Wednesday, December 23, 2020

அழுகையையும் கண்டுகொள்ளவில்லை, அடையாள எதிர்ப்புக்களையும் ,ஆர்ப்பாட்டங்களையும் கண்டுகொள்ளவில்லை. முடிவின்றி நீளும் ஜனாஸா எரிப்பு விவகாரம்

 

இன்று பொரளை கனத்தை மயானத்தின் முன்பாக ஜனாஸா எரிப்பிற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது...


கடந்த 8 மாத காலங்களாக விடுத்துவரும் நூற்றுக்கணக்கான பணிவான வேண்டுகோள்கள் நாலா பக்கங்களிலிருந்தும் எழுகின்ற அழுகைக்குரல்கள் தாங்க முடியாவேதனையில் முன்னெடுக்கப்படும் அடையாள வெள்ளைத்துணி கட்டும் நடவடிக்கைகள் இன்று காலை பொரளை கனத்தை மயானத்திற்கு முன்பாக நடைபெற்றது போன்ற அமைதிவழியிலான ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களை தகனம் செய்கின்ற ( எரிக்கின்ற) இலங்கை அரசாக்ங்கத்தின் செயற்பாடு கடும் போக்கோடு  முன்னெடுக்கப்படுகின்றநிலையில்  நீதியின் மீது நம்பிக்கை கொண்ட மக்களை அதிலும் அதீதி மார்க்கப்பற்றுள்ள முஸ்லிம் மக்களை அதிக விரக்தியிலும் கடுமையான வேதனையையிலும் தள்ளிவிட்டுள்ளது. 

ஜனாஸாக்களின் உரிமையாளர்களின் விருப்புக்கள் இல்லாமல் பெரும் வெறுப்புக்களுக்கு மத்தியில் பலவந்தமாக எரிக்கப்படுகின்றன. இன்று 24 மணிநேரமும் உலகில் ஒவ்வொரு மூலைமுடுக்குகளிலும் இலங்கை அரசாங்கத்தின் பலவந்த கொள்கைக்கு எதிர்ப்பு கணைகள் ஓங்கி வருகின்றது. இது நாளாந்தம் பலதரப்பட்ட ஊடகங்கள் மூலமாக அவதானிக்க முடிகின்றது. இந்நாட்டு முஸ்லிம்கள் மீது வஞ்சம் தீர்க்கும் நோக்குடன் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு சில இனவாத சக்திகளின் மனங்களை சந்தோஷபடுத்த வேண்டுமென்ற குறுகிய நோக்கத்தோடும் செயற்படுகின்றது. தலைமைத்துவங்கள் நடந்து கொள்ளும் தப்பான போக்கினை முழு உலகமுமே கவனித்து கொண்டிருக்கிறது என என அண்மையில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்தீஹார் தெரிவித்தார். இது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு மட்டுமல்ல நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மையான முஸ்லிம்களதும் நீதியையும் உரிமைகளையும் மதிக்கின்ற மக்களது விரும்பமாகவும் உள்ளது. 



இதேவேளை முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யும் விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் அரசுக்கு எதிரான அமைதிப் போராட்டம் ஜனநாயக முறையில் நாடு தழுவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொவிட்-19 காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு எதிராக இன்று (பதன்கிழமை) காலை கொழும்பு – பொரளை பொது மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற அமைதி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் 'இந்த விவகாரம் தொடர்பாக ஆராய்வதற்கு அரசாங்கம் நியமித்திருக்கும் வைத்தியர்கள் மற்றும் நிபுணர்களைக் கொண்ட குழுவில்இ இனவாதிகளும் மதவாதிகளும்தான் அதிகமாக இருக்கின்றார்களேயொழிய, தகுதியானவர்கள் அதில் உள்வாங்கப்படவில்லை.

எனவேஇ ஒரு சமூகத்துக்கு எதிராக இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகளை இந்த அரசு முன்னெடுக்குமாக இருந்தால் அதைவிட ஒரு கீழ்த்தரமான அரசாங்கத்தை இந்த நாட்டிலே காண முடியாது.

இதேவேளை, அமெரிக்கா, கனடா,  லண்டன், பிரான்ஸ், இத்தாலி, கட்டார் போன்ற இன்னும் பல நாடுகளில் வாழும் எமது மக்கள் இந்த மோசமான செயலுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல்கொடுப்பதை நாம் பார்க்கின்றோம்.

உலக நாடுகளில் வாழும் எமது மக்கள் இவ்வளவு காலமாக இலங்கைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்திருக்கின்றனர். ஆனால் இன்று இந்த ஈனச் செயலுக்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள். எனவே இந்தச் செயலை இன்றோடு நிறுத்துங்கள்.

மேலும் ஜனாஸா எரிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகக் கூறியுள்ள போதிலும் நேற்று வியங்கல்ல பகுதியில் மோசமான முறையில் உடலங்கள் எரிக்கப்பட்டுள்ளதாக எமக்கு அறியக்கிடைத்தது.



இதற்கு முன்னிருந்த எந்த அரசும் இவ்வாறானதொரு மோசமான செயலை எமது சமூகத்திற்கு செய்யவில்லை.

ஆகையால் இந்த ஈனச் செயலை அரசாங்கம் உடன் நிறுத்தாவிட்டால் எமது சமூகம் மட்டுமல்ல உலக நாடுகளும் சர்வதேச சமூகமும் ஒருபோதும் இந்த அரசை மன்னிக்கமாட்டர்கள். இது எமது நாட்டுக்கு பேராபத்தாக அமையும்.

ஜனாஸா எரிப்பு விடயத்தில் உரிய தீர்வை இந்த அரசு தராவிட்டால் அரசுக்கு எதிராக இன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைதியான உரிமைப் போராட்டம்இ நாடு தழுவிய ரீதியில் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அத்துடன் இந்த ஈனச் செயலை சர்வதேசமயப்படுத்தி இதற்கான தக்கபாடத்தைப் புகட்டுவோம்' என மேலும் தெரிவித்தார்.



No comments:

Post a Comment