Thursday, August 13, 2020

சொத்து விபரங்களை கையளிக்காத வேட்பாளர்களுக்கு கடும் எச்சரிக்கை

 

பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியுற்றவர்களில் இதுவரை தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை அறிவிக்காத வேட்பாளர்களின் பெயர் பட்டியலை இலஞ்ச,  ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கையளிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். 

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 7,452பேர் போட்டியிட்டனர். அவர்களில் அதிகமானவர்கள் தங்கள் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை என்றே தெரிவிக்கப்படுகின்றது. அவ்வாறு தங்கள் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை சமர்ப்பிக்காதவர்களின் பெயர்பட்டியலை பெற்றுக்கொள்வதற்காக, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விண்ணப்பித்திருக்கின்றோம்.


அதற்கான பதில் கிடைத்ததும் அது தொடர்பான முறைப்பாட்டை இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் தெரிவித்து பெயர் பட்டியலை வழங்குவோம். 

அதன் பின்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் என நம்புகின்றோம்.  

அத்துடன் தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னர் தங்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.  

அதேபோன்று அமைச்சர்களாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் தங்களின் சொத்துக்கள் பொறுப்புக்கள் தொடர்பான தகவல்களை மீண்டும் ஜனாதிபதிக்கு கையளிக்கவேண்டும் என்றார். 

No comments:

Post a Comment