Thursday, February 11, 2021

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை; ஒரு புதிய நம்பிக்கை!

 


இந்தப் பேரணியை தென் இலங்கை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கிலுள்ள ராஜபக்ஷ ஆதரவு அணிகள், தங்களின் எதிர்கால இருப்பினை அசைக்கும் ஒன்றாக உணர்கின்றன. அதனால் பெரும் பரப்புரைகளை பேரணிக்கு எதிராக இன்று வரை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பிரதேசவாதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு உள்ளிட்ட விடயங்களை பிரதானப்படுத்தி, பேரணியை மலினப்படுத்திவிட அந்தத் தரப்புக்கள் முயல்கின்றன. அதற்கான சாட்சிகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.


நீண்ட நாட்களுக்குப் பின்னர், தமிழ்த் தேசியத் தரப்புக்கள் எல்லாமும் ஒரு போராட்டத்தினை நோக்கி திரண்டன; அல்லது திரளும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்றால், அது பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான இந்தப் பேரணியை நோக்கித்தான் என்று சொல்ல முடியும். தமிழ்த் தேசியத் தரப்புக்கள் அனைத்தினதும் ஒரே இலக்கு, 'தமிழின உரிமை மீட்பும்' நீதிக் கோரிக்கையும்'தான். இதனை அடைவது சார்ந்து ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொரு பாதையைக் கொண்டிருப்பதாக சொல்கின்றன. ஆனால், அந்தப் பாதைகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததுதான். எந்தவொரு தமிழ்த் தேசியத் தரப்பும், பாரிய முரண்பாடுள்ள பாதையை கொண்டிருக்கவில்லை. கிட்டத்தட்ட 90 வீதமான எண்ணப்பாடுகளும், அதுசார் போக்கும் ஒரே மாதிரியானதுதான். மீதியுள்ள 10 வீதமான விடயம், கட்சி அரசியல், தேர்தல் வெற்றி தோல்வி, பூகோள அணுகுமுறை, எதிர்காலத்தை கணித்தல் உள்ளிட்ட விடயங்கள் சார்ந்து மாறுபடுகின்றன.



இதனால், தமிழ்த் தேசிய அடிப்படையும், கொள்கைசார் நிலைப்பாடுகளும் பெரியளவில் மாறுவதில்லை. அல்லது மாற்றுவதற்கு யாராவது முயற்சித்தாலும் அதன் பாரம்பரியம் அதனை அனுமதிப்பதில்லை. தமிழ்த் தேசிய அடிப்படையும், அதுசார் போராட்டமும் ஒரே நாளில் தோற்றம் பெற்ற ஒன்றல்ல. அது பௌத்த சிங்கள பேரினவாத சிந்தனைகளுக்கு எதிராக முளைத்த ஒன்றுஇ அது கடந்த 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக தமிழ் மக்களிடம் கடத்தப்பட்டு வந்திருக்கின்றது. அதுவொரு வாழ்கை நெறியாக மாறிவிட்டது. அதனால்தான், தமிழ்த் தேசியம் என்பது ஒரு பாரம்பரியமாக தமிழ் மக்களிடம் மாறிவிட்டது. தாயகத்திலும் தாயகத்தோடு தொடர்பில் இருக்கின்ற எந்தத் தேசத்திலும் அந்தப் பாரம்பரியத்தின் வேர்களும் விழுதுகளும் நீண்டிருக்கின்றன. அப்படியான நிலையில், ஒரு பாரம்பரிய அரசியல் வடிவத்துக்கு மாற்றாக அல்லது எதிராக புதிய அரசியல் வடிவமோ, அதுசார் சிந்தனையோ தமிழ் மக்களிடம் எழுச்சி பெறுவதற்கு வாய்ப்பில்லை.



