Monday, November 23, 2020

10,000 பேருக்கே போதுமான சிறைச்சாலைகளில் 26,000 சிறைக்கைதிகள்:கொரோனா அபாயத்தில் இலங்கை ?

 


கொரோனா தொற்று காரணமாக ராகமை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த 82 வயதுடைய மஹர சிறைச்சாலை கைதி  உயிரிழந்துள்ள செய்தி ஏனைய கைதிகளின் நிலை குறித்த அச்சங்களை ஏற்படுத்தியுள்ளது. 

உயிரிழந்த கைதிக்கு கொரோனா தொற்றையும் தாண்டி   புற்றுநோய்  உட்பட வியாதிகளும் இருப்பதாக தற்போது கூறப்படுகின்றது.

இலங்கையில் எங்கு கொரோனா வைரஸ் பரவினால் மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்டதோ  அங்கு முதலாவது மரணம்   பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெலிக்ககடை ரிமாண்ட் சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பதாக   ஜுலை மாதம் 7ம் திகதி பதிவானது . அதுவே சிறைக்கைதியொருவருக்கு கொரோனா தொற்று இலங்கையில் பதிவான முதலாவது சந்தர்ப்பமாகும் .தற்போது சிறைக்கைதி யொருவர் மரணமானதாக முதன்முறையாக இன்று நவம்பர் 23ம் திகதி பதிவாகியுள்ளது. இலங்கையில் கொரோனா தொற்றால் சிறைக்கைதி ஒருவர் உயிரிழந்த முதலாவது சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது. 


இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய உள்ளடக்கப்படக்கூடிய கைதிகளின் தொகையை விடவும் அதிக எண்ணிக்கையானவர்கள் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்ற நிலையில் சிறைச்சாலைகள் நெருக்கடிமிக்கதாக அமைந்துள்ளமை அடிக்கடி சுட்டிக்காட்டப்பட்டுவந்துள்ளது.

சிறைச்சாலைகள் அவற்றின் தாங்கும் திறனுக்கு மேலாக அதிக கைதிகளைத் தம்வசம் கொண்டிருப்பதால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய அச்சுறுத்தல் உள்ளதாகவும் இதன்காரணமாக சிறைச்சாலைகளிலுள்ள சிறுகுற்றங்களைப் புரிந்த கைதிகள் அடங்கலாக கணிசமான கைதிகளை விடுவித்து இடநெருக்கடியைக் குறைக்க வேண்டும் எனவும் கடந்த மார்ச் மாதத்திலே மனித உரிமைகள் ஆர்வலர்கள் சிவில் சமூக பிரதிநிதிகளை உள்ளடக்கிய கரிசனைமிக்க இலங்கைப் பிரஜைகள் கூட்டாக  அறிக்கை வெளியிட்டிருந்தனர்.

சிறைச்சாலை திணைக்களத்தில் கிடைக்கக்கூடிய பொதுத் தகவல்களுக்கு அமைவாக 2004ம் ஆண்டில் 20,661ஆக இருந்த  சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 2020ம் ஆண்டு பெப்ரவரியில் 26,403 ஆக அதிகரித்துள்ளது.

2009ம் ஆண்டில் 11,707 சிறைக்கைதிகளுக்கு மாத்திரமே சிறைச்சாலைகளில்  உத்தியோகபூர்வரீதியாக தங்குமிடம் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நாளாந்தம் சராசரியாக சிறைச்சாலைகளில் காணப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 27,823 ஆகும்.

சிறைச்சாலைகள் நிறைந்துவழிவதற்கு உட்கட்டமைப்பு வசதிகள் .மனித வளப்பற்றாக்குறை மாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் நீதிப்பொறிமுறையில் காணப்படும் குறைபாடுகளும் காரணம் என  இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால்  முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட ஆய்விற்கு தலைமைதாங்கிய முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டுகின்றார்.

ரிமாண்ட் சிறைச்சாலையில் காணப்படும் அதிகமானவர்கள் பிணை வழங்கியும் கூட அதனைச் செலுத்துவதற்கு வசதியற்றவர்களாகக் காணப்படுகின்றனர்.

இதில் ஆகக்குறைந்தபட்சம் 2000ரூபாவை பிணையாக செலுத்தமுடியாமல் சிறையில் தொடர்ந்து இருப்பவர்களும் உள்ளனர் என்பது கவலைக்கிடமானது  குஸல் மென்டிஸ் வாகனத்தைச் செலுத்தியபோது  மிதிவண்டியைச் செலுத்திய முதியவர் பலியானமை அனைவரும் அறிந்தது. ஆனால் ஒரு மில்லியன் ரூபாவை செலுத்திவிட்டு ஒரே நாளில் பிணையில் வெளியில் சென்றார் மென்டிஸ்.

2012ம் ஆண்டில் பிணைக்கான கட்டணத்தைச் செலுத்தமுடியாமல் சிறையில் இருந்தவர்களின் எண்ணிக்கை 12,045 ஆக இருந்தது. 2018ல் இந்த எண்ணிக்கை 16 ,111 ஆக மாறியது. குறித்தஆண்டுகளில் சிறையில் அடைக்கப்பட்ட மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் இது முறையே 42.4 %  மற்றும்  64.8 % ஆக இருந்தது.

 மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் உள்ளடங்கலாக அக்கறை மிக்க பிரஜைகள் கொரோனா அச்சுறுத்தலின் மத்தியில் சிறைக்கைதிகளைப்பாதுகாப்பது தொடர்பாக மார்ச்சில் எழுதிய கடிதத்தை தொடர்ந்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ சிறைக்கைதிகளில் ஒரு குறித்த எண்ணிக்கையினரை விடுவித்துள்ள போதும் அது இன்னமும் போதாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஜனாதிபதியின் சட்டத்துறைக்குப் பொறுப்பான பணிப்பாளர் ஹரிகுப்தா  ரோகணதீரவின் தகவலுக்கமைய மார்ச் 17ம்திகதி முதல் ஏப்ரல் 4ம் திகதிவரையான காலப்பகுதியில் 2,916 சிறைக்கைதிகள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தற்போதைய நிலையில் இலங்கையின் சிறைச்சாலைகளில் 10,000 கைதிகளை மாத்திரமே சுகாதார முறைப்படி உள்ளடக்குவதற்கு வசதிகள் இருந்தாலும் துரதிஷ்ட வசமாக 26,000 கைதிகள் சிறைச்சாலைகளில் அடைத்துவைக்கப்பட்டிருப்பது கொரோனா வைரஸ் போன்ற தொற்றுக்கள் விரைந்துபரவ வாய்ப்பாக அமைந்துவிடும் என்பதை மீள நினைவுறுத்த விரும்புகின்றோம்.

 

No comments:

Post a Comment