Thursday, October 14, 2010

INTERVIEW WITH NORTHERN PROVINCE GOVERNOR

வடக்கில் ஏற்பட்டு வருகின்ற முன்னேற்றங்களை இன்னமும் சில மாதகாலத்தில் நன்குணரமுடியும்
                          வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி


நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்


வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி தெரிவிக்கின்றார்.


அரசியல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைத்தவிர ஏனைய விடயங்கள் குறித்து கேள்விகளை தொடுங்கள் என்ற ஆளுநரின் முன்நிபந்தனையைத் தொடர்ந்து நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்

கேள்வி: உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றம மற்றும் அவர்களது காணிகள் விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்:பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் செப்டம்பர் 14ம்திகதிமுதல் ஆரம்பமாகியதாக எனக்கு தெரியத்தரப்பட்டது வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் மக்களை குடியேற அனுமதித்துள்ளதால் அங்கு 800 குடும்பங்கள் சென்று மீளக்குடியேறியுள்ளன.


 இதுமட்டுமன்றி பாதுகாப்பு படையினர் அந்தப்பகுதியை சிறப்பான முறையில் துப்பரவுசெய்துள்ளதுடன் மேலும் பல வேலைகளையும் ஆற்றியுள்ளனர் கூட்டுறவு நிலையவசதிகள் பாடசாலை வசதிகள் தபாலக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுடன் அந்தப்பகுதியிலுள்ள அனைத்து கிணறுகளையும் சுத்திகரித்துக்கொடுத்துள்ளனர்.


 அரசாங்கத்தரப்பில் அவர்கள் மீளச் சென்று குடியேறுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை நாமும் செய்துகொடுத்துள்ளோம் கடைசியாக இடம்பெற்ற யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது தெல்லிப்பழை பகுதியிலும் சில இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 தனங்கிளப்பு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக ஆறுமாதங்களுக்கு முன்னர் படையினரால் மக்களிடம் திருப்பியொப்படைக்கப்பட்டது அந்த 2000ம் ஏக்கரிலும் பயிர்ச்செய்கைபண்ணப்பட்டுள்ளது இன்னும் ஆயிரம் ஏக்கர்கள் பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்படவுள்ளது இது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன இந்தவகையில் முன்னேற்றங்கள் விரைவாக ஏற்பட்டுவருகின்றன மாற்றங்கள் துரிதமாக இடம்பெறுவதையும் அனேக முற்னேற்றங்கள் இடம்பெறுவதையும் இன்னமும் சில மாதகாலத்தில் உணர்வீர்கள்


கேள்வி : கண்ணிவெடி அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது ?

பதில்:தற்போது மடு முகமாலை புதுமத்தளான் புதுக்குடியிருப்பு பச்சிலைப்பள்ளி நாகர்கோவில் தெற்கு ஆகியபகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன .யாழில் சிறுசிறுபகுதிகளில் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது;


பாதுகாப்பு படையினருடன் மேலும் ஆறு நிறுவனங்களும் இந்தப்பணியில்ஈடுபட்டுள்ளன. புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றிமுடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக்கூற முடியாது புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முன்னரங்குகள் காணப்பட்டமையால் அங்கு பெருவாரியான கண்ணிவெடிகள் புதைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுவற்கு நீண்டகாலங்கள் தேவைப்படும் ஆனாலும் காலவரையறை கூறமுடியாது



கேள்வி: கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில்எழாயிரத்திற்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களும் 14ஆயிரத்திற்கு மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்திவெளியிட்டிருந்தது .இவை தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

பதில்:யுத்த காலத்தின் போது மக்களால் புதுமத்தளான் பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்களை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல மில்லியன் ருபாவை செலவிட்டு நாம் கிளிநொச்சிக்கு கொண்டுவந்தோம் ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று அங்கு ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் காணப்படவில்லை மாறாக400 -600வரையான மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.


