Monday, April 20, 2015

உள்நாட்டு அரசியலில் பந்தாடப்படும் பொறுப்புக்கூறல்

இலங்கையின் புதிய அரசு வலிந்து கேட்டுக் கொண்டதன்பேரில் இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மீதான விசாரணை அறிக் கையை வெளியிடும் நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைத்தது.

நாட்டிலே சீர்குலைந்துபோயுள்ள நல்லாட்சியை மேம்படுத்தி மனித உரிமைகளை நிலைநாட்டவும், பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பகரமான செயற்பாடு களை முன்னெடுக்கவும் ஏற்கனவே நடவடிக்கைகளை ஆரம்பித்துவிட்டதாகவும் இனிவரும் காலங்களில் அது வீச்சுப்பெறும் என்றும் இலங்கை அரச தரப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அளித்த வாக்குறுதியின் பிரகாரமே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை இந்தக் காலஅவகாசத்தை வழங்கியது.

இதற்கு அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளும் ஆதரவளித்தன. நாடாளுமன்றம் ஏப்ரல் 23ஆம் திகதி யின் பின்னர் கலைக்கப்பட்டு, பொதுத்தேர்தல் ஜூனில் நடத்தப்படலாம் என்ற நிலையில், ஐ.நாவின் விசா ரணை அறிக்கை தற்போதைய அரசை எவ்விதத்திலும் பாதித்துவிடக்கூடாது என்ற கரிசனையும் விசாரணை அறிக்கையை ஒத்திப்போடுவதில் தாக்கம் செலுத்தி யிருந்தது. ஆனால், தற்போதைய நிலையில் நாடாளு மன்றக் கலைப்பு என்பது நூறு நாள் திட்டத்தில் கூறப் பட்டதுபோன்று ஏப்ரல் 23ஆம் திகதி இடம்பெறப் போவதில்லை என்பது நிச்சயமாகத் தெரிகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றையதினம் நடை பெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்களினதும் விசேட கூட்டத்தில் உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளதான 19ஆவது திருத்த சரத்துகள் தொடர்பில் நாளையும், நாளை மறுதினமும் விவாதித்து வாக்கெடுப்பை நடத்துவதற்கும், தேர்தல் சீர்திருத்தம் நிறைவேற்றப்படும் வரையில் நாடாளுமன்றைக் கலைக்காதிருக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. தேர்தல் சீர்த்திருத்தம் என்ற விடயத்தை நினைத்த மாத்திரத்தில் ஒருசில தினங்களில் முன்னெடுக்க முடியாது என்ற நிலையில், அதனை நிறைவேற்றுவதற்கு இன்னமும் சில மாதங் களேனும் செல்லக்கூடும். இந்நிலையில், நாடாளுமன் றக் கலைப்பும் அதன் பின்னர் பொதுத்தேர்தலும் வருவதற்கு ஓகஸ்ட் அன்றேல் செப்டெம்பர் மாதம் கூட ஆகிவிடலாம்.

இந்த அரசை சங்கடப்படுத்தி மஹிந்த தரப்பினருக்கு மீண்டும் அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்கு வாய்ப்பளிக் கக்கூடாது என்ற நோக்கில் ஐ.நா. விசாரணை அறிக்கை வெளியாவதைத் தள்ளிவைத்த தரப்பினர், தேர்த லொன்று இடம்பெறும் காலப்பகுதியில் மீண்டும் அதனை வெளியிடுவார்களா என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், அரசு வாக்களித்த நம்பகரமான உள்நாட் டுப் பொறிமுறை தேர்தல் காலப்பகுதியில் ஸ்தாபிக்கப் படுமா, நம்பகரமான முறையில் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லுமா என்ற கேள்விகள் தற்போது எழுகின்றன.

இலங்கையில் இடம்பெறும் ஆட்சிமாற்றங்களின் போது ஆட்களே வெறுமனே மாறுகின்றார்களே தவிர, ஆட்சிபீடம் ஏறும் அரசுகள் தமிழருக்கு நியாயம் வழங்க இதயசுத்தியுடன் செயலில் ஈடுபடுவதில்லை; சர்வதே சத்தை ஏமாற்றிக் காலங்கடத்துவதற்கும் தமது சொந்தக் கட்சி அரசியல் அதிகாரத்தை அடைந்துகொள்வதற்குமே முயற்சிக்கின்றன என்ற விமர்சனங்களை மெய்ப்பிக் கும் வகையில் தற்போதைய நிலைமை காணப்படு கின்றது.

எதிர்வரும் ஜூன் மாதத்திலேயே பொறுப்புக்கூறல் விடயத்தைக் கையாள்வதற்கான உள்நாட்டுப் பொறிமுறை நிறுவப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார். ஆனால், தன்னைப் பொதுவேட்பாளராக அறிவிக்கும் முதலாவது கூட்டத்திலேயே யுத்தத்தில் ஈடுபட்ட அனைத்துப் படை யினரையும் பாதுகாப்பேன் என உத்தரவாதம் வழங் கிய ஜனாதிபதியிடமிருந்து எப்படித் தமிழர்கள் நம்பக ரமான பொறுப்புக்கூறலை எதிர்பார்க்கமுடியும்? ‡ என்ற கேள்வி எழுகின்றது.

பொறுப்புக்கூறல் விடயத்தில் வெற்று வாக்குறு திகளோடு மாத்திரம் நின்றுவிடாது, செயலிலும் காத்திர மான நடவடிக்கையை மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்ற செய்தியை மே மாத முற்பகுதியில் இலங்கை வரவுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி ஆணித்தரமாக இலங்கை அரசுக்குத் தெரிவிப்பதுடன், என்னதான் உள்நாட்டு அரசியல் அதிகா ரப்போட்டிகள் இடம்பெற்றாலும் சர்வதேசம் பொறுப்புக் கூறல், நல்லிணக்கம் ஆகிய விடயங்களில் இலங்கை யிடமிருந்து அர்த்தபூர்வமான செயற்பாட்டை எதிர்பார்த்து உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றதென்ற செய்தியையும் தெரிவித்துச் செல்வது மிகவும் அவசிய மாகும்.

சுடர் ஒளியின் 20.04.2015 ஆசிரியர் தலையங்கம் 

No comments:

Post a Comment