Saturday, January 15, 2011

13வது திருத்ததிற்கு அப்பால் அரசியல் தீர்வு

ஆனால் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது



                              (அருண் ஆரோக்கியநாதர் )




அரசியல் தீர்வு 13வது திருத்தத்தினை விடவும் அதிகமாக 1310 ஆகவே அமையும் ஆனாலும் பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்

நேற்றுக்காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற இலங்கையில் பணியாற்றுகின்ற வெளிநாட்டு ஊடகங்களின் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அரசியல் தீர்வு தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே ஜனாதிபதி இந்தக்கருத்துகளை வெளியிட்டார்

இங்கு அவர் மேலும் கருத்துவெளியிடுகையில் அரசியல் கட்சிகள் முன்வைக்கின்ற யோசனைகளைப் பொறுத்ததாக அனைத்துக் கட்சிகளுடனான இணங்கப்பாட்டின் அடிப்படையில் அரசியல் தீர்வு முன்வைக்கப்படும் எனினும் இதற்கு எவ்வளவு நாள் எடுக்கும் என கூறமுடியாது மத்திய அரசாங்கத்துடன் அதிகாரங்களைப் பகிர்ந்துகொள்கின்ற சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுகின்றன .

ஆனால் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கு எவ்வகையிலும் இடமில்லை அது நிச்சயமாக வழங்கப்படமாட்டாது எனத் தெரிவித்த ஜனாதிபதி பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்ட நாடொன்றில் விமானத்தையே இறக்க அனுமதிக்கவில்லை என்பதை உதாரணமாக சுட்டிக்காட்டினார். பொலிஸ் அதிகாரம் வழங்கப்படமாட்டாது என்பதை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிடமே தெரிவித்தாகவும் அவர்கள் யதார்த்தத்தை உணர்ந்தவர்களாக ஏற்றுக்கொண்டதாகவும் சுட்டிக்காட்டினார் .

முழுமையான விசாரணைக்கு உத்தரவு

இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக முழுமையான விசாரணையை நடத்துமாறு இலங்கை கடற்படையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்திய ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி இலங்கை கடற்படையினரின் தரவுகளுக்கு அமைவாக அவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெறவில்லை எனத் தெரிகின்றபோதிலும் மேலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.     ' முன்னர் எமக்கிடையில் சில ஏற்பாடுகள் இருந்தன எனினும் தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய அமைதிச் சூழலின் அடிப்படையில் இது மாற்றியமைக்கப்படவேண்டும்' என ஜனாதிபதி கூறினார்
இது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி 'மோதல்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் வடபகுதியில் மீன்பிடிநடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை மீனவர்கள் தடுக்கப்பட்டிருந்தனர் .தற்போது அவர்களால் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடக்கூடியதாகவுள்ளது அந்தவகையில் இரு நாடுகளின் மீனவர்களுக்கிடையில் புரிந்துணர்வீன்மையும் மோதல்களும் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவததாகவும் சுட்டிக்காட்டினாhர்

இவ்வாறான விவகாரங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் தமக்கிடையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டியமை முக்கியமானதென தெரிவித்த ஜனாதிபதி இது இருநாடுகளும் கடந்த ஜுன் மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கைக்கு இசைவானதெனவும் சுட்டிக்காட்டினார்

இந்தியாவிற்கான இலங்கைத்தூதுவர் பிரசாத் காரியவசம் இந்திய அரசாங்கத்தால் விளங்கங்கோரலுக்காக அழைக்கப்பட்டமை குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி ' இந்திய அரசாங்கம் உட்பட எந்தவொரு அரசாங்கத்திற்கும் அவ்வாறான உரிமை காணப்படுகின்றது.இதுபோன்ற சூழ்நிலைகளில் இலங்கை அரசாங்கமும் இதுபோன்ற நடவடிக்கைகளையே மேற்கொள்ளும் இது தொடர்பில் எமக்கு எந்தவிதப்பிரச்சனையும் கிடையாது' எனத் தெரிவித்தார்.

                வேண்டுகோள் இன்றியே இந்தியா உதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகளை துரிதப்படுத்துமாறும் இதனை அத்தியாவசியச் சேவையாக கருதி செயற்படுமாறும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார் .

மோசமான காலநிலை காரணமாகவே மட்டக்களப்பிற்கான தனது விஜயம் இரத்துச்செய்யப்பட்டதாக தெரிவித்த ஜனாதிபதி ஆனாலும் அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்திவருவதாக குறிப்பிட்டார் .இந்தியாவின் வெள்ள நிவாரண உதவிகளுக்கு பாராட்டுத்தெரிவித்த ஜனாதிபதி இலங்கை வேண்டுகோள் விடுக்காத நிலையிலேயே இந்தியா இலங்கைக்கு உதவ முன்வந்ததாக தெரிவித்தார்

     மேற்குலகுடனான உறவுகள் வலுவாகவுள்ளது

மேற்குலகுடனான உறவு தொடர்ந்துமே வலுவாக இருந்துவருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்ததுடன் சில நாடுகளில் இலங்கை தொடர்பான சாதாகமான போக்குகள் முன்னேற்றம் கண்டுவருவதாக குறிப்பிட்டார் .

குடிவரவு தொடர்பான கனடாவின் மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ள கொள்கைகள் மற்றும் சுவிற்சர்லாந்து ஜேர்மனி போன்ற நாடுகளில் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையை ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்பான அரசாங்கத்தின் அணுகுமுறை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி புலம்பெயர்ந்த மக்களுடனான உறவை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் ஏற்கனவே புலம்பெயர்ந்த மக்களில் சிலர் இங்கு அழைத்துவரப்பட்டு உண்மை நிலைமை அவர்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார் .

இருந்தபோதிலும் சில தரப்பினர் எதிர்காலத்திலும் குழப்பங்களை ஏற்படுத்த முனையக்கூடும் அத்தகையவர்கள் வேறு நாடுகளின் குடியுரிமை பெற்றவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்

இதன்போது ஊடவியலாளர் ஒருவர் இவ்வாண்டில் எந்தெந்த நாடுகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டீர்கள் என வினவினார் இதற்கு பதிலளித்த ஜனாதிபதி முன்கூட்டியே இதனைக் கூறமுடியாது அப்படிக் கூறினால் பதாதைகளுடன் வந்துநின்றுவிடுவார்கள் அப்படியாக இன்னுமொரு சம்பவம் இடம்பெறுவதை விரும்பவில்லை என நகைச்சுவையுணர்வுடன் கூறினார்

வேறெந்த நாடும் இவ்வளவு வெற்றியைக் கண்டதில்லை

விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருவதாக தெரிவித்த ஜனாதிபதி 5000ற்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்

.தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
இங்கு மேலும் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி '30வருடகாலமாக பயங்கரவாத்திற்கெதிரான யுத்தத்தின் பின்னர் 6 மாதமளவிலான குறுகிய காலப்பகுதியில் அவர்களை விடுவிக்க முடிந்துள்ளது இது இலகுவான காரியம் கிடையாது வேறெந்த நாட்டாலும் இவ்வாறான வெற்றியை ஈட்ட முடிந்ததில்லை'எனத் தெரிவித்தார் . சான்றுகளின் அடிப்படையில் தடுப்பிலுள்ளவர்களுக்கு எதிராக வழங்குகள் தொடரப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்

No comments:

Post a Comment