 இதனைத்தவிர 14ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளும். ட்ரக்கடர்கள் அடங்கலாக 30 கனரக வாகனங்களும் உள்ளன .இவற்றில் 20வீதமானவற்றை நாம் அடையாளங்கண்டுள்ளோம் அடையாளம் தொடர்பிலும் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும் அனுமதிப்பத்திரம் மற்றும ஆவணங்கள் இல்லாத நிலையில் அரசாங்கம் எதையும் எடுத்தஎடுப்பில் யாருக்கும் கொடுத்துவிடமுடியாது அரசாங்கத்தின் நடைமுறையின் கீழ் யார்யார் தமது ஆவணங்களை சமர்பிக்கின்றார்களோ அதனை திருப்பித்தரமுடியும். பொலிஸ் நிலையத்திலும் அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் பதிவுசெய்த பின்னர் இந்த வாகனங்கள் இவர்களுக்கு உரியது என உறுதிசெய்தால் அவர்களுக்குரியதனைத்தும் வழங்கப்படும். சைக்கிள்களை நாம் மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளோம் நல்ல நிலையில் இருந்த சைக்கிள்க்ள அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன ஏற்கனவே 7000 அதிகமான துவிச்சக்கர வண்டிகளை நாம் விநியோகித்துள்ளோம் ஏனையவற்றை ஒரு நிறுவனமொன்று இலவசமாக திருத்தவுள்ளது அதற்கு பின்னர் நாம் இலவசமாக அந்த சைக்கிள்களை கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு வழங்கவுள்ளோம் இதுதான் மாகாண மட்டத்தில் எமது திட்டமாகும்
  .

கேள்வி: யுத்தகாலத்தின் போது பலர் தமது ஆவணங்களை இழந்திருக்கும் சாத்தியம் உள்ளநிலையில் அத்தகைய மக்கள் எவ்வாறு தமது வாகனங்களை திருப்பிப்பெறமுடியும் ?

பதில்:அவர்களுக்கு வழிமுறையுள்ளது அவர்கள் பெறவேண்டுமானால் அவர்கள் கொழும்பிற்கு வரமுடியும் வந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று அவர்களுடைய ஆவணங்களை இனங்காண முடியும் அவர்களிடம் நிச்சயமாக பிரதிகள் இருக்கும் என நினைக்கின்றேன் அவர்களது பெயர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உள்ளதா என எப்போதுமே பார்வையிடமுடியும்.


அங்கு தமது கோப்பை(FILE) இனங்ண்டு அதில் பிரதிஎடுத்துக்கொண்டுவந்து அதனை கிளிநொச்சியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அது ஒரிஜினல் ஆவணமாக இருப்பதால் அதனை அரசாங்க அதிபரும் பொலிஸாரும் ஏற்றுக்கொள்வர்.


இதனைத்தவிர கிளிநொசசியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள  வளாகத்தில் அலுவலகம் ஏற்கனவே உள்ளது யாரேனும் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காணமுடிந்தால் அவர்கள் அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாராய முடியும் அங்கிருந்து ஆவணமொன்றை பெற்று கொழும்பிற்கு வரமுடியும் அவர்கள் தமது வாகனத்தை  பதிவுசெய்திருந்தால் அனுமதிப்பத்திரங்களுக்கு கொடுப்பனவுகளைச்செய்திருந்தால் நிச்சயமாக அந்த ஆவணம் கொழும்பில் இருக்கும் அவர்களிடம் அடையாள அட்டை அன்றேல் கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் இருக்கும் அதனை வைத்துக்கூட ஆவணங்களை பெற்றுக்கொள்ளமுடியும்


கேள்வி: யுத்தம் நிறைவடைந்து சுமார் ஒன்றரைவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்தளவு வரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகள் போன்ற விடயங்களிலும் இதே நிலை காணப்படுகின்றதே நம்பிக்கைதரும் நடவடிக்கைகள் இதுவிடயத்தில் இடம்பெறுகின்றதா?

பதில் :வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரையில்   வடமாகாணத்தை தனியாக எடுத்து நோக்கவேண்டும் ஏனென்றால் யுத்தம் நிறைபெற்ற பின்னர் வந்த முதலாவது வருடகாலப்பகுதி முற்றுமுழுதாக மீளக்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது அபிவிருத்தி துறையில் உட்கட்டமைப்பு அபிருத்தியுடன் நீர்ப்பான பகுதிக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது


இவ்வருடத்தில் மேலதீகமாக 80 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலத்தில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளது இவைதான் எமது தற்போதை முன்னுரிமைகளாகும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப்பொறுத்தவரையில் அவை உரிய காலத்தில் வடமாகாணத்திற்கு வந்துசேரும் நாம் தற்போது முழுமையான ஆய்வை மேற்கொண்டுவருகின்றோம் ஏற்கனவே முதலீட்டு வாய்ப்புக்களுக்காக ஐந்து மாவட்டங்களிலும் ஐந்து பிரதேசங்களை அடையாளங்கண்டுள்ளோம் .


