Sunday, August 3, 2014

காஸாவும் முள்ளிவாய்க்காலும்

ஆசிரியர் தலையங்கம் 03-08-2014



இன்றைய நாட்களில் காஸாவில் இஸ்ரேல் அரங்கேற்றிக்கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஐந்துவருடகாலங்களுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் என்னவெல்லாம் நடைபெற்றிருக்கும் என்பதை மீண்டுமாக மனக்கண் முன்கொண்டுவந்து நிறுத்துகின்றன. தினம் தினம் வருகின்ற செய்திகளும் புகைப்படங்களும்  இரும்பான மனங்களிலும் கண்ணீரைச் சிந்தவைக்கும் அளவிற்கு நிலைமைகள் மோசமாகிக்கொண்டிருப்பதை துல்லியமாக உணர்த்துகின்றன.

குறிப்பாக உயிரற்ற நிலையில் சடலங்களாக்கிடக்கும் பாவமறியா பச்சிளம் குழந்தைகளினதும் குற்றுயிராக உயிராக ஜீவ மரணப்போராட்டத்தில் சிக்குண்டிருக்கும் சிறார்களினதும் புகைப்படங்களைப் பார்க்கையில் மனதை உருக்கும் வேதனையின் பரிமாணத்தை வார்த்தைகளால் விவரித்துவிடமுடியாது.

காஸா மீது காட்டுமிராண்டித்தனமாக இஸ்ரேல் கட்டவிழ்துவிட்டுள்ள புதிய கட்டத்தாக்குதல்கள் இன்றுடன் 27வது நாட்களை எட்டியிருக்கின்ற நிலையில் நேற்று வரையில் 1600ற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 8000ற்கு அதிகமானோர் காயமுற்றுள்ளனர். உயிரிழந்த மற்றும் காயமுற்றோரில் அனேகமானோர் பொதுமக்களாக அதிலும் குறிப்பாக சிறுவர்களும் பெண்களுமாக இருப்பதில் இருந்து போரென்பது உண்மையில் யாரை அதிகமாக பாதிக்கின்றதென்பதை புரிந்துகொண்டுவிடலாம்.

மத்தியதரைக்கடலைக் மேற்கு எல்லையாகக் கொண்டுள்ள காஸா மொத்தமாக கொண்டுள்ள 360 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ள சிறிய நிலப்பிரதேசமாகும். 41 கிலோ மீற்றர் நீளத்தையும் 6 முதல் 12 கிலோ மீற்றர் வரையான அகலத்தையும் கொண்டுள்ள காஸா நிலப்பரப்பில் 18 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்வதாக பரவலாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இந்தச் சிறிய நிலப்பரப்பிற்குள் இவ்வளவு தொகையான மக்கள் வாழ்வதையும் பொருட்படுத்தாது இஸ்ரேலிய படைகள் முன்னெடுத்துவரும் மிலேச்சத்தனமான தாக்குதல்களால் காஸா இன்றொரு கொலைக்களமாக மாற்றம்பெற்றிருக்கின்றது.

ஐந்துவருடங்களுக்கு முன்னர் காஸாவிலும் பார்க்க பன்மடங்கு சிறிதான முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் ஏறத்தாழ அரைமில்லியன் மக்கள் அடர்த்தியாக குவிந்திருந்த பிரதேசத்தில் தாக்குதல் நடத்தப்பட்டபோது மக்கள் பட்ட துன்ப துயரங்களை எண்ணிப்பார்க்கும் ஒவ்வொரு தருணத்திலும் இதயத்தில் ஆறாத வலிகள் பெருக்கெடுப்பதை மறுத்துவிடமுடியாது.

