Thursday, November 5, 2020

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள் : மக்கள் தம்மை பாதுகாக்கும் பொறுப்பை அலட்சிப்படுத்தக்கூடாது.



இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக மேலும் ஐந்துபேர் உயிரிழந்துள்ளனர் . அதில் மூவர் தத்தமது வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் இன்றிரவு வெளியானபோது பலருக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும். இதனையடுத்து கொரோனாவால் இலங்கையில் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்திருக்கின்றது . கடந்த சில நாட்களுக்குள்ளாக மரணித்தவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.




நிலைமை இப்படியிருந்தாலும் எதிர்வரும் திங்கட்கிழமை நவம்பர் 9ம் திகதிக்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்தும் அமுல்படுத்தும் எண்ணமில்லை என கொவிட்-19 பரவலைத்தடுக்கும் செயற்பாட்டு  மையத்தின் தலைவர் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

இதேவிதமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவும் இறுதியான தீர்வொன்று கொவிட்-19க்கு காணப்படும் வரை நாட்டை முற்றாக முடக்கிவைக்க முடியாது எனக்கூறியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இப்படிப்பார்க்கின்றபோது இனிவரும் காலத்தில் மக்களே தமது உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ளவேண்டும் என்ற செய்தி உணர்த்தப்படுகின்றது. 

இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளின் விளைவாக மக்களின் நடமாட்டம் குறிப்பிடத்தக்களவில் குறைவடைந்திருக்கின்றது. என்றாலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்படாதுள்ள பிரதேசங்களில் மக்கள் நடமாட்டத்தில் இக்கட்டுப்பாட்டைப் பெரிதாக அவதானிக்க முடியாதுள்ளது. ஏனெனில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில்தான் இத்தொற்று அச்சுறுத்தல் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் அவ்வாறான நிலைமை இல்லை என்ற மனப்பான்மை காணப்படுவதையே அவர்களது நடத்தைகளும் பொறுப்பற்ற நடமாட்டங்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.



இந்நிலையில் ஆங்காங்கே சிறுசிறு ஒன்றுகூடல்கள், சிற்றுண்டி விருந்து நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. இச்செயற்பாட்டினை இளைஞர்கள் மாத்திரமல்லாமல் குடும்பங்கள் மூன்றுஇ நான்கு என்றபடி சேர்ந்தும் வீடுகளில் மேற்கொள்கின்றன. கரம் உள்ளிட்ட சில விளையாட்டுகளிலும் ஈடுபடுகின்றனர்.

ஆனால் இத்தொற்று பரவுதல் அச்சுறுத்தல் நிலவிக் கொண்டிருக்கும் தற்போதைய சூழலில் இவை சட்டத்திற்கு முரணான ஆபத்துக்கள் நிறைந்த செயற்பாடுகள். இவ்வைரஸானது ஆளுக்காள் தொற்றிப் பரவும் கண்களுக்கு புலப்படாத ஒன்றாகும். இந்நிலையில் கூட்டமாகச் சேர்ந்த செயற்பாடுகளில் ஈடுபடுவது எவ்விதத்திலும் பாதுகாப்பானதல்ல. அவை இத்தொற்றின் பரவுதலுக்கு வாய்ப்பாக அமையும்.

தற்போதைய இத்தொற்று ஒக்டோபர் 04 ஆம் திகதி பதிவாக ஆரம்பித்து இரண்டாம் அலையாகத் திகழுகின்றது. இந்த ஒரு மாத காலப்பகுதிக்குள் சுமார் எட்டாயிரம் பேர் இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளதோடு 16 பேர் உயிரிழந்துமுள்ளனர். அத்தோடு நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் பதிவாகும் ஒரு தொற்றாகவும் மாறியுள்ளது. இத்தொற்று வியாபிப்பதற்கு மக்களின் பொறுப்பற்ற பயணங்களும் தொடர்பாடலும்தான் அடிப்படைக் காரணங்களாகியுள்ளன.

தற்போது இத்தொற்று பதிவாகும் நிலைமையை நோக்கும் போதுஇ மினுவாங்கொடை, பேலியகொடை மீன் சந்தை போன்ற கொத்தணிகள் மேலும் தோற்றம் பெறக் கூடிய அச்சுறுத்தல் உள்ளதாக சுகாதாரத் துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஏனெனில் இத்தொற்றுக்கு உள்ளான ஒருவர் பதிவாகும் பிரதேசத்தில் மேலும் பலர் பதிவாகும் நிலைமை காணப்படுகின்றது. அந்த வகையில் சுமார் 5000 - 6000 பேர் தொழில் புரியும் கொரணை ஆடைத் தொழிற்சாலையில் கடந்த ஞாயிறன்று 550 பேர் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்பட்டுத்தப்பட்டனர். அவர்களில் 34 பேர் இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது. இதேபோன்று வத்தளையிலுள்ள தொழிற்சாலையொன்றில் நடாத்தப்பட்ட பரிசோதனையிலும் இத்தொற்றுக்கு பலர் உள்ளாகியுள்ளமை தெரியவந்துள்ளது.


மேலும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் மூவர் தற்போது இத்தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இவர்களில் இருவர் கொழும்பில் கடமையாற்றுபவர்கள் என்பதோடு ஒருவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு கொழும்பு தீயணைக்கும் பிரிவில் ஆறு பேர்இ திருகோணமலை வைத்தியசாலையில் ஒரு வைத்தியர்இ மீரிகவிலுள்ள முதியோர் இல்லமொன்றில் பணியாற்றும் ஒரு ஊழியர் என்றபடி இத்தொற்றுக்கு உள்ளானவர்களாகப் பதிவாகியுள்ளனர். அத்தோடு வடக்குஇ கிழக்கு பிரதேசங்களிலும் இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் பதிவாகவே செய்கின்றனர்.



இந்த நிலையில்தான் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர்இ மினுவாங்கொடைஇ பேலியகொட மீன் சந்தை போன்ற கொத்தணி தொற்றுகள் மேலும் தோற்றம் பெறக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அவ்வாறான தொற்றுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என்றும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


அவ்வாறான நிலைமை ஏற்படுவது நாட்டில் மிகவும் பாதிப்பான நிலைமையைத் தோற்றுவிக்கும். தத்தம் பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தாவிட்டாலும் இத்தொற்று பரவுதல் அச்சுறுத்தல் இல்லை என்று அர்த்தமாகாது. இம்மனப்பான்மையிலிருந்து மக்கள் வெளியேற வேண்டும். தற்போயை சூழலில் பொறுப்புணர்வுடனும் முன்னவதானத்துடனும் நடந்து கொள்வதே இன்றியமையாததாகும்.


ஆகவே இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுததுவதற்காக ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் மாத்திரமல்லாமல் நாட்டின் அனைத்து மக்களும் இத்தொற்றைத் தவிர்ப்பதற்காக சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள வழிகாட்டல்களை உச்சளவில் பின்பற்றி நடக்க வேண்டும். இவை மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வழிகாட்டல்கள்இ அறிவுரைகள் அல்ல. மாறாக உலகிற்கே பெரும் சவாலாக விளங்கும் கொவிட் 19 தொற்றின் அச்சுறுத்தலிலிருந்து தவிர்ந்து கொள்வதற்கான ஏற்பாடாகும்.

No comments:

Post a Comment