கடந்த பொதுத் தேர்தலில் ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புக்கள் வடக்கு – கிழக்கில் கணிசமான வெற்றியைப் பெற்றன. 'பிரபாகரன் மண்ணை வென்றுவிட்டோம்' என்று கொக்கரிக்கும் அளவுக்கு ராஜபக்ஷ ஆதரவுத் தரப்புக்களுக்கு அந்த வெற்றி தெம்பை அளித்தது. தமிழ்த் தேசியக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்து நின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாற்று சக்திகளாக தங்களை முன்னிறுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளினாலும் கூட யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தாண்டி வெற்றிபெற முடியவில்லை. யாழ்ப்பாணத்துக்கு வெளியே, அவர்களால் சில ஆயிரம் வாக்குகளை மாத்திரமே பெற முடிந்தது. ஆனால், அந்தப் பகுதிகளில் கூட்டமைப்புக்கு அடுத்த நிலைகளில் ராஜபக்ஷ ஆதரவுக் கட்சிகள் வந்து நின்றன. அதுவும் அம்பாறையில், கருணா அம்மான் சுயேட்சையாக நின்று கூட்டமைப்பினைத் தாண்டி வாக்குகளைப் பெற்றார். அதனால், அங்கு தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது.

இந்தப் பின்னணியில்தான், தமிழ்த் தேசிய அரசியல் என்கிற பாரம்பரியத்தின் மீதான அச்சுறுத்தல் உணரப்பட்டது. தமக்குள் முரண்பட்டுக் கொண்டாலும் தமிழ்த் தேசிய அரசியலை மக்களிடம் பேணுவது என்பது தவிர்க்க முடியாதது என்கிற கடப்பாடு, தமிழ்த் தேசிய கட்சிகளுக்கும் அதன் இணக்க தரப்புக்களுக்கும் ஏற்பட்டன. அதுதான், பொது வேலைத் திட்டங்களில் கீழ் இணங்கி வேலை செய்யவும் வைத்தன. அதன் ஆரம்பமாக ஜெனீவா அமர்வுகள் தொடர்பிலான பொது ஆவணம், அனைத்து தமிழ்த் தேசியக் கட்சிகள், தரப்புக்களின் இணக்கத்தோடு வெளிவந்தது. அதன் அடுத்த கட்டமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி அமைந்திருக்கின்றது.



இந்தப் பேரணியை தென் இலங்கை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கின்றது. அதேவேளை, வடக்கு – கிழக்கிலுள்ள ராஜபக்ஷ ஆதரவு அணிகள், தங்களின் எதிர்கால இருப்பினை அசைக்கும் ஒன்றாக உணர்கின்றன. அதனால் பெரும் பரப்புரைகளை பேரணிக்கு எதிராக இன்று வரை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, பிரதேசவாதம், முஸ்லிம்கள் மீதான காழ்ப்பு உள்ளிட்ட விடயங்களை பிரதானப்படுத்தி, பேரணியை மலினப்படுத்திவிட அந்தத் தரப்புக்கள் முயல்கின்றன. அதற்கான சாட்சிகள் சமூக ஊடகங்களில் கொட்டிக் கிடக்கின்றன.



பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியை 'கரும்புலிகள் பேரணி, வெளிநாட்டுப் புலிகளின் காசில் முளைத்த பேரணி, சுமந்திரனின் புலிப்படலம், கூட்டமைப்பின் சதி..' இப்படி பல்வேறுபட்ட பெயர்களைக் கொண்டு தென் இலங்கை அரசியல்வாதிகளும், ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. ஜனநாயக வழிப் போராட்டமொன்றை நோக்கி தமிழ் – முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைவதை தென் இலங்கையினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பல தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகளைக் காட்டிலும், சிங்கள ஊடகவியலாளர்கள் (என்கிற போர்வையில்) பலரும் இனவாதத்தைக் கக்கிக் கொண்டிருக்கிறார்கள். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில் முன்வைக்கப்பட்ட பத்துக் கோரிக்கைகளில் ஒன்றுகூட இலங்கையின் எந்தத் தரப்புக்கும் அச்சுறுத்தலானது அல்ல. மாறாக, அனைத்து மக்களையும் சமமாக நோக்குமாறும், பறிக்கப்படுகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உரிமைகளை மீள வழங்குமாறும், ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு நீதி வழங்குமாறும் கோருவதாகும். அந்தக் கோரிக்கைகளில் தென் இலங்கை அரசியல்வாதிகளும், ஊடகங்களும், அவர்களின் ஏவல் தரப்புக்களும் சொல்வது மாதிரியாக இலங்கையின் இறையாண்மைக்கோ, ஒற்றுமைக்கோ அச்சுறுத்தலான விடயங்கள் ஏதுமில்லை.