காஸா மீது இஸ்ரேல் அதி நவீன ஆயுதங்களைக் கொண்டு தரைவழியாகவும் வான் வழியாகவும் மேற்கொள்ளும் தாக்குதல்களால் உயிர்களுக்கும் உடைமைகளுக்கு ஏற்பட்டுவருகின்ற சேதங்களின் ஒட்டுமொத்த பரிமாணத்தை விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும் கணிசமான அளவிற்கு அங்கு நடைபெறும் அட்டூழியங்களை அங்கு களத்திலே நேரடியாக நின்று செய்திசேகிக்கின்ற செய்தியாளர்களும் புகைப்படப் பிடிப்பாளர்களும் வெளிக்கொண்டுவருகின்றனர். இவர்களில் பலர் சர்வதேசத்திலுள்ள முன்னணி செய்தி ஊடகங்களின் செய்தியாளர்களாகவும் இருப்பதால் அந்த ஊடகங்களுடாக உலகெங்கும் காஸாவின் துயரம் சென்றடையும் சந்தர்ப்பம் இதுவரையில் கிட்டியிருக்கின்றது.

அத்தோடு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களும் காஸாவில் இன்னமும் பிரசன்னமாகியிருப்பதனால் அடைக்கலம் தேடி உயிரையேனும் காத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையாவது எஞ்சியிருக்கும். ஆனால் அந்த நம்பிக்கை கூட அருகிப்போவதாக ஐநாவின் பராமரிப்பிலிருக்கும் பாடாசாலை அகதி முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் கடந்த வாரத்தில் 15ற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்ட தாக்குதல் உணர்த்துகின்றது. இதுபோன்ற சம்பவங்களால் நம்பிக்கை நாளாந்தம் தகர்ந்துபோனாலும் ஐநா போன்ற அமைப்புக்களின் பிரசன்னம் இருக்கும் வரையில் பாதிக்கப்படும் மக்களுக்கு ஏதோ ஒரு நம்பிக்கை மிஞ்சியிருக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

ஐநா தரப்பினரின் பிரசன்னம் இருக்கின்ற நிலையிலேயே இஸ்ரேலிய படையினர் நடத்தும் தாக்குதல்களின் மிலேச்சத்தனம் இப்படியிருக்கின்றதென்றால் ஐக்கிய நாடுகள் சபைபோன்ற சர்வதேச அமைப்புக்களோ சர்வதேச ஊடகவியலாளர்களோ ஏன் உள்நாட்டு ஊடகவியலாளர்களோ இன்றிய நிலையில்  முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூரங்கள் எந்தளவிற்கு அகோரமானதாக இருந்திருக்கும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே நெஞ்சம் பதைக்கின்றது.

முப்பதாண்டு கால யுத்தத்தின் வடுக்கள் ஆறக் காலம் எடுக்கும்  என அடிக்கடி கூறுவதனாலோ அதன் படி காலத்தின் ஓட்டத்தாலோ  மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்களின் வலிகளை இல்லாமல் செய்து இந்த நாட்டில் நல்லிணக்கத்தை அடைந்துவிடமுடியாது . நடுநிலை ஊடகவியலாளர்களினதோ நடுநிலையான உலக அமைப்புக்களினதோ பிரசன்னமின்றி முன்னெடுக்கப்பட்ட இறுதி யுத்தத்தில் என்ன நடைபெற்றது என்பதை உண்மையாக அறிந்துகொள்வதற்கு ஐநா வின் சர்வதேச விசாரணைக் குழுவுடன் ஒத்துழைப்பதும் தாமாக அமைத்துள்ள விசாரணைக்குழுவை சுதந்திரமாக செயற்பட அனுமதிப்பதும் முக்கியமானதாகும்.

எமது நாட்டில் நிரந்தர நல்லிணக்கத்தை அடைவதற்கான அர்த்தபூர்வமான முதற்படியாக அமையக்கூடிய இந்த விசாரணைகளை அரசு இதயசுத்தியுடன் அணுகுமேயானால் அடுத்தடுத்த படிகளும் தொடர்ந்து நம்பகத்தன்மை கொண்டவையாகவும் ஆக்கபூர்வமாகமானவையாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

No comments:

Post a Comment