Thursday, October 14, 2010

PAKISTAN NEW TEST CRICKET CAPTAIN MISBAH UL HAQ

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் புதிய தலைவர் நியமனமும் 
        அவ்வணி எதிர்நோக்குகின்ற சிக்கல்களும்

பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணியின் புதிய தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரத்தில் வெளியான தகவலைப்பார்த்த போது மீண்டும் புதிய தலைவரா என்ற ஆதங்கமே ஏற்பட்டது

கடந்த சில ஆண்டுகாலப்பகுதியில் ஏன் கடந்த சில மாதங்களுக்குள்ளாக பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எத்தனை பேர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதே வியப்பானது ஏன் இவ்வாறு அடிக்கடி புதியதலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது அதனைவிடவும் வியப்பானது

2010ம் ஆண்டில் பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட 4வது வீரர் மிஸ்பா உல் ஹக் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது இதற்கு முன்பாக இவ்வாண்டில் மொஹம்மட் யூசுப் ஷஹீட் அப்ரிடி மற்றும் சல்மான் பட் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சல்மான் பட் கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையிலேயே அடுத்த மாதம் தென் ஆபிரிக்க அணிக்காக அபுதாபியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ற் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணி அந்நாட்டு அரசியலைப் போன்றே ஸ்திரமற்ற நிலையில் உள்ளதனையே அண்மைக்கால செயற்பாடுகள் காண்பித்துநிற்கின்றன.

அணியின் வீரர்களை எடுத்த கதியில் நீக்குவது பின்னர் சேர்த்துக்கொள்வது என நீண்டகால திட்டமிடலற்ற தீர்மானங்கள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் காணப்படுகின்றன .

இதன் காரணமாக பிறப்பிலேயே அதிக திறமை கொண்ட பல வீரர்களை அடுக்கடுக்காக சர்வதேச களத்திற்கு அனுப்பியும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்களிடமிருந்து உச்சப்பயன்பாட்டை பெறமுடியாத துர்;ப்பாக்கி நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

18வது இளம் வீரர் மொஹம்மட் ஆமிரின் கிரிக்கட் வாழ்வு இதற்கு நல்ல உதாரணம் கடந்தாண்டு ஜுலை மாதம் டெஸ்ற் பிரவேசத்தை மேற்கொண்ட ஆமிர் இவ்வாண்டு ஒகஸ்ற் மாதத்துடன் தனது டெஸ்ற் வாழ்வை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 தாம் விளையாடிய 14 டெஸ்ற் போட்டிகளிலேயே 51விக்கட்டுக்களை வீழ்த்தி அபாரத் திறமை வெளிப்படுத்திய ஆமிர்; கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் தான் இவ்வாண்டின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஏனெனில் இவ்வாண்டு அந்த விருதை வென்ற இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின் 32 விக்கட்டுக்களை மாத்திரமே வீழ்த்தியிருந்ததை சுட்டிக்காட்டத்தக்கது.

18வயதில் அதுவும் கிரிக்கட் அரங்கில் பிரவேசித்து ஒருவருடம் கூட பூர்த்தியாவதற்கு முன்னர் ஆமிரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்துக்களை நஷார் ஹுஸைன் போன்ற கிரிக்கட் பிரபலங்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

உரிய முறையில் திறமை காண்பித்தால் அணியில் நீண்டகாலம் விளையாடமுடியும் அதற்கு இன்னுமின்னும் உழைக்கவேண்டும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஸ்திரமான அணியில் உள்ளவர்களுக்குதான் ஏற்படும் மாறாக அணியில் இருப்பதே நிச்சயமில்லை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காரணங்கள் இன்றி நீக்கப்படலாம் என்ற நிலை காணப்பட்டால் உண்மையிலேயே நல்ல எண்ணங்கொண்ட வீரர்கள் கூட அவர்களது எதிர்;காலம் குறித்த நிச்சயமற்ற நிலைகாரணமாக கிரிக்கட் சூதாட்டம் போன்ற விரும்பத்தகாத செயற்பாடுகளை நோக்கி; இழுபட்டுச்செல்கின்ற நிலைமையே ஏற்படும் என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலிய டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு அலன் போர்டர் மார்க் டெய்லர் ஸ்டீவ் வோ அடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிக்கி பொன்டிங் ஆகிய ஐந்துபேர் மாத்திரமே தலைமை வகித்துள்ளனர். இது அந்த அணியின் ஸ்திர நிலைக்கு சான்றாக அமைந்ததுடன் இந்தக்காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ற் கிரிக்கட் ஜாம்பவான்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய தொடர்களைத் தவிர ஏனையவற்றில் பெரு வெற்றிகளை ஈட்டியிருந்தது


மறுமுனையில் பாகிஸ்தான் அணி 1990ம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இம்ரான் கான் வஸீம் அக்ரம் வக்கார் யூனுஸ் சலீம் மலிக் ரமீஸ் ராஜா சயீட் அன்வர் ஆமீர் சொகைல் ரஸீட் லத்தீவ் மொயின் கான் இன்ஸமாம் உல் ஹக் மொஹமட் யூஸுவ் யூனிஸ்கான் ஷொகைப் மலிக் ஷாஹிட் அப்ரிடி சல்மான் பட் தற்போது மிஸ்பா உல் ஹக் என 16பேர் அணிக்கு தலைமை வகித்துள்ளனர் இந்தக்காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி பெற்ற டெஸ்ற் தொடர் வெற்றிகளை விரல் விட்டெண்ணிவிடலாம் தோல்விகளே அதிகமாக காணப்பட்டது


 அணியில் ஸ்திரமற்ற நிலைமை அவ்வணிவீரர்களை சூதாட்டம் உட்பட பல்வேறு சிக்கல்களில் தள்ளிவிட்டுள்ளதையே நிதர்சனம் உணர்த்திநிற்கின்றது


No comments:

Post a Comment