Monday, March 30, 2009

அரசாங்கத்திடம் அபிவிருத்திக்கு பணம் இல்லை!

ஜி எஸ் பி பிளஸ் சலுகை தற்செயலாக நிறுத்தப்பட்டாலும் கூட நிச்சயமாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியான நிலைக்குத்தள்ளும் என்று எதிர்வு கூற முடியாது என அபிவிருத்திக்கான பருத்திதுறை ஆய்வகத்தின் பிரதான ஆய்வாளர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் தெரிவிக்கின்றார்

கேசரிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இதனைத்தெரிவித்தார்

பேட்டிகண்டவர் ஆ அருண்
கேள்வி: இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை எப்படி இருக்கின்றது ?

புதில் : கடந்த இரண்டு வருடகாலமாகவே யுத்தம் மீண்டும் ஆரம்பித்ததுதொடக்கம் 2006 2007 இந்த 2008 கூட சற்று மந்தகதியில் தான் பொருளாதாரம் வளர்ச்சிகண்டுவருகின்றது சுனாமி மீள்கட்டுமானப்பணிகள் கூடுதலாக 2006ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டமையினால் அந்த ஆண்டில் ஒரளவு அதியுயர் வளர்ச்சியைக் வீதத்தைக்காணக்கூடியதாக இருந்தது 2005ம் ஆண்டில் உடனடி நிவாரண வேலைத்திட்டங்கள் தான் செயற்படுத்தப்பட்டன ஆனால் புனருத்தாபன புனரமைப்பு வேலைகள் உட்கட்டமைப்பு அபிவிருத்திவேலைகள் 2006ம் ஆண்டுதான் கூடுதலாக மேற்கொள்ளப்பட்டது இதன்காரணமாக யுத்தம் ஆரம்பித்திருந்தாலும் கூட 2006ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிவீதம் அதியுச்சக்கட்டத்தை எய்தியிருந்தது 78ம் 79ம் ஆண்டுகளுக்கு பின்பாக அதியுச்ச வளர்ச்சி வீதத்தைக்கண்டிருந்தது ஆனால் 2007ம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி குன்றியிருந்தது 2008ம் ஆண்டு முதல் ஆறுமாத காலப்பகுதியில் கூட பொருளாதார வளர்ச்சிவீதம் ஆறுசதவீதம் அதாவது கடந்தவருடத்தைவிட குன்றியதாகத்தான் காணப்படுகின்றது


கேள்வி: தற்போதைய நிலையில் இலங்கையின் பணவீக்கமானது ஆசியாக்கண்டத்தில் 2வது அதிகூடியதாக வியட்னாம் நாட்டிற்கு அடுத்த நிலையில் 24.9வீதமாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது பணவீக்கத்தை கட்டுப்படுத்துகின்ற நடவடிக்கைளை மத்தியவங்கி உரிய வகையில் செயற்படுத்துகின்றதா?


பதில் :இல்லை நிச்சயமாக பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு மத்திய வங்கிக்குத்தான் எந்தவொருநாட்டிலும் இருக்கின்றது இருந்தபோதிலும் இலங்கையை எடுத்துக்கொண்டால் குறிப்பாக தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மத்தியவங்கி ஒரு அரசியல் மயமாக்கப்பட்ட நிறுவனமாகத்தான் செயற்படுகின்றது இதன்காரணமாக அரசாங்க செலவீனங்கள் கட்டுப்படுத்தப்படாமல் வருவாய்க்கு அதிகமாக செலவிடப்பட்டுவருகின்றது இதைக்குறைப்பதற்கோ தணிப்பதற்கோ உரிய நடவடிக்கைகளை மத்தியவங்கி எடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும் இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன பொருளாதார வளர்ச்சிவீதத்தை அளவிற்கு மேல் குறைக்காமல் பார்த்துக்கொள்ளும் குறிக்கோளுடனேயே அவர்கள் கூடுதலாக செயற்படுகின்றனர் அதனால் வட்டிவீதத்தை அதிகரிக்காமல் கடந்த 18வருடங்களாக ஒரேநிலையிலேயே வைத்துக்கொண்டிருக்கின்றார்கள் இவ்வாறான காரணங்களினால் தான் பணவீக்கம் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டு வருகின்றது ஆனாலும் கடந்த இருமாதங்களாக அதாவது ஜுலை ஒகஸ்ற் மாத பணவீக்க புள்ளிவிபரங்களை எடுத்துநோக்குமிடத்து பணவீக்கம் அதிகரிக்கும் வேகம் சற்று குறைந்துகொண்டுவருவதாக தென்படுகின்றது


கேள்வி: இலங்கையில் தொடர்ச்சியாக அபிவிருத்தி இடம்பெற்று வருவதாக அரசாங்கம் கூறிவருகின்றது பொருளாதார ஆய்வாளர் என்ற வகையில் இலங்கையில் உண்மையான அபிவிருத்தி இடம்பெறுகின்றதாக கருதுகின்றீர்களா?

பதில் : எது உண்மையான அபிவிருத்தி என்று வரைவிலக்கணம் செய்வதே கடினமானது இருந்தபோதிலும் அபிவிருத்தி என்ற பாரிய வரைவிலக்கணத்தின் அடிப்படையில் எடுத்துக்கொண்டால் கடந்த இரண்டுவருடமாக போருக்கே அரசாங்கத்தினால் முக்கியமான இடம்கொடுக்கப்பட்டுவருகின்றது அதற்காக பாரிய செலவீனங்களை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது இதன்காரணமாக கல்வித்துறையிலோ சுகாதாரத்துறையிலோ மற்றும் வேறு உட்கட்டமைப்பு அபிவிருத்தித்துறைகளுக்கோ தேவையான பணவசதி அரசாங்கத்திடம் காணப்படவில்லை பொதுவாக இவ்வாறான உட்கட்டமைப்பு அபிவிருத்தி அல்லது சமூக அபிவிருத்தி துறைகளான கல்வி சுகாதாரங்களுக்கு வெளிநாட்டு உதவிகள் கிடைக்கப்பெற்றுவருகின்றன அதிலும் நாட்டின் நிலைமைகாரணமாக மனித உரிமை நிலவரம் காரணமாக சற்றுக்குன்றியதாகவே காணப்படுகின்றது இந்தக்காரணங்களினால் கடந்த 2007ம் ஆண்டும குறிப்பாக 2008ம் ஆண்டும் மொத்த அடிப்படையில் அபிவிருத்தி சற்று தளர்ச்சியடைந்த நிலையில் தான் இடம்பெற்றுவருகின்றது அதற்காக முற்றாக அது நின்றுவிடவில்லை ஒரளவிற்கு சில சில உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்கள் சீனா இந்தியாபோன்ற நாடுகளின் உதவிகளுடன் முன்னெடுக்கப்பட்டுத்தான் வருகின்றன இருந்தாலும் மேற்கத்திய நாடுகளின் உதவிகள் குன்றிவருவதால் சற்றுமந்தகதியில் தான் இவ்வாறான அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன அரசாங்கத்தின் தற்போதைய முன்னுரிமையாக யுத்தமே இருக்கின்றது

கேள்வி: அபிவிருத்தியை காவுகொடுக்காது யுத்தத்தை முன்னெடுக்கும் கொள்கைக்கு ஏதேனும் வரையறைகள் உள்ளதா ? எந்தக்கட்டத்திலாவது இவை இரண்டையும் ஒருங்கே முன்னெடுத்துச்செல்லமுடியாத ஒருகட்டம் ஏற்படச்சாத்தியம் இருக்கின்றதா?

பதில் : அந்தச்சாத்தியக்கூறு இற்றைவரைக்கும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும் யுத்தம் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் கூட நிலைமை 2000ம் ஆண்டு 2001ம் ஆண்டு போன்றொரு மோசமான நிலையை இற்றைவரைக்கும் அடையவில்லை என்றுதான் கூறவேண்டும் அதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன 2000ம் 2001ம் ஆண்டு பொருளாதார பிரச்சனைகளுக்கு மேலாக இராணுவரீதியாக அரசாங்க படைகள் குறிப்பாக வடக்கு போர்முனையில் பலபின்வாங்கல்களை கண்டிருந்தன அந்தொரு தருவாயில் பொருளாதார மீட்சி எட்டப்படமுடியாதொரு எதிர்வாக இருந்தது ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் இராணுவசெலவீனங்கள் பன்மடங்காக அதிகரித்துள்ள போதிலும் பொருளாதார அபிவிருத்தி சற்று மந்த கதியில் இடம்பெறுகின்றபோதிலும் யுத்தமுனையில் குறிப்பாக கிழக்குமாகாணத்தை பொறுத்தவரையில் ஒரளவு நிலைமை சுமுகமடைந்துவருகின்றது வடமாகாணத்திலும் யுத்தமுனையில் அரசாங்க படைகள் முன்னேறிச்செல்வதனால் ஒரு உளவியல் ஊந்துகோல் பொருளாதாரத்திற்கு ஏற்படுத்தப்படுகின்றது இது அண்மையில் இடம்பெற்ற மாகாணசபைத்தேர்தலிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளது பொருளாதாரத்திற்கும் உளவியலுக்கும் நெருங்கிய தொடர்புண்டு முதலீட்டாளர்கள் எப்பொழுதும் ஏதாவது முதலீடு செய்யும் போது சற்று குறுகியநோக்கத்துடன் பார்ப்பதில்லை உள்ளுர்முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி வெளிநாட்டு முதலீட்டாளர்களாக இருந்தாலும் சரி நடுத்தரநீண்டகால நோக்கத்துடன் தமது முதலீடுகளை மேற்கொள்வார்கள் அந்தரீதியில் தொடர்ச்சியான இராணுவமுன்னேற்றங்கள் காரணமாக இற்றைவரைக்கும் ஒரு இக்கட்டான நிலை ஏற்படவில்லை இருந்தபொழுதிலும் இது பலவருடங்களுக்கு நீடிக்கும் நிலைகாணப்பட்டால் பொருளாதாரத்தை தக்கவைப்பது ஒருபிரச்சனைக்குரிய விடயமாகத்தான் இருக்கும்

கேள்வி இலங்கை அரசாங்கம் தனியார் நிதிநிறுவனங்களிடம் இருந்து அதிகவட்டியுடனான கடன்களை பெற்றுவருகின்றது இந்தநிலை இலங்கையின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் எனக்கருதுகின்றீர்கள் ?

பதில் இலங்கையை தற்பொழுது உலக ஸ்தாபனங்கள் ஒரு நடுத்தரவருமானமுள்ள நாடாகத்தான் கருதுகின்றன தலாவருமானத்தின் அடிப்படையிலேயே இவ்வாறு கணித்துள்ளன அந்திய உதவிகள் இரண்டு வகையானவை ஒன்று சலுகை அடிப்படையான கடன்கள் மற்றையது நன்கொடைகள் அதை திருப்பிக்கொடுக்கவேண்டிய அவசியமில்லை இலங்கை ஒரு நடுத்தரநாடாக முன்னேற்றம் அடைந்துள்ளமை காரணமாக நன்கொடைகள் வருடாவருடம் குறைந்துகொண்டுதான் வருகின்றது எனவே உலக நாடுகள் சர்வதேச ஸ்தாபனங்கள் நடுத்தரவருமானமுள்ள நாடுகளுக்கு நன்கொடைகள் பெரிதாக கொடுப்பதில்லை இதன்காரணமாக முற்றுமுழுதாக பெரும்பாலும் வெளிநாட்டு கடன்களைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றன வெளிநாட்டுக்கடன்களைப்பொறுத்தவரை சர்வதேச நிதி ஸ்தானங்கள் மூலம் கிடைக்கும் கடன்கள் அல்லது ஜப்பான் மேற்கத்தைய நாடுகள் போன்ற நாடுகள் மூலம் கிடைக்கும் கடன்கள் சலுகை அடிப்படையிலான வட்டி வீதத்தில் மிகக்குறைந்த வட்டிவீதத்தில் 2வீதத்திற்கும் குறைந்தவட்டிவீதத்தில் தான் பொதுவாக கடன்களை அளிப்பார்கள் ஆகவே அது சமாளிக்க கூடிய நிலையில்தான் இருந்தது ஆனால் இப்பொழுது கடந்த இரண்டு வருடங்களாக நாட்டின் இராணுவ அரசியல் நிலவரம் காரணமாகவும் மனித உரிமை நிலைமை காரணமாகவும் அதைவிட பொருளாதார சீர்திருத்தங்களை அரசாங்கம் மேற்கொள்ளாமை காரணமாகவும் சலுகை அடிப்படையிலான கடன்கள் குறைந்துகொண்டுதான் வருகின்றது இதன்காரணமாக மத்தியவங்கியும் அரசாங்கமும் கூடுதலாக சர்வதேச முதலீட்டாளர்களிடமிருந்து தனிப்பட்ட அடிப்படையில் கடன்களைப்பெற்றுவருகின்றார்கள் அதுமிகவும் அதிகமாக எட்டுவீதம் ஏழுவீதம் வட்டிவீதத்தில் வெளிநாட்டு பணத்தை கடன்பெற்றுவருகின்றார்கள் இதுபொருளாதாரத்தின் மீது பாரிய சுமையை ஏற்படுத்தியிருக்கின்றது இதற்கு பலகாரணங்கள் இருக்கின்றன தலா வருமானத்தில் அடிப்படையில் மட்டுமல்ல முன்புகூறியது போல பொருளாதார சீர்திருத்தமின்மை மற்றும் போர்முனைப்புக்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் இவ்வாறான பல்வேறு காரணங்களினால் தான் இந்தவொருநிலை ஏற்பட்டுள்ளது


கேள்வி உலக சந்தையை எடுத்துநோக்கினால் கடந்தசிலமாதங்களாக மசகு எண்ணெய்யின் விலைகளில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும் கடந்த சில வாரங்களாக வீழ்ச்சி காணப்படுகின்றது ஆனாலும் இலங்கையில் அண்மையில் கூட எரிவாயுவின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன இதற்கு என்ன காரணம் ?

