வேறாக்கவேண்டும் என துருக்கியின் ஸ்தாபகத் தலைவர்கள் எண்ணினர். மக்களின் வாழ்க்கையில் மதங்கள்  மிகவும் முக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லை. அதனை நாம் மதிக்கவேண்டும். அதனை  நன்கு கட்டிக்காக்கவேண்டும். ஆனால் நாம் மதங்களை அரசியலில் கலந்துவிட்டோமானால் நீங்கள் அந்த மதத்திற்கு மிகப்பெரிய தீங்கைச் செய்கின்றீர்கள்.ஏனெனில் சிலதரப்பினர் தமது தனிப்பட்ட அரசியல்தேவைப்பாடுகளுக்காக மதத்தை அரசியலைப் பயன்படுத்துவர். தமது தனிப்பட்ட தேவைகளுக்காக மதத்தை ஒரு கருவியாகப்பயன்படுத்துபவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உண்மையான விசுவாசிகள் உண்மையான மதப்பற்றாளர்கள் கொண்டிருப்பதில்லை. இது தீர்க்கமானதொரு விடயம். உங்களது அரசியல் நலன்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது.அப்படிச் செய்யும் போது மதத்திற்கு தீங்கிழைக்கின்றீர்கள்.மறு முனையில் , பன்மைத்துவம் கொண்ட ஜனநாயக  சமூகம் , விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம்,  சுயமாக சிந்திப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை  நீங்கள் விரும்புமிடத்து ஒன்றையையும் சார்ந்திராத அமைப்பு முறை அவசியமாகும்.சார்பின்மை என்பது ஒருவர் தாம் விரும்பியதை விசுவசிப்பதற்கோ அன்றோல் விசுவசிக்காமல் இருப்பதற்கோ கொண்டிருக்கும் உரித்துடைமையைக் குறிக்கும்.எந்தவிதமான நம்பிக்கையையோ வழிமுறைகளையோ யார் மீதும் திணிக்காத நிலை சார்பின்மையில் உள்ள முக்கியவிடயமாகும்.மதச்சார்பின்மை இந்த உத்தரவாதத்தை எமக்கு வழங்குகின்றது.

Inline images 1

மதச்சார்பின்மையை கொள்கையாகக் கொண்டிருப்பதனால்  உங்கள் நாடு அடைந்துள்ள நன்மைகள் எவை?



துருக்கியை  கடந்த 90வருடங்களில் அதன் அமைப்பைக்கொண்ட அண்டைநாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து துருக்கி இன்றையநிலையில் உலகின் 17வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவபலத்தைக் கொண்ட நாடாகவும் 10000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தனிநபர் வருமானத்தைக் கொண்டதாகவும் கைத்தொழில்மயப்படுத்தப்பட்ட ஜனநாயக நாடாகவும் திகழ்கின்றது.இதனை எப்படி அடைந்துகொள்ள முடிந்தது ? சார்பற்றதன்மை கொண்ட ஜனநாயக  ஆட்சி முறையால்தான் இது சாத்தியமானது.எமது நாட்டின் வரலாற்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இராணுவ ஆட்சியும் இடம்பெற்றதுண்டு. ஆனால் இறுதியாக நாம் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை வைத்தோம்.சுதந்திரமான தேர்தல்கள் கருத்துவெளியிடும் சுதந்திரம்  எந்தவகையான மத நம்பிக்கைகளையும் யார் மீதும் திணிக்காமை காரணமாக நாம் அதிகமதிகமாக சுதந்திரமாக சிந்திக்கும் மக்களாக மாறினோம். இது நாட்டில் சுபீட்சத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் கொண்டுவந்தன.எம்மைச் சுற்றி அமைந்துள்ள சிரியா ஈராக் போன்ற நாடுகள் பாரிய பிரச்சனைகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகிவருகின்றன. அங்கெல்லாம் மதத்தின் ஒரு பிரிவைப் பின்பற்றுகின்றவர்கள் மற்றைய தரப்பினரை அடக்கியொடுக்கிவருகின்றனர். இதனால் பாரிய கசப்புணர்வுகள் பிரச்சனைகள் அங்கு குடிகொண்டிருக்கின்றன.அங்கெல்லாம் மதச்சார்பற்ற எதனையும் முன்னுரிமைப்படுத்தாத  ஆட்சிமுறை இருந்திருப்பின் அவை கூட சுபீட்சமிக்க முன்னேறிய நாடாக இருந்திருக்கும். ஜனநாயகம் இன்மை ஜனநாயக கற்கைகள் இன்மை கருத்துவெளியிடும் சுதந்திரம் இன்மை அனைத்து பிரஜைகளுக்கும் சம வாய்ப்புக்கள் இன்மையானது  நாட்டிற்கு அழிவையே இறுதியில் கொண்டுவரும்.
Inline images 2


உலகின் பதற்கரமான சிக்கல்கள் மிக்க பிரதேசங்களிலொன்றான மத்தியகிழக்கிற்கு அருகே கேந்திரஸ்தானத்தில் உங்களுடைய நாடு அமைந்திருக்கின்றது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான மேற்குலகின் இராணுவ திட்டங்களில் துருக்கியின் வகிபாகம் பிரதானமானதாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் பரிமாணத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. நாம் அதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்தாண்டு ஜுனில் இடம்பெற்ற தேர்தலையடுத்து எமது தென்கிழக்கு பிராந்திய மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் தலைநகர் அங்கராவில் இடம்பெற்ற சமாதான பேரணியொன்றில் இரண்டு தற்கொலைக்குண்டுத்தாரிகள் நடத்திய தாக்குதலில் நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்த இரு சம்பவங்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே பொறுப்பாகும். இந்த அமைப்பினர்  இஸ்லாமிய தேசத்தை முன்னிறுத்துபவர்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது. எவரும் இதில் குழம்பிக்கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் கிடையாது என்பது நிச்சயம்.இவர்கள் கொடூரமான சிந்தனைகளைக் கொண்ட அசாதாரணமான வெறிபிடித்த கூட்டம். இஸ்லாம் மதத்திற்கும் இவர்களுக்கும் ஒற்றுமையேதும் கிடையாது. இஸ்லாம் சமாதானத்தின் மதம், இஸ்லாம் புரிந்துணர்வின் மதம், இஸ்லாம் சமத்துவத்தின் மதம். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவரது கருதியாக இவர்கள் இருப்பினும் இவர்கள் தம்மை முஸ்லிம்களாக தம்மைக்காட்டிக்கொள்ள எத்தனித்தாலும் இவர்களை மிலேச்சத்தனம் கொண்ட கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவுமே நோக்கமுடியும்.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான சண்டையில் துருக்கி ஒரு முன்னோடியாக மேற்குலகினரின் நெருங்கிய பெரும் பங்களானாக திகழ்கின்றது.  ஐஎஸ்ஐஎஸ் நிலைகளின் மீதான தாக்குதல்களின் போது துருக்கியிலுள்ள இராணுவத்தளங்கள் கூட்டு நாட்டுப்படையினரால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளிலும் நாமே அதிகமான பங்களிப்பை, வளங்களை வழங்கிவருகின்றோம்.இது மிகப்பெரிய பிரச்சனை.  இதனை கூட்டு வழிமுறை மூலமே தீர்க்க முடியும்.


Displaying ANNX 03 020.jpg
Displaying ANNX 03 020.jpg

No comments:

Post a Comment