Friday, November 20, 2020

ஊடக சுதந்திரத்திற்கான முதலாவது விருதை வென்ற பெலாரஸ் ஊடக அமைப்பு ; ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையர்!


கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் இணைந்து வழங்கிய ஊடக சுதந்திரத்திற்கான முதலாவது விருதை பெலாரஸ் நாட்டின் ஊடக அமைப்பு தட்டிச் சென்ற அதேவேளை விருதுக்காக தெரிவான  ஐந்து இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக இலங்கையைச் சேர்ந்த  கலாநிதி ரங்க கலன்சூரிய தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் ஆகியோர் கனடிய-ஐக்கிய இராச்சிய ஊடக சுதந்திர விருதுக்கான முதல் ஐந்து இறுதி போட்டியாளர்களில் தெரிவு பெற்ற கலாநிதி. ரங்க கலன்சூரியவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்


இது தொடர்பாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இன்று விடுத்திருந்த அறிக்கை இதோ


உலகம் முழுவதிலும் ஊடகச் சுதந்திரத்தை முன்னிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் செயற்படும் ஊடகவியலாளர்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்காக வழங்கப்படும் பூர்வாங்க கனடிய-ஐக்கிய இராச்சிய ஊடக சுதந்திர விருதின் வெற்றியாளர்  நவம்பர் 16, 2020 அன்று, கனடாவின் வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா-பிலிப்பே ஷாம்பெயின் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது இராஜாங்கச் செயலாளரும், பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவு இராஜாங்கச் செயலாளருமான டொமினிக் ராப் ஆகியோரால் அறிவிக்கப்பட்டனர்.



உலகெங்கிலும் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட 60 விண்ணப்பங்களில் இருந்து, பெலாருசியன் ஊடகவியலாளர் அமைப்பு (பெலாரஸ்), சென்ரோ டி இன்வெஸ்டிகேசன் வை கெபாசிடேசியன் புரோபியுஸ்டா சிவிகா (மெக்சிகோ) ஊடகம் மற்றும் கலாசார சுதந்திரத்திற்கான ஸ்கேயஸ் நிலையம் (லெபானன்), கலாநிதி ரங்க கலன்சூரிய (இலங்கை) மற்றும் மேரி அஜித் கோச் (தென் சூடான்) ஆகியோர் இறுதிப் போட்டியாளர்களாக தெரிவாகியிருந்தனர். 

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு, ஊடக சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரத்தினை முன்னிறுத்துவதில் இலங்கையின் முன்னோடிகளில் ஒருவராக கலாநிதி ரங்க கலன்சூரிய அவர்கள் உள்ளார். இன்டர்நெஷனல் மீடியா சப்போர்ட் (IMS) அமைப்பில் இலங்கை, மியன்மார்,பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் கொள்கை பரப்புரை ஆய்வு மற்றும் இயலுமை கட்டியெழுப்பலினை கண்காணிக்கும் வகையில் ஆசிய பிராந்திய ஆலோசகராக தற்போது அவர் கடமையாற்றுகின்றார்.


                                                 கலாநிதி ரங்க கலன்சூரிய

கனடா மற்றும் பொட்ஸ்வானா ஆகிய நாடுகள் இணைந்து ஒழுங்கு செய்திருந்தஇ நவம்பர் 16, 2020 அன்று  நிகழ்நிலையில் இடம்பெற்ற இந்த வருடத்திற்கான ஊடக சுதந்திரத்திற்கான உலகளாவிய மாநாட்டின் போது பெலாருசியன் ஊடகவியலாளர் அமைப்பு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஐக்கிய இராச்சியத்தின், இலண்டன் நகரில் இடம்பெற்ற பூர்வாங்க அமர்வின் தொடர்ச்சியாக இந்த மாநாடு இடம்பெற்றது.

உலகம் முழுவதிலும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் சர்வதேச செயற்பாட்டுக்கான கனடிய-ஐக்கிய இராச்சிய முயற்சிகளின் ஒரு அங்கமாக ஊடக சுதந்திர விருது உருவாக்கம் பெற்றுள்ளது.  சமூகம் ஒன்றின் செயற்பாட்டிற்கும், நிலைத்திருக்கும் தன்மை, செழிப்புக்கு வழிகாட்டுவதற்கும் சுதந்திரமான, சுயாதீனமான ஊடகம் ஒரு அத்தியாவசியமான அம்சம் என ஐக்கிய இராச்சியமும், கனடாவும் உறுதியாக நம்புகின்றது. 

ஊடகவியல் நெறிமுறைகள் மற்றும் கோட்பாடுகளுக்கான தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, மற்றும் பெலாருஸில் ஊடகம் மீதான அதிகரித்த இலக்குவைக்கப்பட்ட செயற்பாடுகளின் மத்தியில் அதன் விடாமுயற்சி, சுய-அர்ப்பணிப்பு என்பன காரணமாக இந்த வருடத்தின் வெற்றியாளராக பெலாருசியன் ஊடகவியலாளர் அமைப்பு தனித்துவமாக மிளிர்ந்தது.

இந்த நிகழ்நிலை அமர்வில் கலந்து கொண்ட ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது இராஜாங்கச் செயலாளரும், பொதுநலவாய, மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான வெளியுறவு இராஜாங்கச் செயலாளருமான டொமினிக் ராப் அவர்கள் 'உலகின் எந்தப் பகுதியில் பணியாற்றினாலும், ஊடகவியலாளர்கள், பழிவாங்கப்படுதல், தணிக்கை அல்லது தண்டனை அச்சம் இன்றிஇ என்ன நடக்கின்றது என்பதனை வெளிப்படுத்துவது  வெளிச்சத்திற்கு கொண்டு வருவது மிகவும் முக்கியமாகும். ஊடக சுதந்திரத்தை காப்பவர்களின் பணியானது முன்னெப்போதும் முக்கியமானதாக இருந்ததில்லை' எனத் தெரிவித்தார்.

'ஊடக சுதந்திரம் அதிகரித்த அளவில் தாக்கத்திற்கு உள்ளாகிவரும் சந்தர்ப்பத்தில், நாட்டில் ஊடகவியலாளர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தையும்இ வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தையும் காப்பதற்கு போராடும், பெலாருசியன் ஊடகவியலாளர் அமைப்பினை நாம் பாராட்டுகின்றோம். மிகவும் முக்கியமான தருணத்தில் அடக்குமுறை மற்றும் திட்டமிட்ட தவறான தகவல்களை எதிர்ப்பதற்கு அதன் தொடர்ச்சியான முயற்சிகள் ஊடகவியலாளர்கள் மற்றும் குடிமக்களின் குரல்கள் கேட்கப்படுதலை உறுதி செய்கின்றது' கனடிய என வெளிவிவகார அமைச்சர் பிரான்சுவா-பிலிப்பே ஷாம்பெயின் தெரிவித்தார்.




No comments:

Post a Comment