ஆயிரக்கணக்கானோரைக் கூட்டி சுதந்திர தினம் உள்ளிட்ட அரச நிகழ்வுகளை நடத்துவதற்கும், அரசியல் நிகழ்வுகளை நடத்துவதற்கும் 'கொவிட்- 19' காலத்து விதிகளின் கீழ், தென் இலங்கையில் எந்தவித தடையும் இல்லை. ஆனால், அந்த விதிகளின் கீழ், வடக்கு –கிழக்கில் ஜனநாயகப் போராட்டங்களை நடத்துவதற்கும், நினைவேந்தலை நடத்துவதற்கும் தடை விதிக்கப்படும் என்றால், அதனை கேள்விக்குள்ளாக்க வேண்டும். அப்படியான விடயத்தை சுமந்திரனோ, சாணக்கியனோ, கஜேந்திரகுமாரோ அல்லது யாரோ ஒரு அரசியல்வாதி செய்தால், அதனை நாட்டின் ஒருங்கிணைவுக்கே அச்சுறுத்தலான ஒன்றாக முன்னிறுத்தி பேசுவதற்கு தென் இலங்கை தயாராக இருக்கின்றது. சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட விசேட அதிரடிப்படைப் பாதுகாப்பினை மீளப்பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் தோன்றி பெரிய சாதனையாக சொல்லும் அளவுக்கு, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, ஆட்சியாளர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணியிருக்கின்றது.



உரிமைப் போராட்டங்கள் எந்தவொரு மக்கள் கூட்டத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்பட வேண்டியதில்லை. மாறாக, அதிகாரங்களைப் பறிக்கின்றஇ அத்துமீறுகின்ற தரப்புக்களுக்கு எதிராகவே முன்னெடுக்கப்பட வேண்டியது. தமிழ்த் தேசியப் போராட்டமும், அதன் வழியாகவே பயணித்திருக்கின்றது. அதுவும், சகோதர இனங்களுடனான முரண்பாடுகளை முடித்துக் கொண்டு, அடுத்த கட்டப் பயணங்களைக் குறித்து அக்கறை கொண்டிருக்கின்றது. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியில், முஸ்லிம் மக்களின் பங்களிப்பு என்பது கணிசமானது. கடந்த முப்பது ஆண்டுகளில் இப்போதுதான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கின்றது. அந்த அற்புதத்தின் உண்மையை, அதன் உண்மையான வடிவங்களினூடாக சிங்கள மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும்.



நியாயமான போராட்ட வடிவங்கள் மீது புலிச்சாயம் பூசுவது தென் இலங்கை அரசியல்வாதிகளுக்கும், ஊடகங்களுக்கும் வழக்கமான பணி. ஆனால், அதனைத் தாண்டி சிங்கள மக்களோடு பேசும் அளவுக்கான கட்டங்களை நோக்கி தமிழ்த் தேசிய அரசியலும், அதன் சக்திகளும் பயணிக்க வேண்டும். மற்றவர்களை திருப்திப்படுத்துவது போராட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், போராட்டம் குறித்த தெளிவை வழங்க வேண்டியது போராட்டக்காரர்களின் கடமை. அதுதான், போராட்டத்தின் அடர்த்தியை, நியாயப்பாடுகளை பேணுவதற்கு உதவும்.



பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணி, தமிழ்த் தேசியத் தரப்புக்களை ஒரே புள்ளியில் திரட்டியமை, ஜனநாயகப் போராட்டங்கள் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியமை, முஸ்லிம் மக்களை போராட்டத்தின் பங்காளிகள் ஆக்கியமை என்று பல்வேறு முன்மாதிரிகளைக் காட்டியிருக்கின்றது. அதுபோல, பேரணியின் முடிவிடச் சர்ச்சை, ஏற்பாட்டுக்குழுவுக்குள் காணப்பட்ட சலசலப்புக்கள் என்று குறைபாடுகளும் வெளிப்பட்டன. ஆனால், அந்தக் குறைபாடுகளைத் தாண்டி நின்று நம்பிக்கை கொள்ளும் அளவுக்கான செய்தியை பொத்துவில் முதல் பொலிகண்டி வரையில் நடந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சொல்லியிருக்கிறார்கள். அது பெரிய வெற்றியே!



 இந்தக் கட்டுரையை எழுதிய சுயாதீன ஊடகவியலாளர் புருஜோத்தமன் தங்கமயில்  அவர்களுக்கு நன்றிகள் உரித்தாகுக.

படங்கள் : ஊடகவியலாளர்கள் குமணன்,  ஸ்டாலின், தமிழ் மதி மற்றும் டுவிட்டரில் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகள் 

=======================================================================





=========================================================================

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணி ஆரம்பத்த தொடக்கத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தன்று ( 04.02.2021) பிரசுரமான புருஜோத்தமனின் கட்டுரை 


---------------------------------------------------------xxxx--------------------------------------------------------

சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளில் விடுதலைக்காக திரள்தல்!


இலங்கையின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. முதல் ஒன்றிரண்டு சுதந்திர தினங்களுக்குப் பின்னரான அனைத்து சுதந்திர தினங்களும், அதுசார் நிகழ்ச்சிகளும் ‘ஒரே இனம், ஒரே மதம், ஒரே தேசியம்’ என்கிற பௌத்த சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலின் போக்கிலேயே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நாட்டிலுள்ள தமிழர்கள், முஸ்லிம்கள் உள்ளிட்ட இன, மத சிறுபான்மை சமூகங்கள் இலங்கையின் சுதந்திர தினங்களோடு தங்களைப் பொருத்திப் பார்ப்பதற்கான கட்டங்கள் நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. சுதந்திரம் என்கிற சொல்லின் அர்த்தமும் அதுசார் ஆன்மாவும் இலங்கையிலுள்ள சிறுபான்மைச் சமூகங்களிடமிருந்து தென் இலங்கையால் பறிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மட்டுமல்ல, பௌத்தர்கள் அல்லாத சிங்களவர்களின் நிலையும் இன்றைக்கு கிட்டத்தட்ட அதுதான். இந்த நாட்டில் சுதந்திரத்தினை உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நீங்கள், பௌத்த சிங்களவர்களாக வேண்டும். பௌத்தத்தை முன்னிறுத்தியதே இந்த நாட்டின் ஆட்சியும், அரசியலும், அதுசார் உரிமைகளும்.



இலங்கையின் மேற்குக் கரைகளில், குறிப்பாக புத்தளம் தொடங்கி நீர்கொழும்பு வரை வாழ்ந்த தமிழ் மக்களின் தொண்ணூறு வீதமானவர்கள் சிங்களவர்களாக கரைந்துவிட்டார்கள். அவர்களின் பட்டானும் முப்பாட்டனும் தமிழர்களாக, கத்தோலிக்கர்களாக வாழ்ந்த வாழ்க்கை மறக்கப்பட்டுவிட்டது. தனிச் சிங்களவர்களுக்கான அடையாளங்களுக்காக பாரம்பரிய மொழியை மாத்திரமல்ல, தாங்கள் சார்ந்திருந்த கத்தோலிக்க மதத்தையும் விட்டு விலகுவதற்கு அந்த மக்கள் தயாராகிவிட்டார்கள். தென் இலங்கையின் பல தமிழ், முஸ்லிம் கிராமங்கள் இப்படி தனிச் சிங்களக் கிராமங்களாக கடந்த 70 ஆண்டுகளில் மாறியிருக்கின்றன; மாற்றப்பட்டிருக்கின்றன. அப்படியான நிலையொன்றுக்கு செல்வதைத்தான் தென் இலங்கையின் ஆட்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். அதற்கு எதிராக சிறு புல்லாக எழுந்து நின்றாலும், அதனை புல்டோசர் கொண்டு அழிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். இவ்வாறான மனநிலையில் நின்று கொண்டுதான், சுதந்திரம் பற்றியும் சமாதானம் பற்றியும் போதிக்கிறார்கள்.



இலங்கை பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து விடுதலை பெற்ற காலம் முதல் தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதியான வடக்கு –கிழக்கினை நோக்கிய பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு தென் இலங்கை ஆட்சியாளர்களினால் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளங்களை அழித்து அல்லது அவற்றுக்கு பௌத்த அடையாளம் சூட்டி, அந்த நிலத்தின் பூர்வக்குடிகளான தமிழ் மக்களை சிறிய நிலப்பரப்புக்குள் சுருக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரச காணிகளில் மாத்திரமல்ல, தமிழ் மக்களின் சொந்தக் காணிகளிலும் இராணுவமும், தொல்பொருள் திணைக்களமும் இணைந்து பௌத்த விகாரைகளை கட்டுகின்றன.



தென் இலங்கை சுதந்திர தினக் கொண்டாட்டங்களில் திளைத்திருக்க, வடக்கு –கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தொடர் போராட்டமொன்று இராணுவ கெடுபிடிகளுக்கு மத்தியிலும் நேற்று புதன்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.



ஏனைய சமூகங்களுக்கான சுதந்திரத்தை மறுத்தவர்கள், சுதந்திர தினத்தைக் கொண்டாட, சுதந்திரம் மறுக்கப்பட்டவர்கள், சுதந்திரத்துக்காக, விடுதலைக்காக போராடுகிறார்கள். இதுதான், இலங்கையின் ஒரே யதார்த்தம். மத, மார்க்க உரிமை தொடங்கி எந்தவித அடிப்படை உரிமையையும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு வழங்கக் கூடாது என்பதில் தென் இலங்கை குறியாக இருக்கின்றது. ஜனநாயக வழிப் போராட்டங்களை நடத்தினால்கூட நீதிமன்றத்தினூடான தடையுத்தரவு தொடங்கி புலனாய்வு அச்சுறுத்தல், இராணுவ கெடுபிடி என்று அனைத்து வகையிலான அத்துமீறல்களும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. “...நீங்கள் இறந்தவர்களை புதைக்க முடியாது, அவர்களை நினைவுகூர முடியாது, அவர்களுக்காக கண்ணீர் சிந்த முடியாது, அவர்களின் அடையாளங்களைப் பேண முடியாது...” என்ற இராணுவ சிந்தையும், தாழ்வுச் சிக்கலும் ஒருங்கே பெற்றவர்களின் மனநிலைக்கும் உத்தரவுகளுக்கும் எதிராக நின்றுதான் தமிழ் பேசும் மக்கள் போராட வேண்டியிருக்கின்றது.



அடிப்படை ஜனநாயகம் அனுமதிக்கின்ற எதனையுமே அனுமதிக்காத இராணுவ, தாழ்வுச் சிக்கலுள்ள தென் இலங்கை மனநிலைக்கு எதிராக போராடுவது என்பது அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. ஒவ்வொரு அடக்குமுறையை ஜனநாயக ரீதியான எதிர்கொண்டாலும், மீண்டும் மீண்டும் புதிய வடிவில் அடக்குமுறையை ஏவுவார்கள். அதனை எதிர்கொள்வது என்பது, ஒருசில தனி நபர்களினாலோ, கட்சிகளினாலோ, அமைப்புக்களினாலோ மாத்திரம் செய்ய முடியாது. அதற்குத்தான் ‘சமூகமாக திரள்தல்’ என்கிற விடயம் முக்கியமானது. சமூக விரோத செயற்பாடுகளுக்காக அல்லாமல், சமூக முன்னேற்றத்துக்காக அடிப்படை உரிமைக்காக சமூகமாக திரள்தல் என்பது மனித விடுதலையில் முதற்படி. கடந்த எழுபது வருடங்களாக விடுதலைக்காக, சுயநிர்ணய உரிமைக்காக போராடி வருகின்ற தமிழ் மக்கள், அந்த விடுதலைக்கான உணர்வினை எந்தவொரு காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க முடியாது. சமூகமாக திரண்டு ஜனநாயகப் போராட்டங்களை வலுப்படுத்த வேண்டும்.