கேள்வி: வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்திலும் கைத்தொழில் வலயங்களை இனங்கண்டுள்ளதாக கூறினீர்கள். இதுபற்றி சற்றுவிரிவாக கூறுங்கள் ?

பதில்:மன்னார் தீவுக்கு அருகாமையில் கைத்தொழில் வலயமொன்று அமையவுள்ளது கடந்தகாலத்தில் கூட கைத்தொழில்கள் அந்த வலயத்தில் காணப்பட்டன .அந்த வலயம் 40 ஏக்கர்களைக் கொண்டது அதை நாம் ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளோம் .வவுனியாவிற்கு வடக்கே ஒமந்தைப் பிரதேதசத்தில் கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக நாம் 45 ஏக்கர் பிரதேசத்தை தெரிவுசெய்துள்ளோம் .அது தயாராகவுள்ளது கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நாம் ஏற்கனவே 100 ஏக்கர் நிலப்பரப்பை கைத்தொழில் அபிவிருத்திக்காக தெரிவுசெய்துள்ளோம் .கிளிநொச்சி நகரில் இருந்து 3கிலோமீற்றர்கள் தூரத்தில் இது அமைந்துள்ளது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் கைத்தொழில் அபிவிருத்திக்காக நாம் நிலப்பரப்பை இனங்கண்டுள்ளோம் அது தர்மபுரம் பகுதிக்கு அண்மையாகவுள்ளது.


  யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி கைத்தொழில் வலயம் உள்ளது அங்கு சுமார் 25 கைத்தொழில் துறைகள் வரவுள்ளன. கைத்தொழில் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசத்திற்கு தேவையான நீர்வசதி மின்சார வசதியெல்லாவற்றையும் நாம் வழங்குவோம்


இந்த கைத்தொழில் வலயங்களில் முதலிடுவதற்கு யாரேனும் ஆர்வமாக இருப்பின் அவர்கள் பணத்துடன் வருவார்களாக இருப்பின் பணத்தை செலவிட தயாராக இருப்பின் அவர்கள் வந்து எம்முடன் பேசவேண்டும் அப்போது அந்த கைத்தொழில் வலயங்களில் வாய்ப்புக்களை வழங்குவோம் ஆனால் அவர்கள் உண்மையாக வரவேண்டும் இதனைச் செய்வதன் மூலமாக மாகாணம் அபிவிருத்தியடைவதுடன் அதன் நன்மைகள் உள்ளுர் பொருளாதாரத்தை சென்றடையவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.


கேள்வி: யாழ் மாவட்ட முன்னாள் படைத்தளபதி என்ற வகையில் யாழ்மாவட்டத்தின் தற்போதை பாதுகாப்பு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: வடமாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமையை மேற்கொள்ளும் பாங்கையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் கிரமமான முறையில் அதனை முன்னெடுத்துவருகின்றனர்.பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பக்கத்தைமட்டுமன்றி மக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர் .


வீடுகள் புனரமைப்பு பணி தற்காலிக குடியிருப்பு நிர்மாணப்பணி கடற்தொழில் படகு திருத்தியமைக்கும் பணி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளிலும் அதிகமான ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர். மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காக அவர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பையிட்டு முன்னாள்இராணுவ அதிகாரி என்றவகையில் மிக்க மகிழ்சியடைகின்றேன்.

கேள்வி: யுத்தம் நிறைவுற்ற பின்னர் வடமாகாணத்தை நோக்கி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது ..இது எதைக்காண்பிக்கின்றது?

 பதில்: ஏ9 வீதி திறந்த காலப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சென்றிருப்பார்கள் என்பது எனக்கு நிச்சயமாகும் அதிகமான மக்கள் அங்கு செல்கின்றனர் குறிப்பாக வார இறுதிநாட்களில் 40ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அங்கு காணப்படுகின்றனர் அவர்கள் நயினாதீவு நல்லூர்க்கோவில் கீரிமலை ஏனைய பகுதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் யாழ் கோட்டை ஓல்ட்பார்க் அனைத்துபகுதிகளுக்கும் சென்று யாழ்மக்களுடன் கலந்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகின்றனர் .


