Friday, September 18, 2020

தனிப்பட்ட கோபம் காரணமாக பொலிஸ் மாஅதிபரை பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு மைத்திரி அழைக்காமை அம்பலம்

 



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெறும் வரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பூஜித் ஜயசுந்தரவை பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு அழைக்காமைக்கான காரணம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த சில்வாவின் இடமாற்றத்தினால் ஏற்பட்ட பிரச்சினையினால் என தெரியவந்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ நேற்றைய தினம் இரண்டாவது நாளாகவும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிசாந்த சில்வாவுக்கு இடமாற்றம் வழங்குமாறு உத்தரவிட்ட நிலையில் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர இடமாற்றம் வழங்கினார். அதன்பின்னர் யார் இடமாற்றம் வழங்கியதென ஜனாதிபதி கேள்வி எழுப்பிதாக ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

கடந்த வருடம் ஏப்ரல் 8 ம் திகதி தேசிய புலனாய்வு பிரிவின் பிரதானி தன்னை சந்திக்க வருகை தந்து பின்வரும் தகவல்களை தெரிவித்ததாக ஹேமசிறி குறிப்பிட்டார். இந்த தகவல்களை நன்றாக ஆராய்ந்து நாளைய கூட்டத்தில் பேசுபொருளாக இந்த விடயங்களை எடுக்குமாறு நிலந்தவுக்கு தெரிவிக்குமாறு புலனாய்வு சேவையின் பிரதானி ஆலோசனை வழங்கினார்.

எனினும் மறுநாள் கூட்டத்தில் சஹ்ரான் ஹாசிம் தீவிரவாத கருத்துக்களை பரப்புவதாகவும் பிரிவினைவாத போக்குடன் செயற்படுவதாகவும் நிலந்த தெரிவித்தார். எனினும் அவர் ஒரு தீவிரவாதி என குறிப்பிடவில்லை. 4 ம் திகதி கிடைத்த விடயங்கள் தொடர்பில் நிலந்த விடயங்களையும் அங்கு குறிப்பிடவில்லை. கூட்டத்தின் முடிவில் சிசிர மென்டிஸ் நிலந்தவின் கைகளில் இருந்த தகவல்களை என்னிடம் காட்டினார். நான் அது என்ன தகவல் என கேட்டேன். இது பொலிஸ் மா அதிபருக்குரியதெனவும் இது இன்னும் திரட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். அதனை நிறைவு செய்து தருவதாகவும் பதிலளித்தாக ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை தான் பாதுகாப்பு செயலாளராக கலந்துகொண்ட முதல் கூட்டத்தில் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர கலந்துகொண்டதாகவும் அதன் பின்னரான கூட்டங்களுக்கு பூஜித்த ஜயசுந்தரவை வரவழைக்க வேண்டாமென ஜனாதிபதி தனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் ஹேமசிறி குறிப்பிட்டார். 2018 ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழறுபடியின் பின்னர் அப்போதய பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மற்றும் ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்த்தன ஆகியோர் பாதுகாப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லை.

ஒக்டோபர் மாத அரசியல் புரட்சியின் பின்னர் நான் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை கூட்டத்திற்கு அழைக்காவா என ஜனாதிபதியிடம் கேட்டதாகவும் தேவையில்லை. பிறகு குறிப்பிடுவோம் என ஜனாதிபதி பதில் வழங்கியதாக ஹேமசிறி குறிப்பிட்டுள்ளார். 52 நாள் ஆட்சியின் போது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு குழு கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லையென்றும் ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கும் போது ஹேமசிறி பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். பின்னர் மீண்டும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக தெரிவுசெய்யப்பட்ட போது ஜனாதிபதியிடம் 2002 ம் ஆண்டு சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதிகளிலும் பாதுகாப்பு சபை கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க கலந்துகொண்டதாக தெரிவித்தேன். எனினும் இல்லை, இல்லை நான் இந்த கூட்டங்களுக்கு வரவழைக்க மாட்டேன் என ஜனாதிபதி பதில் வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.

பூஜித்த ஜயசுந்தர ஏன் பாதுகாப்பு கூட்டங்களுக்கு அழைக்கப்படவில்லையென அரச மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் கேள்வி எழுப்பினார். ஜனாதிபதி தெரிவித்தமையினால் பொலிஸ் மா அதிபர் நிசாந்த சில்வாவை நீர்கொழும்பு பிpரிவுக்கு இடமாற்றம் செய்ததை அடுத்து அதனை பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் அறிவிpத்தார். அதன் பின்னரான 3 நாட்களில் தனக்கு தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தி நிஷாந்த சில்வாவை ஏன் இடமாற்றம் செய்தீர்கள் என ஜனாதிபதி கேட்டதாகவும், நீங்களே அதற்கு உத்தரவிட்டீர்கள் என தான் குறிப்பிட்டதாகவும் ஹேமசிறி தெரிவித்துள்ளார். பின்னர் நான் இடமாற்றம் வழங்குமாறு குறிப்பிடவில்லை என தெரிவித்து தொலைபேசி அழைப்பை ஜனாதிபதி துண்டித்தார்.

அதன்பின்னர் ஜனாதிபதியை சந்திக்க சென்றபோது பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு பொலிஸ் மா அதிபரை வரவழைக்க தேவையில்லையென பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் அதனை பூஜித்த ஜயசுந்தரவுக்கு தான் அறிவித்ததாக சாட்சியாளரான ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment