Tuesday, September 1, 2020

பாராளுமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்க நாணயற்சுழற்சியா?



இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினரொருவரை நாணயச்சுழற்சி  மூலம் தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையை நோக்கிய நகர்வுகளுக்கு சட்டமா அதிபரின் தீர்மானம் வழிவகுத்துள்ளது. 

கடந்த மாதம்  நடைபெற்ற பொது தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரேமலால் ஜெயசேகரவை மரணதண்டனை குற்றவாளியாக நீதிமன்றம்  அறிவித்திருந்ததால் அவருக்கு பாராளுமன்ற அமர்வுகளில் பங்குபெற்ற முடியாதென சட்டமா அதிபர் நேற்றையதினம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கும் நீதி அமைச்சிற்கும் அறிவித்திருந்தார்.

இதன் மூலம் இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இரத்தினபுரி மாவட்டத்தில் காலியாகியுள்ள  பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு விருப்பு வாக்கில் அடுத்த இடத்தில் உள்ளவரை தெரிவுசெய்ய நாணயசுழற்சி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது..

வழமையாக வாக்குகள் மூலம் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இறந்தாலோ அன்றேல் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ அந்த பாராளுமன்ற உறுப்பினர் போட்டியிட்ட மாவட்டத்தில் விருப்புவாக்குகள்பட்டியலில்  அடுத்த இடத்தில் உள்ளவரே புதிய உறுப்பினராக தெரிவுசெய்யப்படுவார். 

என்றாலும் இரத்தினபுரி மாவட்டத்தில்  ஒரு சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. விருப்புவாக்குகள்பட்டியலில் அடுத்த இடத்தில் இரண்டுபேர் ஒரே சமமான வாக்குகளை பெற்றுள்ளமையே காரணமாகும்.

பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்டிருந்த ரஞ்சித் பண்டார மற்றும் சன்னி ரோஹன கொடித்துவக்கு ஆகிய இருவரும்  தலா 53,261 வாக்குகள் என்ற அடிப்படைடியில் பெற்றுள்ளனர்.

இதன்காரணமாக தேவை ஏற்படும் நிலையில் இந்த வெற்றிடத்துக்கு புதிதாக பாராளுமன்ற உறுப்பினரொருவரை நியமிக்க நாணயசுழற்சி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையர் நாயகம்  சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி மாவட்டத்திற்கு பொறுப்பான தெரிவத்தாட்சி அதிகாரியே இந்த நாணயச்சுழற்சியை மேற்கொள்வார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment