Sunday, December 13, 2020

கொரோனா காலத்தில் ட்ரோன்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புக்கள்

 



கொவிட்-19 தொற்றுநோயின் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடும் பிரயத்தனப்படுகிறது.


தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த பல பகுதிகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன. இங்கு மக்கள் வீடுகளில் தங்கியிருக்காமல் வெளியே நடமாடுகிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக இலங்கை இராணுவத்தினரும், பொலிஸாரும் ட்ரோன் (Drone) கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
image.png

இராணுவ அதிகாரிகள் ஹெலிகொப்டரில் பறந்து பார்வையிடுவதைப் போல, ட்ரோன்கள் மூலமான தனிமைப்படுத்தல் கண்காணிப்பு (Surveillance) மேற்கொள்ளப்படுகிறது. எவ்வளவு கடுமையாக எச்சரித்தாலும் சிலர் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக அரசாங்கம் சாடுகிறது.

ட்ரோன் என்பது ஆளில்லாமல் பறக்கச் செய்யப்பட்டு தொலைதூரத்தில் இயக்கப்படும் சிறிய விமானமாகும். இதற்கு இன்னமும் சரியானதொரு தமிழ்ப்பதம் உருவாக்கப்படவல்லை என்பதால், ட்ரோன் என்பதையே பயன்படுத்தலாம். கமரா பொருத்தப்பட்ட ட்ரோனை வான்வழியாக பயணிக்க செய்து, ஒரு இடத்தை புகைப்படம் அல்லது வீடியோ படம் பிடிக்க முடியும்.



வேறு நாடுகளைப் போன்று இலங்கையிலும் இராணுவ நடவடிக்கைகளுக்காகவே ட்ரோன் கருவிகள் பயன்படுத்தப்பட்டன. சிவில் யுத்த காலத்தில் இலங்கை இராணுவம் வேவுபார்ப்பதற்காக உபயோகித்த ‘கேலமா’ என்ற கருவியை ஞாபகப்படுத்தலாம். வேவு பார்ப்பதற்காக மாத்திரமன்றி, தூரத்தில் இருந்து ஓர் இலக்கைத் தாக்குவதற்கு ஆயுதங்களை காவிச் செல்லக்கூடிய ட்ரோன்களும் உலகில் உள்ளன.

மக்களைக் கண்காணிப்பதற்காக ட்ரோன்களைப் பாவித்தல், இந்தத் தொழில்நுட்பத்தின் சர்ச்சைக்குரிய பயன்பாடாக அமைந்துள்ளது. இது 2020 பெருந்தொற்றுக் காலத்தில் பல நாடுகளில் காணக்கூடிய தீவிர போக்காக மாறியுள்ளது.

ட்ரோன்கள் மூலம் அதிக காட்சிச் செறிவு (Image Resolution) புகைப்படங்களையும், வீடியோ படங்களையும் எடுக்க முடியும் என்பதால், ட்ரோன்கள் மக்களின் தனிப்பட்ட வாழ்க்கையை ஊடுருவுவதாகக் கூட அமையலாம்.


ட்ரோன் கண்காணிப்பின் மூலம் இலங்கை மக்களின் அந்தரங்கம் அச்சுறுத்தலுக்கு இலக்காகலாம் என சமூக செயற்பாட்டாளர்களும், ஆய்வாளர்களும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

கொவிட்-19 இற்கு எதிராக ட்ரோன் கண்காணிப்பு ஆரம்பிக்கப்பட்டமை பற்றி தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கப்பட்ட காட்சிகளை அவதானிக்கையில்இராணுவம் பயன்படுத்தும் சில ட்ரோன்களில் Zenmuse H20 என்ற கமரா பொருத்தப்பட்டுள்ளமை தெரிகிறது. இதன்மூலம் தட்பவெப்ப்ப படங்களை (Thermal Imaging) பிடிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால்இரவிலும் மனித நடமாட்டங்களையும்வேறு அசைவுகளையும் கமராவுக்குள் சிறைப்படுத்தலாம் என பிரபல ஆய்வாளர் சஞ்சன ஹத்தொட்டுவ,  சுட்டிக்காட்டினார்.  

image.png

சஞ்சன ஹத்தொட்டுவ நியூசிலாந்தின் ஒட்டாகோ பல்கலைக்கழகத்தில் முதுமாணி பட்டத்திற்காக ஆய்வு செய்து வருகிறார். அவர் இவ்வாறு கூறுகிறார்: “சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் விதிமுறைகளுக்கு கட்டுப்படும் தேவை இராணுவத்திற்கு கிடையாது (ஏனைய ட்ரோன் உரிமையாளர்களைப் போன்று). அதிகாரசபையின் அனுமதியை இராணுவம் பெறத் தேவையில்லை. ட்ரோன் கருவியை செலுத்துபவரின் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் அதனை அனுப்பவோஇருளில் செலுத்தவோ முடியாது என்ற வகையில் அதிகாரசபை விதித்த கட்டுப்பாடுகள் இராணுவத்திற்கு ஏற்புடையவை அல்லவென்பதால்பிரஜைகள் மீதான கண்காணிப்பு எந்தளவு பரந்தது என்பதை நினைத்துப் பார்க்க முடியாது.”  