பதில் சர்வதேச சந்தையில் விலை குறைந்திருந்தாலும் உடனடியாக உள்ளுர் விலைகளை குறைக்கமுடியாத நிலவரம் இருக்கலாம் ஏனெனில் உதாரணத்திற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை எடுத்துக்கொண்டால் மாதாமாதம் பெற்றோலியப்பொருட்களை இறக்குமதி செய்வதில்லை சிலவேளைகளில் இரண்டுமாதத்திற்கு ஒருமுறை மூன்று மாதத்திற்கு ஒருமுறை செய்வதுண்டு ஆகவே பழைய இருப்புக்கள் இருந்தால் அதைவிற்கும் வரை நடைமுறையில் குறைக்கமுடியாத ஒரு சூழ்நிலை இருக்கும் இரண்டாவதாக பெற்றோலியக்கூட்டுத்தாபனம் கடந்த பல வருடங்களாக மில்லியன் கணக்கான நஷ்டத்தில் இருக்கின்றது ஆகவே அரசாங்கத்தினால் அதனை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளமுடியாத நிலை உள்ளது ஆகவே கடந்த பத்துபதினைந்து இருபது வருடங்களாக ஏற்பட்ட நட்டங்களை ஈடுசெய்யும் முகமாக உலகசந்தையில் விலைகுறைந்தாலும் சிலவருடங்களுக்கு அல்லது சில காலங்களுக்கு உலகசந்தையில் விலை குறைந்தாலும் இங்கு குறைக்க முடியாத ஒரு நிலைமையில் தான் அரசாங்கம் இருக்கின்றது

கேள்வி: ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கிவருகின்ற ஜி எஸ்பி பிளஸ் வரிச்சலுகைகள் இம்முறை புதுப்பிக்கப்படுவது தொடர்பில் நிச்சயமற்ற நிலைகாணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஒருவேளை புதுப்பிக்கப்படாதுபோனால் இலங்கையின் பொருளாதாரத்தில் அது எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் ?

பதில் பல்வேறு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன உண்மையில் ஜி எஸ்பி பிளஸ் திட்டத்தின் மூலம் இலங்கை கடந்த மூன்று வருடங்களாக பலனடைந்துவந்துள்ளது அதற்கு முன்னர் சாதாரண ஜி எஸ் பி திட்டத்தின் கீழ் கூட 2003ம் ஆண்டிலிருந்து பலனடைந்துகொண்டுவருகின்றது ஆடை உற்பத்தியை எடுத்துக்கொண்டால் அமெரிக்காதான் எமது பிரதான சந்தையாக இருந்தது அதற்கு அடுத்தநிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இருந்தது இந்த ஜி எஸ்பி மற்றும் ஜிஎஸ்பி பிளஸ் திட்டங்களின் கீழ் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கையின் ஏற்றுமதி அதிகரித்துக்கொண்டுவந்துள்ளது அதேநேரம் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகள் குறைந்து கொண்டுவந்திருக்கின்றது இருந்தாலும் மொத்தத்தில் எடுத்துக்கொண்டால் ஜி எஸ் பி பிளஸ் சலுகை தற்செயலாக நிறுத்தப்பட்டாலும் கூட நிச்சயமாக பாரிய தாக்கத்தை ஏற்படுத்தினாலும் கூட இலங்கையின் பொருளாதாரத்தை நெருக்கடியான நிலைக்குத்தள்ளும் என்று எதிர்வு கூற முடியாது ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதிகள் இதனால் சற்றுக்குறையலாம் இருந்தாலும் மாற்று சந்தைகள் குறிப்பாக அமெரிக்கா போன்ற சந்தைகளில் அதை ஈடுசெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன இருந்தபோதிலும் இந்தவருடம் சிலவேளை அடுத்த வருடம் அமெரிக்க பொருளாதாரம் தளர்ச்சியடைந்துகொண்டுவருகின்றது இந்ததறுவாயில் அமெரிக்காவிற்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பது அரிதாகத்தான் இருக்கின்றன இவ்வாறான பல்வேறு காரணங்களினால் தற்செயலாக இந்தவருட இறுதியில் ஜி எஸ்பி பிளஸ் சலுகை நிறுத்தப்பட்டால் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகள் சற்று கடினமாகத்தான் இருக்கும் அதைக்கூடதற்போதையநிலையில் உறுதியாகக் கூறமுடியாது அமெரிக்காவில் இவ்வருட இறுதியில் ஜனாதிபதித்தேர்தல் இடம்பெறுகின்றது இதன்மூலம் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டால் அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சியடையக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன ஆகவே தற்போதைய நிலையில் இது தொடர்பாக உறுதியாகக்கூறமுடியாது

No comments:

Post a Comment