Thursday, March 18, 2021

ஜெனிவாவில் இலங்கையை இந்தியா ஆதரிக்கும் என வெளிவிவகார செயலாளர் கூறுவது உண்மையா?

 


ஜெனிவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது கூட்டத்தொடரில் இலங்கை மீதான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நெருங்கிவரும் நிலையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பலரதும் கேள்வியாக இருக்கின்றது. ஆனாலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் முன்னர் இலங்கையின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கு இந்தியா உறுதிமொழியளித்துள்ளதாக இலங்கையின் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

தேசிய அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த 3வது கலந்துரையாடலின் போதே அவர் இந்தத்தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை பெரிதும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ள வெளிவிவகார செயலாளர் இறையாண்மையை மதிக்கின்ற எந்தவொரு அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜெனிவாவில் இலங்கையை ஆதரிக்கும் நிலைப்பாட்டை இந்தியா உத்தியோகபூர்வமாக எடுத்துவிட்டதா?என இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு நெருக்கமான வட்டாரத்தில் வினவியபோது இந்தியா இன்னமும் உத்தியோகபூர்வமான நிலைப்பாட்டை எடுக்கவில்லை எனக் கூறப்பட்டது. எங்கிருந்து இலங்கை வெளிவிவகார செயலாளர் இந்தியாவின் ஆதரவு என்ற உத்தரவாதத்தைப் பெற்றார் என்பது வியப்பாக உள்ளதெனவும் அவ்வட்டாரம் மேலும் தெரிவித்தது.

No comments:

Post a Comment