ஒரு சமூகத்தில் இரவு பகல் பாராமல் எந்நேரமும் திறந்தவெளியிலும் வீடுகளுக்கு உள்ளேயும் தாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு பிரஜைகளுக்கு ஏற்படுகையில், அவர்களின் நடத்தையில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உளவியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். குறிப்பாக, இத்தகைய கண்காணிப்பு மூலம் இனரீதியான, மதரீதியான சிறுபான்மையினர் மத்தியில் நிலவும் பாதுகாப்பற்ற உணர்வைத் தீவிரப்படுத்தலாம்.  

எதேச்சாதிகார ஆட்சி நிலவும் சீனா போன்ற நாடுகளில், ட்ரோன்கள் முதலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்களின் சகல செயற்பாடுகளையும் கண்காணித்தல் என்பது பாரிய மனித உரிமை மீறலாகும். எனினும், இந்நாடுகளின் அரசுகள் இது பாதகமானது என்பதை ஏற்றுக்கொள்வதில்லை.

சீனாவில் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த ட்ரோன் கருவிகளில் முகத்தை அடையாளம் காணும் (Facial Recognition) தொழில்நுட்பம் சேரும்போது, குறித்தவொரு இடத்தில் குறித்த செயலில் ஈடுபடும் நபரின் அடையாளத்தை இலகுவாக அறியக்கூடிய ஆற்றல் அதிகாரிகளுக்கு கிடைக்கிறது.

சிவில் சுதந்திரத்தைப் பெரிதும் மதிக்கும் பிரான்ஸ் தேசத்தின் பாரிஸ் மேல் நீதிமன்றம் பொலிஸார் ட்ரோன் கருவிகளைப் பயன்படுத்தி மக்களைக் கண்காணிப்பதை 2020ஆம் ஆண்டு மே மாதம் தடை செய்தது.

பொதுவெளியில் நிற்கும் தனிமனிதர்களை முகத்தை அடையாளம் காணக்கூடிய அளவிற்கு ட்ரோன்களை தாழப் பறக்கவிட்டு புகைப்படம் அல்லது வீடியோ படம் எடுப்பதானதுஅவர்களின் அந்தரங்கத்தை ஊடுருவுதலாகும் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்தத் தொழில்நுட்பத்தை பொதுமக்களைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்துவதற்கு முன்னதாக அந்தரங்கத்தைப் பாதுகாக்கக்கூடிய சட்டதிட்டங்களை திருத்துங்கள். இல்லாவிட்டால்குறைந்தபட்சம் அத்துமீறிய படப்பிடிப்பிற்குள் சிக்கும் நபர்களின் தனிப்பட்ட அடையாளத்தை இனங்காண முடியாதவாறான தொழில்நுட்பக் கட்டுப்பாடுகளை கட்டாயப்படுத்துங்கள் என்று பாரிஸ் நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டது.

இதற்கு சில வாரங்கள் முன்னதாக, அமெரிக்காவின் கனெக்ரிகட் மாநிலத்திலும், இதே மாதிரியான சம்பவம் நிகழ்ந்தது. பெருந்தொற்று தீவிரமாக பரவிய சமயத்தில், வெஸ்ட்போர்ட் நகரில் மக்கள் ஆள்-இடைவெளி பேணுகிறார்களா என்பதைக் கண்காணிப்பதற்கு பொலிஸார் ட்ரோன்களைப் பயன்படுத்த திட்டமிட்டனர்.



எனினும், அமெரிக்காவின் சிவில் சுதந்திர சங்கத்தின் (ACLU) கடும் எதிர்ப்பிற்கு மத்தியில், இந்தத் திட்டத்தை பொலிஸார் முடக்கிக் கொண்டார்கள். இவ்வாறு செய்யாதிருந்தால், நீதிமன்றம் செல்ல சிவில் செயற்பாட்டாளர்கள் தயாராக இருந்தார்கள்.

மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டு பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது சமகாலத்தில் தீவிரம் பெற்றுள்ள விவாதமாகும்.

கொவிட்-19ஐக் கட்டுப்படுத்துவதில் வெளிநாடுகள் பெற்ற அனுபவங்கள் சிலவற்றை நாம் பகிர்ந்து கொண்டுள்ளோம். ஜனநாயக வரம்புகளுக்கு உட்பட்டவாறு, இடர்காப்பு முகாமைத்துவத்தையும், பொதுச் சுகாதாரத்தையும் வலுவூட்டுவதன் மூலம் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்கு தாய்வானும், நியூசிலாந்தும் சிறந்த உதாரணங்களாகத் திகழ்கின்றன.




ட்ரோன் கமராக்களில் பதிவு செய்யப்படும் பிரஜைகளின் படங்கள், அவற்றின் ஊடாக வெளிப்படும் தனிநபர் நடத்தைகள் போன்றவற்றை பொலிஸார்/ இராணுவத்தினர் எவ்வளவு காலம் சேமித்து வைப்பார்கள்? அவற்றைக் கையாளும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது? அரசியல் பகையாளிகளும், சிவில் செயற்பாட்டாளர்களும் சென்று வந்த இடங்களையும், அவர்கள் மேற்கொண்ட தொடர்புகளையும் கண்டறிவதற்கு இந்த டிஜிட்டல் தரவுகளை முறைகேடாகப் பயன்படுத்தலாம் அல்லவா? இவை போன்ற பல கேள்விகள் எழுகின்றன

image.png

கட்டுரையை எழுதியவர் -நாலக்க குணவர்த்தன


No comments:

Post a Comment