அங்கு உன்னதமான நிலை காணப்படுகின்றது இந்த போக்கு தொடரவேண்டும் என நான் கருதுகின்றேன் வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் தற்போது உள்ளூர் சுற்றுலாத்துறை அபிவிருத்திகண்டுவருகின்றது ஏற்கனவே புலம்பெயர்ந்தமக்கள் வரத்தொடங்கியுள்ளனர் .கடந்த நல்லூர் திருவிழாவின் போது 75ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உலகின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் வருகைதந்திருந்தனர் திருவிழாவின் இறுதிநாளில் நானும் அங்கிருந்து பெருந்திரளான மக்களின் பிரசன்னத்தை கண்ணுற்றேன் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர் சேர்ந்து செயற்படத்தொடங்கியுளளனர் திட்டங்களை இணைத்து செயற்படுத்திவருகின்றோம்

கேள்வி:அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

பதில் : வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டமானது கடந்தவருடம் ஜுலை மாதத்தில் ஆரம்பமாகியிருந்தது இதுவரையில் ஒருவருடமும் இரண்டு மாதகாலமும் சென்றுள்ளநிலையில் பல்வேறு துறைகளிலும் நாம் பெருமளவிலான பணிகளை ஆற்றியுள்ளோம் குறிப்பாக மீள்குடியேற்றம்  உட்கட்டமைப்பு அபிருத்தி வாழ்வாதார நடவடிக்கைகள்  சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளிலும் பல்வேறு பணிகளைச் செய்துமுடித்துள்ளோம் .இந்த ஒருவருட காலத்திற்குள்ளாக நாம் செய்துமுடித்துள்ளவை அளப்பரியதாகும் இது அரசாங்கத்தின் சிறப்பான திட்டமிடல் மற்றும் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்பின் மூலமாகவே இது  சாத்தியமாகியுள்ளது



கேள்வி: வடமாகாண மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்றவகையில் கல்வித்துறை தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில்:செட்டி குளத்தில் தற்போது சுமார் 25000 பேரே உள்ளனர் அதில் ஏழாயிரம் வரையிலான சிறுவர்கள் மாத்திரமே உள்ளனர்.சிறுவர்கள் திரும்பிச்சென்றுள்ள அனைத்துப்பகுதிகளிலும் நாம் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம் வடமாகாணம் முழுவதிலும் உள்ள 1110 பாடசாலைகளில் 79 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இயங்குகின்றன இந்த 79 பாடசாலைகளும் மீள்குடியேற்றம் இன்னமும் இடம்பெறாத பகுதிகளிலேயே காணப்படுகின்றன .


சிறுவர்கள் தம்தம் பகுதிகளுக்கு திரும்பிச்செல்லும் போது தற்காலிக கல்வி நிலையங்களை இருவாரகாலத்தில் நிறுவி அவர்கள் தமது கல்வியை உடனடியாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் பாடாலைகள் சாதனங்கள் சீருடைகள் பாடப்புத்தங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் யுத்தகாலப்பகுதியில் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்றவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்றபகுதிகளுக்கு திரும்பிவரவேண்டியுள்ளது அவர்களுக்கு அரசாங்கம் இலவசபோக்குவரத்துச்சேவையை வழங்கியுள்ளது அவர்களது தங்குமிடவிடயத்தில் இன்னமும் பிரச்சனை உள்ளது விரைவில் அந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகாணவுள்ளோம் .


ஆகக்குறைந்தது விரைவாக அவர்களுக்கு தற்காலிக தங்குமிடவசதிகளையாவது ஏற்படுத்திக்கொடுக்க முனைகின்றோம் அனைத்துவிடயங்களும் நூற்றுக்கு நூறு வீதம் நேர்த்தியாக இருக்கின்றதென நாம் கூறவரவில்லை மாறாக சிறுவர்களுக்கும் அவர்களது கல்விச் செயற்பாடுகளுக்கும் 80வீதமான வசதிகள் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்




No comments:

Post a Comment