இறுதி மோதல்களுக்குப் பின்னரான கடந்த பதினொரு ஆண்டுகளில், முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குள் இருந்து மீண்டெழுதல் தொடங்கி, போராட்ட வடிவத்தை மீளமைத்து அடுத்த கட்டத்தை நோக்கி செல்லுதல் வரையில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இறுதி மோதல்களுக்குப் பின்னரான நாட்களில் சில அரசியல் தலைவர்களிடமும், அமைப்புக்களிடமும் பேணப்பட்ட ஜனநாயப் போராட்ட வடிவம், 2015 ஆட்சி மாற்றத்தோடு தமிழ் மக்களிடம் பெருமளவு கடத்தப்பட்டிருக்கின்றது. சமூகமாக திரள்வது பற்றிய நம்பிக்கைகள் ஏற்படுத்தப்பட்டது. அதுதான், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம், காணி விடுவிப்புக்கான போராட்டம் என்பன ஆயிரம் நாட்களைத் தாண்டி நீள்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தியது. எழுக தமிழ் போன்ற பேரெழுச்சிப் போராட்டங்களை கட்டமைத்தது. இப்போது, மீண்டும் 2015க்கு முந்தைய நிலைமை. ஆனால், அதனை ஜனநாயக வழியில் எதிர்கொள்வதற்கான தைரியம் சமூகமாக திரள்வதினூடாக தமிழ் மக்களிடம் ஏற்பட்டிருக்கின்றது. அது, எவ்வகையிலான தடைகள் வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் திடத்தினைக் கொடுத்திருக்கின்றது. தொடர்ச்சியாக போராடும் ஒரு சமூகத்துக்கு அது மிகவும் அவசியமானது.



பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையிலான தமிழ் மக்களின் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு எதிரான நீதிமன்ற தடை உத்தரவுகளை சமூக ஒருங்கிணைவு மற்றும் திரட்சி ஊடாக வலிதற்றதாக்கலாம். அரசியல் தலைவர்களையும், ஊடகவியலாளர்களையும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் போராட்டங்களில் பங்குபற்ற தடை விதிக்கும் உத்தரவுகளை நீதிமன்றங்களினூடாக பொலிஸார் பெற்றுவருகிறார்கள். அது, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடங்கி, ஜனநாயகப் போராட்டங்கள் எதுவானாலும் அவற்றை முடக்குவதற்காக கடைபிடிக்கப்படுகின்றது. இவ்வாறான அடக்குமுறைக் கட்டங்களை, கட்சிகள், அமைப்புக்களின் ஒருங்கிணைவினாலும் மக்களின் சமூகத் திரள்வினாலும்தான் கடக்க முடியும்.



நேற்று பொத்துவிலில் ஆரம்பித்த கவனயீர்ப்புப் போராட்டத்தை பொலிகண்டியில் முடிக்கும் வரையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் புதிய புதிய வழியில் தென் இலங்கை தமிழ் மக்களின் போராட்டத்தை முடக்க முனையும். அதனை, சட்டப் போராட்டத்தை நடத்தியும், ஜனநாயக வழியில் புதிய யுத்திகளைக் கண்டடைந்தும் கடக்க வேண்டும். அதுதான், தொடர் அடக்குமுறையாளர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக அடக்குமுறைக்குள் உள்ளாகிவரும் தமிழ் மக்கள் செய்ய வேண்டியது. பொத்துவில் தொடங்கிய போராட்டம் பொலிகண்டியோடு நின்றுவிடாமல், சர்வதேசம் வரையில் தொட வேண்டும். அது, பறிக்கப்பட்ட தமிழ் மக்களின் சுதந்திரத்தை மீட்டெடுக்கும் அளவுக்கான விடய ஞானம், தெளிவு, திட்டமிடல், ஒருங்கிணைவோடு நிகழ வேண்டும். தனது சுதந்திரம் பறிக்கப்பட்ட ஒரு சமூகம் அதே நாளில் அதற்கான சபதத்தை ஏற்பதைத்தவிர வேறு தெரிவுகள் இருக்க முடியாது. தமிழ் மக்களின் முன்னால் உள்ளதும் அந்தத் தெரிவு மாத்திரமே.

 



No comments:

Post a Comment